முதல் பக்கம்

Jul 5, 2016

100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு தேனியில் பாராட்டு விழா

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழா நேற்று (04.07.2016) தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..
கல்வியில் ஆண்டுக்காண்டு தனியார் மயமும், ஆங்கில மோகமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. அதன் விளைவாய் மக்களும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக தனியார் பள்ளிகளையெ தேர்வு செய்கின்றனர்.. இதனால் அரசு துவக்கப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே பயின்று வரக்கூடிய சூழல் உருவாகிறது.. நாளடைவில் அடைக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது..

அரசுப் பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்க முடியும்.. பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்திற்கான அடையாளமாக அரசுப்பள்ளிகளே திகழ்கின்றன.. அரசுப்பள்ளிகள் நமது பள்ளிகள், அரசுப்பள்ளிகள் மக்களுடைய பள்ளிகள்.. அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.. பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பிற்காக கையெழுத்து இயக்கம், ஆய்வுகள் என பலகட்ட முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது.. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 1500 அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றது..
தேனியில் நடைபெற்ற விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. மாவட்டத்துணைத் தலைவர்கள் அம்மையப்பன், சேசுராஜ், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.. அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார்..

தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம். வாசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாலுமுத்து, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராகவன், பள்ளித் துணை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 100% தேர்ச்சி பெற்ற சுமார் 65 பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசினை வழங்கினர்.. அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்..
10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 65 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உதவி ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாண்டி, ஸ்ரீதர், ஜெகநாதன், முருகேசன், ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..



1 comment:

  1. அருமை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete