முதல் பக்கம்

Feb 29, 2020

தேனி மாவட்டம் முழுவதும் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் பிறந்த விஞ்ஞானி சி.வி.ராமன் 1928ஆம் ஆண்டு பிப்.28 ஆம் தேதி தனது ஒளிச் சிதறல் குறித்த ஆய்வை அறிவித்த நாள் ஆகும். அந்த ஆய்விற்காக 1930ல் முதல் முதலாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர், ஆசிய விஞ்ஞானி சி.வி.ராமன் ஆவார். அவருடைய கண்டுபிடிப்பையும் அவருடைய அறிவியல் சார்ந்த முயற்சிகளையும் போற்றும் விதமாக 1986 ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் குழந்தைகளிடையே, பொதுமக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானி சி.வி.ராமன் முகமூடியும் அவரைப் பற்றிய சிறு நூலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டன.

பள்ளிகளில் குழந்தைகள் விஞ்ஞானி ராமன் அவர்களின் முகமூடி அணிந்து மகிழ்ந்தனர். தேனியில் அரண்மனைப்புதூர், அன்னஞ்சி, ஆண்டிபட்டியில் வரதராஜபுரம், பெருமாள் கோவில் பட்டி, போடிநாயக்கனூர், கடமலைக்குண்டு ஒன்றியத்தில் சிறப்பாறை, தும்மக்குண்டு, காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் கம்பம் ஒன்றியத்தில் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் பெரியகுளம் பகுதியில் டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி மற்றும் சின்னமனூர் ஒன்றியம் சீலையம்பட்டி, உத்தமபாளையம் ஒன்றியத்தில் தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊர்வலம், கண்காட்சிகள், கருத்துரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

சுருளிப்பட்டியில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியின் சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின ஊர்வலத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பறையிசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், ஞானசுந்தரி, ஜெயந்தி, பொருளாளர் மணிமேகலை, மாவட்டத் தலைவர் மகேஷ், சதீஷ், தாழைக்குமரன், பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

Feb 14, 2020

டாா்வின் கொள்கை ஆய்வுக் கருத்தரங்கு

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் டாா்வின் கொள்கைகளை பற்றிய ஆய்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு மாநிலச் செயலாளா் தே.சுந்தா் தலைமை வகித்தாா். வெங்கட்ராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாநிலத் தலைவா் தினகரன், டாா்வின் குறித்தும், பரிணாமம், மரபணு மற்றும் ஜீன் தெரபி, பாலின வேறுபாடுகள், மனித இனத்தின் 20-க்கும் மேற்பட்ட கிளை இனங்கள் குறித்து பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்துப் பேசினாா்.

போடி, தேனி, ஆண்டிபட்டி, தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதி மாணவா்கள் கலந்து கொண்டனா். கருத்தரங்கில், டாா்வின் மற்றும் சி.வி.ராமன் முகமூடிகள், அவா்களைப் பற்றிய சிறு நூல்களும் வெளியிடப்பட்டன. மாவட்டத் தலைவா் மா.மகேஷ், சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பொதுக் குழு உறுப்பினா் மா.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் மு. தெய்வேந்திரன் நன்றி கூறினாா்.

Feb 13, 2020

கம்பம் சந்திப்பு 2

கம்பம் சந்திப்பு- 2 ஆம் நிகழ்வு அறிவியல் அறிஞர் டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்.12 மாலை கம்பம் நகரில் நடைபெற்றது.. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார்.. பொதுக் குழு உறுப்பினர் மா.சிவக்குமார் வரவேற்று பேசினார்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் பேரா.தினகரன் அவர்கள் கலந்து கொண்டு டார்வின் தின கருத்துரை வழங்கினார்.. டார்வின் குறித்து, பரிணாமம், மரபணு மற்றும் ஜீன் தெரபி, பாலின வேறுபாடுகள், மனித இனத்தின் 20க்கும் மேற்பட்ட கிளை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்து, வழக்கம் போல கிளை கிளையாக புதிய புதிய தகவல் மழைதனைப் பொழிந்து சென்றார்..

உதாரணத்திற்கு சில..

டார்வின் ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த நூலை வெளியிடவில்லை.. பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்து தான் வெளியிட்டார்.. அதற்கு அடிப்படையாக அமைந்தது உயிரைப் பணயம் வைத்து டார்வின் மேற்கொண்ட ஹெச்.எம்.எஸ்.பீகிள் கடற்பயணம்.. 

நேரடியாக குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றெல்லாம் டார்வின் கூறவில்லை.. அதே போல Survival of the fittest எனும் பதம் டார்வின் சொன்ன பதமல்ல! டார்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. தரைக்கு அடியில் உருளைக்கிழங்கு, மேலே தக்காளி என ஒரே செடியில் இரு உணவுப் பொருள் பொமேட்டோ குறித்த ஆராய்ச்சி பற்றிய தகவல்கள்..

தேசம், இனம், மதம், சாதி எனப் பலவாறாக பிரிந்து நாம் நின்றாலும் மோதிக் கொண்டாலும் போரிட்டாலும் கூட நாம் அனைவருக்கும் ஆதித் தாய் ஒருத்தி தான் என்பது அறிவியல் நிரூபணம் .. ஆண், பெண், திருநங்கை, திருநம்பி மட்டுமின்றி இன்னும் பல மாற்றுப் பாலினங்களும் உண்டு..

தினகரன் சார் உரை கேட்க போடியில் இருந்து ஆசிரியர் சுரேஷ் குமார் தனது மாணவர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தது சிறப்பு... தேனி, ஆண்டிபட்டி, தேவாரத்தில் இருந்தும் கூட அறிவியல் ஆர்வமுள்ள நண்பர்கள், மாணவர்கள் வந்திருந்தனர்.. டார்வின் மற்றும் சி.வி.ராமன் முகமூடிகள் வெளியிடப்பட்டன. அவர்கள் குறித்த சிறு நூல்களும் வெளியிடப்பட்டன..

மாவட்ட தலைவர் மா.மகேஷ் நிறைவுரை வழங்கினார். மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நன்றி கூறினார்.. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.. பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்