முதல் பக்கம்

Feb 24, 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தினமணி
First Published : 24 Jul 2010 11:41:31

கம்பம், ஜூலை 23: தேசிய குழந்தைகளுக்கு நடத்தப்படும் அறிவியல் மாநாட்டிற்கு தலைப்புகளை அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. குழந்தைகளிடையே இயல்பாக உள்ள ஆய்வு மனப்பான்மையையும், படைப்புத் திறனையும் வெளிகொண்டு வரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தேசிய தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 முதல் 13 வயதுள்ள குழந்தைகளும், 14 முதல் 17 வயதுள்ள பள்ளிக் குழந்தைகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தயார் செய்யலாம். இதில் இந்தாண்டு கருப்பொருளாக நிலவளம்-வளத்திற்காகப் பயன்படுத்துவோம்,  வருங்காலத்திற்காகவும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உபதலைப்பாக, நிலத்தின் செயல்பாடுகள்,  நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும்  செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடுகள்,  நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெயர் பதிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவில் அக்டோபரிலும், மாநில அளவில் நவம்பரில் கோவையிலும், தேசிய அளவில் டிசம்பர் மாதம் சென்னையிலும் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்தவருக்கு இளம் விஞ்ஞானி விருது குடியரசு தலைவரால் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான எஸ்.சுந்தர் கூறியதாவது: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கடந்தாண்டு தேனி,
காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றனர். இந்தாண்டு அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் விதத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

தினமலர்: 24.11.2009

கம்பம்: அறிவியல் விழிப்புணர்வு திறன் அறிதல் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு திறன் அறிதல் போட்டி லட்சுமிபுரம், தேனி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் நடந்தது. தேனி மாவட்டத்தில் 300 மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். 6,7, 8 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தன.

இரண்டு மணி நேரம் நடந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்பட்டது. மாவட்ட வாரியாக நடந்த இந்த தேர்வு விடைத் தாள்கள், அடுத்த வாரம் தஞ்சையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. தேர்வு பெறும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பாக தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்காக இந்த ஆண்டு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்ல அறிவியல் இயக்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. 

“மாணவர்களின் அறிவியல் ஆற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த சுற்றுலா இருக்கும்” என தேனி மாவட்ட அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் கூறினார். 

கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு 25 லட்சம் மக்களை சந்தித்த கலைக்குழு

தினமலர்: பிப்ரவரி 10,2011

கம்பம் : கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 25 லட்சம் மக்களை இந்த கலைக்குழுக்கள் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. கல்வி உரிமை சட்டம் 2010 விழிப்புணர்வு பிரசாரத்தை அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தியுள்ளது. சென்ற ஆண்டு பிப்., 23 ல் துவங்கிய இந்த பிரசாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 140 கலைக்குழுக்கள் பங்கேற்றன. 11 ஆயிரம் இடங்களில் 25 லட்சம் மக்களை சந்தித்து இந்த பிரசாரம் நடைபெற்றுள்ளது. பிரசாரத்தின் நோக்கம், இடைநின்ற மாணவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளுதல், அரசு பள்ளிகளில் பங்களிப்பை அதிகரித்தல், 6 முதல் 14 வயது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகள் இதில் கவனம் செலுத்துதல், மாற்றுச் சான்றிதழ் இல்லையென்பதற்காக அட்மிஷன் மறுக்க கூடாது போன்ற விஷயங்களை விளக்குவதாகும்.

தேனி மாவட்டத்தில் இரண்டு கலைக்குழுக்கள் கடந்த 20 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன. இன்று கூடலூரில் நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியுடன் பிரசாரம் முடிவிற்கு வருகிறது. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. ஒரு நாளைக்கு 20 கிராமங்கள் வீதம் கலைக்குழுக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டன. ஏராளமான பொதுமக்கள் கல்வி உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்டனர். கல்வி உரிமை சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை டில்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கண்காணிக்கிறது என்றார்

Feb 23, 2011

நான் பிரகதீஸ்வரன் ஆனது எப்படி?

மூலம் : விகடன்
பாரதிதம்பி, படம்: கே.கார்த்திகேயன்

திகாரத்தை எள்ளி நகையாடும் மக்கள் கலைஞன், 'பூபாளம்’ பிரகதீஸ்வரன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக 'த.மு.எ.க.ச’-வின் கலை இரவுகளில் ஒலிக்கிறது, இவரது குரல். நடிப்பு, பாடல், எழுத்துஎனப் பல பரிமாணங்கள் கொண்டவர். கலைவாணரும் எம்.ஆர்.ராதாவும் இணைந்த கலவையாக, நடப்பு அரசியலைப் பகடி செய்யும் பிரகதீஸின் நாடக வடிவம், தமிழின் புதிய களம்!
''என் அம்மா இலங்கை மலையகத்தில் பிறந்த தமிழ்ப் பெண். அவரது சிறு வயதிலேயே அவரை யும் தூக்கிக்கொண்டு தாத்தா இங்கு வந்துவிட்டார். அப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பக்கம் இருக் கும் விளானூர் என்ற கிராமம். படித்தது அங்குதான். பங்குனி, சித்திரை மாதங்களில் எங்கள் ஊரைச் சுற்றி எக்கச்சக்கமான திரு விழாக்கள் நடக்கும். அம்மாவின் அப்பா ஓர்  ஆர்மோனிய இசைக் கலைஞர் என்பதால், எங்கு நாடகம் நடந்தாலும் என்னையும் அழைத்துப் போவார். விடிய விடியநாடகம் பார்ப்போம். என் அப்பாவும் குன்னக் குடி வைத்தியநாதன் கச்சேரி மாதிரி யான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் இசைப் பிரியர். இப்படி கலையும் இசையும் சிறு வயதிலேயே எனக்கு நிறையக் கிடைத்தது.
ப்ளஸ் டூ படிக்கும்போது, சத்தியமூர்த்தி என்கிற என் தமிழாசிரியர் தந்த உற்சாகத்தில் பேச்சு, நடிப்பு, எழுத்து என எல்லாப் போட்டிகளிலும் முதல்முறையாகக் கலந்து கொண்டேன். அனைத்திலும் எனக்குத்தான் முதல் பரிசு. பெரிய உற்சாகம். அதே ஆசிரியர், பிறகு நாடகங்களில் நடிக்கவைத்து என்னை மெருகேற்றினார். அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகப் பல ஊர் களிலும் நாடகங்கள் போடுவார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். பயிற்சி கொடுக்க பிரளயன் வந்திருந்தார். அவரால் ஈர்க்கப்பட்டு, 'இனிமேல் நாடகம்தான் வாழ்க்கை’ என முடிவு செய்தேன். அறிவொளி இயக்கம் மிகப் பெரிய களம். ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவது, பாட்டுப் பாடுவது என... பசி, தூக்கம் மறந்து சுற்றுவோம். 'அந்த நாளுல சின்ன வயசுல பள்ளிக்கூடம் நானும் போகலை, ஆத்தாவும் படிக்கலை, அப்பனும் படிக்கலை, படிப்பின் அவசியம் புரியலை... விவரம் சொல்லவும் ஆள் இல்லை, விளையாட்டா காலமும் போயிருச்சே’ என்றெல்லாம் அறிவொளியில் பாடல்கள் பாடிக்கொண்டு திரிந்த நாட்களை எந்த அறிவொளி தன்னார்வத் தொண்டனாலும் மறக்க முடியாது. இப்படிக் கிராமங்களில் நாடகம் போட்டு முடிந்ததும், துண்டு ஏந்தி மக்களிடம் வசூல் செய்வோம். அப்படி வசூல் செய்துகொண்டு இருந்த போது, எங்கள் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். 'உங்க பையன் பிச்சை எடுக்கிறான்’ என வீட்டில் அவர் சொல்ல... அடி, உதை, திட்டு. ஆனாலும், நாடக ஆசை அடங்கவில்லை.
'ஞானக் கிறுக்கன்’ என்ற எனது முதல் த.மு.எ.க.ச. மேடை அனுபவம் புதுக்கோட்டை கலை இரவில் நடந்தது. நான் ஒருவன் மட்டும் மேடையேறி நடிக்கும் ஐந்து நிமிட டிராமா அது. நகைச்சுவையாகத் தொடங்கி, சமூக அவலங்களைக் கோபத்துடன் சொல்லி, இறுதியில் மண்ணை அள்ளி 'இது என்ன?’ என்பேன். மக்கள் 'மண்’ என்பார்கள். 'மண்ணா இது? வெறும் மண்ணா? இது ஜாலியன் வாலாபாக்கில் சிந்திய ரத்தம். பகத்சிங்கின் உயிர். கீழவெண்மணி பாட்டாளிகளின் தியாகம். இது வெறும் மண் இல்லை... என் தேசம். இந்த தேசத்தை மண்ணாக்கிடாதீங்க’ எனச் சொன்னபோது, கூட்டத்தினர் கண்களில் நீர். அதன் பிறகு 'ஞானக் கிறுக்கன்’ அரங்கேறாத மேடைகளே இல்லை.
பிறகு, தனியாக 'பூபாளம்’ குழு தொடங்கினோம். 'மயானம்’, 'சைக்கிள்’ என எத்தனையோ நாடகங்கள் போட்டு இருக்கிறோம். 'வியர்வையின் குரல்’ என்ற பெயரில் ஓர் இசைத்தட்டு வெளியிட்டோம். இடையில் நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இரண்டு முறை சென்னை வந்து தங்கினேன். அப்போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, நான் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இப்போது வரை சினிமாவைத் துரத்திக்கொண்டே இருக்கிறேன். ஆனால், இன்னமும் நாடகத்தில்தான் என் கால்கள் இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளே எங்கள் இரவு நேரப் படுக்கையறையாக இருக்கின்றன. முதல் நாள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சி, அடுத்த நாள் கன்னியாகுமரி, மறு நாள் சென்னை எனப் பறவை களைப்போல அலைந்து திரிகிறோம். எப்போதும் மக்களுடன் இருப்பதும், மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுமே எங்கள் பலம்.
நாடகத்தில் இப்போது நாங்கள் வந்தடைந்து இருக்கும் வடிவம் முக்கியமானது. இதில் எத்தனை பேரையும் சேர்க்கலாம். எதைப்பற்றியும் பேசலாம். எவ்வளவு நேரமும் நீட்டிக்கலாம், சுருக்கலாம். இந்த நாடக வடிவம்பற்றி தோழர் பிரளயன், 'பிரெஞ்சு நாடகக் கலைஞர் பிரெக்ட், narrative and reporting theatre என்ற வடிவத்தை நாடகத்தில் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் இதைச் சிறப்புடன் செய்கிறது பூபாளம் குழு’ என பாராட்டியதை மறக்க முடியாது. என்னுடன் ஆரம்ப நாட்களில் இருந்து உடன் வரும் தோழர் செந்திலும், நானும் இணைந்துதான் இப்போது நாடகங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். மக்கள் தொலைக் காட்சியில் சுமார் 2 வருடங்கள் நாங்கள் நடத்திய 'புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி, உலகம் முழுவதும் எங்களைக் கொண்டு சேர்த்தது. அதன் வீச்சில் எத்தனையோ நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தி வந்தோம்.
நாடகத்துடன் சேர்த்து, வாசிப்புதான் என்னைச் செழுமைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக 'பூபாளம் புத்தகப் பண்ணை’ என்ற பெயரில் நூல்கள் வெளி யிடத் தொடங்கினேன். நாடகத்துக்காக ஒத்திகையோ, முன் தயாரிப்போ எதுவும் எங்களிடம் கிடையாது. பேசு பொருளை மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுக்கிறோம். முன்பெல்லாம் பள்ளிக் கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக் கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக்கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான். ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி. தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில்விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்குறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்’னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா? இதைத்தான் மேடையில் நாடகமாகப் போடுகிறோம். அது நடிப்புதான், ஆனால் நடிப்பு மட்டுமில்லை; உணர்வு உள்ள மக்கள் கலைஞர்களின் அரசியலும் அதுதான்!''

கரும்பலகையில் எழுதாதவை

*தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..

*‘சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

‘சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.


*கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்

வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...

*சறுக்கல் விளையாட ஆசைப்பட்டான்.
‘சார்..
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்கஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை.
ஏறுதலே முயற்சி.!

*பிள்ளைகளே
பாடமாகிறார்கள் சிலபோது.
பக்கம் இருப்பவன் மேல்
வெறுப்பு மேலிட்டால்
வேரறுப்பதில்லை.
காய் விடுதலோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!

_பழ.புகழேந்தி.

Feb 18, 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


கம்பம் :
தேனி மாவட்ட அறிவியல் இயக்க
செயலாளர் சுந்தர் அறிக்கை: தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு
மாவட்ட அளவில் அக் டோபரிலும்,
மாநில அளவில் நவ.,
மாதம் கோவையிலும், தேசிய அளவில்
டிச., 27 முதல் 31 தேதி வரை ஹரியானா
மாநிலத்திலும் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங் கேற்கும் அனைவருக்கும்
சான்றிதழ்
வழங்கப்படும். சிறந்த ஆய்வுகள் புரிந்த
குழந்தைகளுக்கு "இளம் விஞ்ஞானியர்'
விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர்
94880
11128 என்ற மொபைலில் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கல்லூரியில் நியூட்ரினோ ஆய்வு குறித்து கலந்துரையாடல்

கம்பம், ஜன. 28:
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வு (ஐ.என்.ஓ.) குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார். ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி முதல்வர் காஜா முகைதீன் துவக்க உரையாற்றினார். தேவாரம் அருகே உள்ள பொட்டிப்புரத்தில் அமைய உள்ள இந்தியன் நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து சென்னை கணித அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி டி.இந்துமதி, மும்பை டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி தீபக்சாமுவேல் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, உடையப்பா பொறியியல் கல்லூரி, ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, ஆண்டிபட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உத்தமபாளையம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நியூட்ரினோ ஆய்வு மையத்தில் நடைபெற உள்ள ஆராய்ச்சிகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினர்.   நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் செய்திருந்தார்.

Feb 13, 2011

நியூட்ரினோ ஆய்வு அலுவலகம் தேனியில் அமைக்க வலியுறுத்தல்

தினமலர்:
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2010
கம்பம் :
நியூட்ரினோ ஆய்வுக் கூட மைய நிர்வாக அலுவலகத்தை மதுரையில் அமைப்பதை விட்டுவிட்டு தேனியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.போடி அருகே உள்ள பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைய உள்ளது. ஆய்வு கூடத்தின் மைய கட்டுப்பாட்டு அலுவலகம், மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது: ஆய்வு கூடம் தேனி மாவட்டத்தில் உள்ள போது, அதன் நிர்வாக அலுவலகமும் தேனி மாவட்டத்தில் தான் அமைய வேண்டும். மதுரையில் அலுவலகம் அமைப்பதை தவிர்க்கவேண்டும். ஆய்வு கூடம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தேனியை மையமாக வைத்தே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
*மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜப்பன் கூறியதாவது: நியூட்ரினோ ஆய்வு மையத்தால் தேனி மாவட்டம் உலக வரைபடத்தில் இடம் பெறும், அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும் அரசு அறிவித்தது. ஆனால் தற்போது ஆய்வு மைய அலுவலகத்தை மதுரையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் கொடுத்துள்ள வாக்குறுதிப்படி அரசு தேனி மாவட்டத்தில் நிர்வாக அலுவலகம் அமைக்கவேண்டும் என்றார்.

Feb 12, 2011

கல்வித் திருவிழா

பிப்ரவரி,11,2011 அன்று மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர் சீலையசாமி கோவில் வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து நடத்திய கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் நிறைவுவிழா கல்வித் திருவிழாவாக நடைபெற்றது. முதல் நாள் மாலை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் பிப்ரவரி,11 அன்று காலை பெண்களுக்கான கோலப்போட்டியும் நடைபெற்றது. 

விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் மண்டலக் கருத்தாளர் திருமிகு.மொ.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கருப்புச் சட்டை நடராஜன் ஆசிரியர் துவங்கிவைத்தார். மாவட்டக்கருத்தாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்க கருத்தாளர் டி.கருணாநிதி பாடல்கள் பாடினார். அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் க.மா.சிவாஜி வாழ்த்துரை வழங்கினார். அறிவழகன், முனீஸ்வரன் ஆகியோர் தலைமையிலான இரண்டு கலைக்குழுக்களும் இணைந்து விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றினர்.. இராஜசேகர் நன்றி கூறினார். அறிவியல் இயக்க நண்பர்கள் எஸ்.சிவாஜி, ஆர்.அம்மையப்பன், ப.மோகன்குமாரமங்கலம், ஜெயமுருகன் மற்றும் கூடலூரில் உள்ள வ.உ.சி.நடுநிலைப்பள்ளி, காமாட்சியம்மன் துவக்கப்பள்ளி, கள்ளர் துவக்கப்பள்ளி, புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருவள்ளுவர் துவக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்..