முதல் பக்கம்

Sep 25, 2013

அறிவியல் கொண்டாட்டம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் கணிதமேதை ராமானுஜன் துளிர் இல்லம் செப்டம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவக்கப்பட்டது.கம்பம் கிளைத் தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கம்பம் கிளை இணைச் செயலாளர் ஓவியர் ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.அறிவியல் கல்வியின் அவசியம் குறித்தும் அறிவியல் அணுகுமுறை குறித்தும் மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் குழந்தைகளிடம் பேசினார்.அறிவியல் புனைக்கதைகளை அறிமுகம் செய்து குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளை மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் செய்து காட்டினார்.குழந்தைகளுக்கு காகிதமடிப்புக்கலை பயிற்சியை(ஓரிகாமி) கம்பம் கிளை செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் வழங்கினார்.இறுதியில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.பா.சிவசக்தி நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.


Sep 22, 2013

மென்பொருள் விடுதலை நாள்(software freedom day)கருத்தரங்கம்-செப்டம்பர் 21

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கூடலூர் வீ-கேன் பயிற்சி மையத்தில் மென்பொருள் விடுதலை நாள்(software freedom day) கருத்தரங்கம் செப்டம்பர் 21 அன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெ.முருகன் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கருத்தாளர் ஓவியா தனசேகரன் கணினியில் மென்பொருள்களின் பயன்பாடு குறித்தும் கட்டற்ற மென்பொருள்களின்(Free software)அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். விலை கொடுத்து வாங்க வேண்டிய இயங்குதளத்திற்கு மாற்றாக(operating system)இலவச இயங்குதளத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார்.இலவச மென்பொருள்கள்,இலவச இயங்குதளம் அடங்கிய குறுந்தகடை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் வெளியிட்டார். கம்பம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் அனைவருக்குமானது,அறிவியல் மக்களுக்கானது, என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

ஆசிரியர் தினவிழா- அன்னஞ்சி

அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் திருமிகு செந்தில்குமரன் தலைமை தாங்கினார். முத்தனம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமதி விஜயா வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியை திருமதி. சாந்தி வரவேற்றார். இப்பள்ளி தொடர்ந்து5ஆண்டுகள் 100% தேர்ச்சி அடைய காரணமாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி கழகத்தின் மாவட்ட செயலர்.திருமிகு. இதயகீதன் சிறப்புரை வழங்கினார். அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சுந்தர் நிறைவுரையாற்றினார். ஆசிரியர் திருமிகு. மோகன்குமாரமங்கலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சமகால கல்வி தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ”போயிட்டு வாங்க சார்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நூல் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

–க.முத்துக்கண்ணன்.tnsf

ஆசிரியர் தினவிழா-பெரியகுளம்

டி.வாடிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. 8 ஆசிரியர்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஞானசுந்தரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

ஆசிரியர் தின விழா

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத் தலைவர் திருமிகு லட்சுமிவாசன் தலைமை வகித்தார். பள்ளித்தலைமையாசிரியர் வரவேற்றார். உத்தமபாளையம் கிளைத் தலைவர் திருமிகு. வளையாபதி வாழ்த்துரை வழங்கினார். கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர். க.முத்துக்கண்ணன் ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்திப் பேசினார். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது போன்ற நிகழ்வுகளில் புத்தக்கங்களை அறிமுகப்படுத்துவது நல்ல வரவேற்ப்பை தருகிறது. பல ஆசிரியர்கள் அப்புத்தகங்களை நம்மிடம் கேட்டிருந்தனர். தொடர்ச்சியாக இப்பணிகளில் கவனம் செயல்படுவது அமைப்பிற்கு நல்லது.

நரெந்திர தபோல்கர் படுகொலை கண்டன கூட்டம்:

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்கும் மந்திர தந்திர வித்தைகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வந்த மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 20 அன்று புனேயில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அடிப்படையில் மருத்துவராக இருந்து கொண்டு மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியவர் தபோல்கர்.3000 க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவியல் அணுகுமுறையை மக்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அவரது படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை மற்றும் த.மு.எ.க.ச.கம்பம் கிளை இணைந்து செப்டம்பர் 4 அன்று கம்பம் அக்குபஞ்சர் அகாடமியில் கண்டன கூட்டம் நடத்தியது.அறிவியல் இயக்க கம்பம் கிளை தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.த.மு.எ.க.ச. கம்பம் கிளை செயலர் திருமிகு அய்.தமிழ்மணி வரவேற்புரை ஆற்றினார்.அறிவியல் இயக்க மாநில செயலாளர் திருமிகு.தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,த.மு,எ.க.ச மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.டாக்டர்.வனராசா இதயகீதன்,மாவட்ட செயலாளர் திருமிகு.அ.உமர்பாரூக்,அறிவியல்இயக்க கம்பம் கிளை பொருளாளர் திருமிகு.தனசேகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். த.மு,எ.க.ச மாநில குழு உறுப்பினர்திருமிகு.க.மா.சிவாஜி தொகுப்புரை வழங்கினார்.அறிவியல் இயக்க கம்பம் கிளை செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

மந்திரமா தந்திரமா @தேனி

31-08-13 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேனியில் உள்ள துளிர் இல்லத்தில் மாநில கருத்தாளர் திருமிகு வீரையா பங்கேற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு ஜேசுராஜ் தலைமை தாங்கினார்.தேனி கிளைச் செயலாளர் திருமிகு தெய்வே ந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.துளிர் இல்ல பொறுப்பாளரும் தேனி கிளை செயற்குழு உறுப்பினருமான திருமிகு ஆசிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.குழந்தைகள் மத்தியில் வீரையா அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தினார். 42 துளிர் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.இறுதியல் தேனி கிளை பொருளாளர் திருமிகு சதீஸ் நன்றி கூறினார்.ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெற்றது.

மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சி:

31-08-13 சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் குண்டல நாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில கருத்தாளர் திருமிகு வீரையா பங்கேற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.கிராமக் கல்வி குழு உறுப்பினர் திருமிகு வீரமுத்து அவர்கள் முன்னிலை வகித்தார்.போடி கிளை செயலாளர் திருமிகு ஸ்ரீதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மாணவர்கள் மத்தியில் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு வீரையா அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை வழி நடத்தினார்.170 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் கல ந்து கொண்டனர்.இறுதியல் ஆசிரியர் கமல் நன்றி கூறினார்.

Sep 19, 2013

துளிர் இல்ல துவக்கம்

செப்டம்பர் 18 மாலை கம்பம் கிளைக்கு உட்பட்ட சுருளிப்பட்டியில் மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.மொ.தனசேகரன் அவர்களது முயற்சியில் அறிவியல் அறிஞர் கே.எஸ்.கே.துளிர் இல்லம் சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டது.மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளை தனசேகரன் செய்து காட்டி துளிர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து குழந்தைகளிடையே பேசினார்.20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல ந்து கொண்டனர்.

Sep 14, 2013

மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

1.மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர தபேல்கர் அவர்கள் புனேயில் படுகொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்தும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் தீர்மானமாக நிறைவேற்றுகிறது.


2.இன்றைக்கு நாடகங்களுக்கும்,சினிமாவிற்கும் தணிக்கைக் குழு இருப்பதுபோல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வருகிற விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் வருகிற பெரும்பாலான விளம்பரங்கள் அறிவியலுக்குப் புறம்பானதாக இருப்பதால் எல்லாம் விளம்பரங்களையும் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஊடகங்களில் வெளியிட வேண்டும் என செயற்குழு கோருகிறது.


3.இந்திய அரசு தற்போது கொண்டுவர முயலும் உயிரித்தொழில் நுட்ப மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்றும் நிறைவேற்றக் கூடாது என்றும் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.கூட்டாட்சி தத்துவம் கோலோச்சும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய மத்தியப்படுத்தப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட்தில்லை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுயாட்சியை பாதிக்கும் எந்தவொரு சட்டமும் ,மாநிலங்கள் நலனில் அக்கறையுள்ளவர்களிடமும் விவாதம் நட்த்திய பின்னரே இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே இந்த உயிரி தொழில் நுட்ப மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடாது என கேட்டுக்கொள்கிறது.


4.மத்திய அரசால் 2010ல் மருத்துவ மனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இச்சட்டத்தில் தரமான சிகிச்சை,குறைந்த கட்டணம்,நோயாளிகளின் உரிமை காத்தல்,மருத்துவ சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை ,மருத்துவமனைகளை மூடக்கூடாது.மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உட்படுத்தி திருத்தப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என செயற்குழு கோருகிறது.

Sep 12, 2013

நிர்வாகக்குழு கூட்டம் : 1

செப்டம்பர் 11 , மாலை 6 மணி அளவில் தேனி பிரித்வி கம்ப்யூட்டர் மையத்தில் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் மாவட்ட செயலர் வி.வெங்கட் மாவட்ட பொருளாளர் ஜெ.மெஹபூப் பீவி மற்றும் இணைச்செயலர் எஸ்.ஞானசு ந்தரி எஸ்.ஜேசுராஜ் உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர்.

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2013:

அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

மாநாட்டின் நோக்கம்:
அறிவியல் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துகளை வெளிக்கொண்டுவருதல், அதே நேரத்தில் அவர்களை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலுமாக அத்துறையில் நிபுணத்துவம் பெறச்செய்தல்.

அறிவியல் கோட்பாடுகளை, விதிமுறைகளை விளக்க ஆசிரியர்கள் சுயமாகக் கண்டுபிடித்து பயன்படுத்தும் அவர்களது வகுப்பறை சார்ந்து பயன்படுத்தும் புதிய வழிமுறைகளையும் எளிய, குறைந்த செலவிலான அல்லது செலவற்ற கற்றல் கற்பித்தல் கருவிகளையும் வெளிக்கொண்டு வருதல், ஊக்குவித்தல்.

அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஆய்வுகளை ஊக்குவித்தல்,

நடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல்பூர்வமான கல்வியில் விளைவுகள் குறித்த ஒரு பரந்த, விரிந்த கருத்துப்பரிமாற்றத்தினை உருவாக்குதல், அதன் மூலமாக தரமான கல்வியை மக்களுக்கு வழங்குதல்.

நடைமுறையில் இருக்கின்ற கல்வி அமைப்பிற்கு அப்பால் நாட்டின் தன்னிறைவான வளர்ச்சிக்கு உதவுகின்ற புதிய கல்விக்கோட்பாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்களாக உள்ளன.

மாநாட்டில் பங்கேற்கக் கூடியவர்கள்:

துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பரப்பும் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பங்கேற்கலாம்.

மையக் கருப்பொருள்: நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் கல்வி:
அறிவியல் ஒன்றால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பசிக்கொடுமையையும் வறுமையையும், சுகாதாரக் குறைபாடுகளையும், எழுத்தறிவின்மையையும், மக்களிடையே இருக்கின்ற மூடப்பழக்கவழக்கங்களையும், கண்மூடித்தனமான நடைமுறைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் களைய முடியும்.. லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுகின்ற நாட்டில் வீணாகும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் நிலையைக் கொண்டுவரமுடியும்- பண்டிட்.ஜவஹர்லால் நேரு-1960ல்.. அலகாபாத் பல்கலை விழாவில்..

நிலைத்த நீடித்த வளர்ச்சி ஒன்றே இந்தியாவின் அடிப்படைத் தேவையாக இருக்க முடியும்-அபதுல் கலாம்.

ஆக நிலைத்த நீடித்த வளர்சிக்கு தேசமானது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அதே நேரத்தில் மக்களை அறிவியல் விழிப்புணர்வுடையவர்களாக மாற்ற வேண்டும். அறிவியல் கொள்கைகளை நடைமுறையில் தங்களுடைய சொந்த வாழ்விலும் சமூகப் பிரச்சினைகளிலும் பயன்படுத்துபவர்களாக, அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களாக உருவாக்க வேண்டும்.

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களே இன்றைய வாழ்க்கையின் இயக்குசக்தியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் மிக ஆழமான அறிவியல்பூர்வமான தலையீடுகளின் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஒரு அறிவியல் பூர்வமான சமூகத்தில் இயல்பாகவே சிக்கலுக்கான தீர்வுகளை எளிதாகக் கண்டறிதல், ஆழமாகச் சிந்தித்தல், இணைந்து செயல்படுதல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், தொடர்ந்து கற்றல் ஆகிய பண்புகளைக் கொண்டவர்களாக மக்கள் திகழமுடியும். ஆக கல்வியை, குறிப்பாக அறிவியல் கல்வியை முழுமையாகக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே நிலைத்த வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும்.

துணைக்கருப்பொருட்கள்:


1.நிலைத்தகு வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு


Ø அறிவியல் மற்றும் கணிதத்தினை நன்கு கற்றல் கற்பித்தல்:


பாரம்பரியமான கற்பித்தல் முறைகளிலிருந்து வேறுபட்டு ஆசிரியர்கள் பின்பற்றக்கூடிய/ அறிமுகப்படுத்தக்கூடிய கதை கூறுதல், விளையாட்டு முறை, புதிர்கள், வினாடிவினா, களப்பயணம், தனியாள் ஆய்வு போன்ற முறைகளால் ஏற்படும் கற்றல் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தல்..

Ø அறிவியல் உணர்வை மேம்படுத்துதல்:

அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதோடு மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அறிவியல் கற்பித்தலால் கற்றலால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்கள், மனப்பான்மைகள் குறித்த ஆய்வுகள், அளவீட்டிற்கான புதிய கருவிகள், மதிப்பீட்டு உத்திகள் தொடர்பான ஆய்வுகள்..

Ø அறிவியல் கல்வியில் பல்லூடகம், அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள்:

அறிவியல் கற்பித்தலில் ஆசிரியர்களின் ஈடுபாடும் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய புதிய, எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளால் நிகழ்ந்த கற்றல் அடைவை முன், பின் தேர்வுகளால் அளவீடு செய்தல்.

Ø அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தலில் புதுமைகளைப் பயன்படுத்துதல்:

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்திய புதுமையான கற்பித்தல் முறை, அணுகுமுறை, செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுகள்..

Ø ஆசிரியர்களுக்கான தரமான பயிற்சி:

கல்வியின் வெற்றியில் ஆசிரியர்களின் பங்கே முதன்மையானது. எனவே அவர்களுக்கான பணிமுன், பணியிடைப் பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆசிரியர் பயிற்சி சார்ந்த நடைமுறைகள், தேர்வு நடைமுறைகள், இருக்கின்ற பொதுவான நிலைமை, பயிற்சி உத்திகள் போன்ற ஆசிரியர் பணியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள்..

Ø அறிவியல் கல்விக்கான ஒருங்கிணைந்த கல்வி முறை:


மாணவர்களின் தனியாள் வேற்றுமைகளுக்கேற்ப, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட புதிய கற்பித்தல் முறைகள், கருவிகள் குறித்த ஆய்வுகள்..



2. பாரம்பரிய அறிவு, பழக்க வழக்கங்கள் மற்றும் நிலைத்தகுவளர்ச்சி:

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள், புரிதல்கள் குறிப்பாக நிலம், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் குறித்தவை. பயிர்பாதுகாப்பு, விலங்குகளைப் பேணுதல், வானிலை, காலநிலையை முன்கூட்டியே கணித்தல், உடல்நலம், ஊடுபயிரிடுதல், நிலவளத்தை நிர்வகித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உற்றுநோக்குதல். அவற்றில் இருக்கின்ற அறிவியல் பூர்வமான நடைமுறைகளை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் போன்றவை.

Ø பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியலை கண்டறிதல்:

Øநிலைத்தகுவளர்ச்சிக்காக பாரம்பரிய அறிவினையும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்துதல்

3 .சமூகத்திற்கான அறிவியல்:

சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு செயல்பாடுகளில் உள்ள அறிவியல் அணுகுமுறைகள், பிற்போக்கு மூடநம்பிக்கைகள், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்வில் இயல்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் இந்த உபதலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பிரச்சார அமைப்புகளின் தொடர்முயற்சிகளின் விளைவாக குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே அல்லது பொதுவாக சமூகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை இத்தலைப்பின் கீழ் மேற்கொள்ளலாம்.

Ø மூடநம்பிக்கைகளை களைவதில் அறிவியலின் பயன்பாடு

Ø சுகாதாரம் மற்றும் சுத்தம்,விவசாயம், சக்தி சுற்றுச்சூழல் தண்ணீர் போன்றவற்றின் பங்களிப்பில் அறிவியல்

Ø அறிவியல் பரப்புவதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பான ஆய்வுகள்

முக்கிய தேதிகள்:
பதிவுப்படிவம், ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரை அனுப்பக் கடைசி நாள் 2013 அக்டோபர் 10. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முடிவு விவரங்கள் அக்டோபர் 20ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும். தேசிய அளவிலான மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அனுப்பவேண்டிய முகவரி: ashokntsc@gmail.com, tnsf.kalvikulu@gmail.com

கூடுதல் விவரங்கள்:

தயாரிக்கும் கட்டுரையானது A4 தாளில் 12 ஆம் எண் எழுத்துருவில் times new roman எழுத்துருவில் 1.5 இடைவெளியில் இருக்கவேண்டும். சுமார் 3000 முதல் 4500 வார்த்தைகளில் கட்டுரை அமைதல் நலம். போஸ்டராகவும் தயாரிக்கலாம் அதன் வடிவமைப்பு 70செமீ X 55 செமீ ஆக இருக்கலாம்.

ஆய்வுக்கட்டுரைகளானது வழக்கம் போல ஆய்வுச் சுருக்கம், முன்னுரை, நோக்கங்கள் அய்வு முறை, புள்ளிவிவரங்கள் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், ஆய்வு முடிவுகள், எதிர்கால திட்டங்கள், நன்றியுரை, மேற்கோள் நூல்கள், இணையதளங்கள் போன்ற உள்ளடக்கத்தில் இருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை www.ncstc-network.org, (ஆங்கிலத்தில்) www.tnsftheni.blogspot.com (தமிழில்) என்ற இணையதள முகவரிகளில் காணலாம்

மேலும் விபரங்களுக்கு:

முனைவர்.என்.மாதவன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் அறிவியல் மாநாடு, 94437 24762 மின்னஞ்சல்:thulirmadhavan@gmail.com

தே.சுந்தர், மாநிலச் செயலாளர் / மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அலைபேசி:9488011128 மின்னஞ்சல்:sundar.tnsf@gmail.com


Sep 8, 2013

நரேந்திரா தபோல்கர் படுகொலை: அறிவியல் இயக்கம் கண்டனம்


மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திரா தபோல்கர் படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வன்மையாகக் கண் டித்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆக. 25 அன்று புதுக்கோட்டையில் நடைபெற் றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இந்நாட்டின் சில அரசியல்வாதிகளின் குருவாக விளங்கும் ஆசாராம் பாபு என் பவர் ஹோலி பண்டிகையின்போது சுமார் 5000 வறட்சியில் வாடுகையில் இது தேவை யற்றது என கொதித்தெழ்ந்தவர் தபோல்கர். தனது வாழ்வின் இன்னொரு பகுதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போரா டினார். முற்போக்குவாதிகளும், சீர்திருத்தவாதி களும் தபோல்கர் கனவு கண்ட மூடநம் பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னி லும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டு மென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தபோல்கரின் படுகொலைக்குப்பின் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம் போல் நாடு முழு வதும் உடனடியாக இயற்றப்படுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வினை உருவாக்கு வதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கிளைகள் அரங்கக்கூட்டங்கள் கண்டன அறிக்கை வெளியிடுதல், துண்டு பிர சுரங்கள் வெளியிடுதல், அரங்க கூட்டங்கள் நடத்துதல் ஆகிய பல்வேறு வடிவங்களில் இந்தப் படுகொலைக்கு எதிரான கண்டன முழக்கத்தை எழுப்புவதோடு தபோல்கரின் கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற பணி களை செய்யவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவிப்பு-2013


 வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 20 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. கல்லாமையைப் போக்க தமிழகம் முழுவதும் அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சிகள், போஸ்டர் கண்காட்சிகள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

மாநாட்டின் நோக்கம்:
குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். தேசிய அளவிலான மாநாட்டில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்கின்ற குழந்தைகளுக்கு நமது நாட்டின் குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு  இளம் விஞ்ஞானி விருது வழங்கிச் சிறப்புச்செய்வது பொதுவான நடைமுறையாகும்.

மாநாட்டின் மையக்கருத்து:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாட்டிற்கான மையக்கருத்து அறிவிக்கப்படுகிறது. 1993ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கள் விபரம் பின்வருமாறு:

ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் & பாதுகாத்தல்:
ந்த ஆண்டு 21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  பொதுத்தலைப்பாக ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1. ஆற்றல் வளங்கள் 2. ஆற்றல் அமைப்புகள், 3. ஆற்றலும் சமூகமும் 4. ஆற்றலும் சுற்றுச்சூழலும் 5. ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு 6. ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்புக்களின் கீழ் குழந்தைகள் ஆய்வு மேற்கொண்டு மாநாட்டின்போது சமப்பிக்கவேண்டும்.

பங்கேற்க தகுதியுடையவர்கள்:
இந்தியா முழுவதும் உள்ள 10 முதல் 17 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கலாம். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், துளிர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என எங்கிருந்தும் குழந்தைகள் பங்கேற்கலாம். பள்ளிசாராக்குழந்தைகளும் இடைநின்ற குழந்தைகளும் கூட பங்கேற்கலாம்.  பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டுமே.

மாநாட்டிற்கான சில விதிமுறைகள்:
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் தங்கள் ஆய்வை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். (பதிவு செய்யக் கடைசி நாள்: செப்டம்பர்,15)
3 முதல் 5 குழந்தைகள் இணைந்து குழுவாக மட்டுமே ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
10 முதல் 13 வயது வரை இளநிலையாகவும் 14 முதல் 17 வயது வரை முதுநிலையாகவும் கருதப்படும்.
இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரித்தல் வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாம்.
ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
தேர்ந்தெடுத்த தலைப்பு குறித்து மூன்று மாதகாலம் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆய்வுகள் எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளவேண்டும்.
ஆய்வாளர் அடுத்த மாவட்ட தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்தல் கூடாது.
இணையதளத்தில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்துகொண்டு வரக்கூடாது.
தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
ஆய்விற்கான செலவினம் ரூ.250க்குள் இருக்கவேண்டும்.

வழிகாட்டி பயிற்சி முகாம்கள்:
 இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாகச் செயல்படலாம். அவர்களுக்காக மாவட்ட அளவிலான பயிற்சி முகாமினை செப்டம்பர்,6 அன்று பெரியகுளத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் / ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வு வழிமுறைகளை விளக்குகின்றனர். மேலும் ஆய்விற்கான விளக்கக் கையேடுகளும் பதிவுப்படிவங்களும் வழங்கப்படும்.

மாநாட்டிற்கான முக்கிய தேதிகள்:
மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் முதல்வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் திருப்பூரிலும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் வாரணாசியில் நடைபெறுகிறது.

மாநாட்டில் தேனி மாவட்டத்தின் சாதனைகள்:
நமது தேனி மாவட்டத்தில் கடந்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012 ஆம் ஆண்டில் பெரியகுளம் மாணவி ஜெனிபர் பாத்திமா வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் சார்பில் மாணவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக விருதுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு:
               மாநாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு திரு.வி.வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்.8, குட்டியாபிள்ளைத்தெரு, கம்பம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 9488683929 / 9942112203 / 9789529655