முதல் பக்கம்

Nov 25, 2012

வெள்ளி விழா 2012

நவம்பர்.23 (வெள்ளி) துளிர் வெள்ளி விழா ஆண்டின் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு சென்னை பல்கலை கழக வளாகத்தில் மிக சிறப்பாக துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிர் , சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை, மானுடவியல் துறை இணைந்து ” இந்திய அறிவியல் பத்திரிகை முன்னுள்ள சவால்கள் “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்ச்சி காலை 10. 30 மணியளவில் சென்னை பல்கலை கழக இதழியல் துறை தலைவர் முனைவர்.G. ரவீந்திரன் தலைமையில் துவங்கியது. இக்கருத் தரங்கத்தில் அறிமுகவுரையினை துளிர் ஆசிரியர் முனைவர். R. இராமானுஜம் ஆற்றினார். இதனை தொடர்ந்து வாழ்த்துரையினை சென்னை பல்கலை கழக மானுடவியல் துறை தலைவர் முனைவர். சுமதி, புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் பதிவாளர் முனைவர். T.V.வெங்கடேஸ்வரன் வழங்கினார்கள். இறுதியாக தலைமையுரையினை இரவீந்திரன் ஆற்றினார். துவக்க நிகழ்ச்சிக்கான வரவேற்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொது செயலாளர் திரு.M.S.ஸ்டீபன்நாதனும் துளிர் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ஹரீஷ் நன்றியினையும் கூறினார்கள்

2வது அமர்வாக முனைவர் . A. வள்ளிநாயகம் தலைமையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க இதழ்களின் அனுபவம் & மற்ற இதழ்களின் அனுபவம் குறித்து அனுபவ பகிர்வு நடைபெற்றது. இதில் கிழக்கு பதிப்பகம் திரு.பத்ரி, ” அறிவியல் ஒளி” சிதம்பரம் ஆகியோர் தாங்கள் நடத்தும் இதழ்களின் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அறிவியல் இயக்க இதழ்கள் சார்பாக ” துளிர்” பற்றி துளிர் இணை ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன், ” விழுது ”ஆசிரியர் திரு,மாதவன், ” விஞ்ஞான சிறகு” திரு. இல.நாராயணசாமி, ” அறிவு தென்றல் “ மொ.பாண்டிய ராஜன், ” ஜந்தர் மந்தர் ” ஆசிரியர் முனைவர் இந்துமதி ஆகியோர் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர்.

3வது அமர்வாக தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் மாநில தலைவர் முனைவர்.N மணி தலைமையில் மாநில பொருளாளர் திரு.எஸ்.சுப்பிரமணி முன்னிலையிலும் ” இந்திய பத்திரிகை முன்னுள்ள சவால்கள் குறித்த விவாதம், மற்றும் குழந்தைகள் அறிவியல் பத்திரிக்கை செயல்திட்டம்” பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் முனைவர்.R.இராமனுஜம், C.ராமலிங்கம், புதிய ஆசிரியர் ஆசிரியர் திரு. கி.ராஜூ, வேலூர் மாவட்ட அறிவியல் அலுவலர் திரு.லெனின் தமிழ்கோவன் கருத்துகளை முன்வைத்தனர். மேலும் கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின்அனுபவத்தினையும், கருத்துகளையும் தெரிவித்தனர். இறுதியாக நன்றியினை தென்சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. உதயன் நன்றியினை தெரிவித்துகொண்டனர். இக்கருத்துரங்கத்தில் 120க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தூக்கி நிறுத்திய துளிர்- மொ. பாண்டியராஜன்

வணக்கம், துளிருக்கும் எனக்கும் வயது ஒன்று அல்லது இரண்டு தான் வித்யாசம் இருக்கும். அப்படி என்றால் என்னுடை உறவு துளிரோடு 24 அல்லது 23 ஆண்டுகள் இருக்கும். எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது(1988) எங்க கல்லூரி மாணவர் வெங்கடேஷன் எனுடைய சீனியரும் கூட, நானும் அவரும் கணிதம் பிரிவில் படித்துக்கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் எங்கஊர் கம்மாகரையில ஒரு புத்தக கட்டை பின்னால் வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். வழியில் என்னைப்பார்த்த அவர் பாண்டி, எங்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு, இரண்டுரூபா தான் வாங்கிக்க என்றார். நான் எங்க அம்மாவிடம் 50 காசுக்காக நாள்கணக்கா கெஞ்சி வாங்கிகிட்டு காலேஜுக்கு போரவன். ரெண்டு ரூபா என்னைக்கு கொடுக்கமுடியுமா? அண்ணே எங்கிட்ட காசு இல்லன்ணே என்றேன்.  காசெல்லாம் வேணாம் நீ படிச்சா போதும் என்று கொடுத்தார். அப்படிதான் எனக்கு துளிர் அறிமுகமானது. 
 
அதன்பிறகு இது எனக்கு தொடர்ந்து கிடைக்காதா என்று ஏங்கிகொண்டிருந்த போது, பேராசிரியர். ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு ஒரு ஆண்டு சந்தா செலுத்தி என் வீட்டிற்கே புத்தகம் வர ஏற்பாடு செய்துவிட்டார். ( காரணம் நான் கல்லுரியில ஒரு கையெழுத்து பிரதி நடத்திக்கொண்டிருந்தேன். அதை படித்துவிட்டு தான் எனக்கு இந்த சந்தாவை செலுத்திருக்கிறார். அது பின்னாலில் தெரிந்துகொண்டேன்) என்னுடைய விலாசத்திற்கு அதுவரை ஒரு கடிதமோ அல்லது வேறு எதுவுமே தபால் மூலமாக வந்தது இல்லை. ஆனால் முதன் முதலாக என்னுடைய வீட்டிற்கு தபால் மூலமாக வந்தது துளிர்தான். அதை முதன் முதலாக தபால் காரரிடம் வாங்கியபோது அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை தொடர்ந்து படித்துவந்தேன். எங்க வீடு கூறை வீடு என்பதாலும், ஒரே ஒரு அறைமட்டுமே இருந்ததாலும் என்னால் புத்தகங்களை சேகரித்துவைக்க முடியவில்லை. மேலும் நான் வைத்திருந்த புத்தகங்களும் கறையான் அரித்துவிட்டது. மண்சுவர் என்பதால் அதை தடுக்கமுடியவில்லை. 
 
ஆனால் அன்றைக்கு வந்த துளிர் என்னை அறிவியல் மீது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது மட்டுமல்லாமல் எழுதவும் தூண்டியது. துளிருக்கும் நான் எழுதினேன். அப்போது சொந்த பெயரில் எழுதினால் யாரும் பத்திரிக்கையில் போடமாட்டார்கள் என்று எனக்கு யாரோ சொல்ல நான் யுகன் என்ற புனைப் பெயரில் எழுதினேன். 1990 வரை எழுதினேன் ம்கும்... ஒரு எழுத்தும் வரவில்லை. நான் கல்லூரியை விட்டு வந்த பிறகு எனக்கு துளிர் வாங்குவதற்கான வாய்பு போய்விட்டது. 1991,1992 ஆகி ஆண்டுகளில் எனக்கு துளிர் கிடைக்கவே இல்லை. அவைகள் சும்மா வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம். ஆனால் ஏ.ஆர்.கே காலனி, எல்டாம்ஸ் ரோடு என்ற விலாசம் மட்டும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. அதற்கு நான் எனக்கு கிடைக்கின்ற தகவல்களோடு அறிவில் மற்றும் கதை பாடல் போன்றவை எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன். எந்தவித முன்னேற்றமும் இல்லை. புத்தகத்தில் வந்திருக்கிறதா? இல்லையா என்று கூட என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 
 
அதே நேரத்தில்தான் அறிவொளி இயக்கம் வந்தது. பேரா.ஸ்ரீகிருஷ்ணன் என் நண்பன் ஜெரால்ட் மூலமாக என்னை அறிவொளிக்கு அழைத்தார். துளிர் எனக்கும் மீண்டும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து துளிர் தொடர்ச்சியாக கிடைத்தது. தொடர்களும் சமயத்திற்கு தேவையான நேரங்களில் அவற்றை பற்றிய அறிவியல் செய்திகளையும் துளிர் தாங்கி வந்தது. விளையாட்டை பொறுத்தவரை உலக கால்பந்து போட்டியின் போது அது குறித்த அறிவியல் செய்திகள், உலக சினிமா பற்றிய செய்திகள். கிரிக்கெட் குறித்த அறிவியல் என்று பல்வேறு தலைப்புகளில் மிக எளிமையாக வந்துகொண்டிருந்தது. ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. 1993ல் கார்த்திகா என்ற பெயரில் நான் எழுதிய கணிதம் குறித்த ஒரு புதிர் கணக்குத்தான் துளிரில் வெளிவந்த முதல் என்எழுத்து. அது கூட சுஜாதா அவர்கள் எழுதியது நான்தான் என்று கண்டறிந்து கொண்டார்கள். வள்ளிதாசனும் சுஜாதாவும் துளிருக்கான படைப்புகளை படைப்பதற்கான பணி மனைகளை புதுக்கோட்டை தஞ்சதவுர் போன்ற இடங்களில் தொடர்ந்து நடத்தினதன் விளைவுதான் நான் தற்போது எழுதுவதற்கான தூண்டுகோலாக அமைந்தது. 
 
அதுமட்டுமல்ல பல்வேறு எழுத்தாளர்களைக்கொண்டு எழுதுவதற்கான பயிற்சி மற்றும் எப்படிப்பட் அறிவியல் தகவல்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவை போன்ற தெரிந்துகொள்வதற்கான கருத்தரங்குகளையும் தஞ்சை பல்கலைகழகத்தின் நூல்நிலையங்களையும் திறந்துவைத்து வாய்ப்பை உருவாக்கி கொடுத்தனர். வள்ளிதாசனும் சுஜாதாவும் நடத்திய பயிற்சி பட்டறைக்கு பிறகு எனக்கு தெரிந்து துளிருக்கான பயிற்சி பட்டறை நடைபெறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதன் பிறகு பா.ஸ்ரீகுமார், அவருக்கு பிறகு சீனிவாசன் அவருக்கடுத்து கணேசன் துளிரை செலுமைப்படுத்தினர். என்னுடைய எழுத்துகள் அப்போதைக்கப்போது வந்து போகும். என்னால் இயன்ற அளவு பங்களிப்பை தொடர்ச்சியாக அளித்துவருகிறேன்.
அன்றைக்கு வந்த இதழ்களில் என்னை மிகவும் கவர்ந்த பல விஷங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு பிடித்த கணக்கு கண்ணப்பன். கண்ணப்பன் திடீரென்று நின்று போனார். அதற்கு என்ன காரணம் என்று பின்னால் நான் தெரிந்துகொண்டது அது குறித்த எந்தவித ஆதரவோ விமர்ச்சனமோ வராத பட்டசத்தில் அதை ஏன் தொடர்ந்து கொண்டுவரவேண்டும் என்று கணக்கு கண்ணப்பன் கேட்டதாக கேள்விபட்டேன்.  மற்றொன்று வானை நோக்குவோம். அதைத் தொடர்ந்து புதிர் கணக்குகள் இன்னும் பல அறிய தகவல்கள் துணுக்குகள், அறிவியல் அறிஞர்களின் படங்கள், வானை பற்றிய தகவல்கள், ஹேல் பாப் என்ற வால் நட்சத்திரம் குறித்த தகவல்கள், ஹையாகுட்டாகே வால் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள்  இது போன்ற எண்ணற்ற வானியல் தொடர்பான அறிய தகவல்களை கண்டு அவற்றை நேரடியாக வானில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்த கொண்டிருக்கிற துளிரின் 25 வது ஆண்டு விழாவான வெள்ளி விழாவில் நானும் பங்கேற்பது மிக்க மகிழ்சியை அளிக்கிறது. ,இது ஒரு கிராமத்துக்காரனை கடைநிலையில் இருந்த ஒருவனை தூக்கி வந்து உயர்த்தி நிறுத்திய துளிரின் சாதனை.

பெரியகுளத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

First Published : 23 November 2012 11:11 AM IST 

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து, இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின.

 பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். மனோகரன் தலைமை வகித்தார். இந்த இயக்கத்தின் பெரியகுளம் கிளைத் தலைவர் ஏ.எஸ். பாலசுப்பிரமணியன், செயலர் எல். ராம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். தெய்வேந்திரன் வரவேற்றார்.

 மாவட்டச் செயலர் டி. சுந்தர் தொடக்க உரையாற்றினார். இதில், தேனி மாவட்ட அளவில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆய்வுக் குழுவின் 160 மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜி. செல்வராஜ், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

 தமிழ்-முதுநிலைப் பிரிவில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க தேவையான வழிமுறைகளைக் கண்டறிதல் என்ற ஆய்வு, தமிழ்-இளநிலை பிரிவில் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒனறிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கிராம ஆற்றல் வளங்களை சரியாக பயன்படுத்தாத தால் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வு, பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களின் மின்சார சிக்கனம் என்ற ஆய்வு ஆகிய 3 ஆய்வுகளை, மாநில அளவிலான மாநாட்டுக்கு நடுவர்கள் தேர்வு செய்தனர். மேலும், ஆய்வுகளை சமர்ப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், இம் மாநாட்டின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம். பாண்டியராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 ஏற்பாடுகளை, கார்த்திகேயன், ரமேஷ், முத்துக்கண்ணன், நந்தகுமார் உள்பட பலர் செய்திருந்தனர். எஸ். ராம்சங்கர் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன - பேராசிரியர் ரவீந்திரன்


வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய, எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறைப் பேராசரியரும் துறைத்தலைவருமான முனைவர் கோபாலன் இரவீந்திரன் இதற்கு அரசாங்கமே பொறுப்பு என தனது விசனத்தை தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியார் அரங்கில் இடம்பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையும் மானுடவியல் துறையும் துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் பத்திரிகையும் இணைந்து நடத்திய இந்திய அறிவியல் பத்திரிகைகளின் முன்னுள்ள சவால்கள் என்ற கருத்தரங்கில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றும் பொழுது தமிழக வெகுசன ஊடகங்கள் சமூதாயத்திற்குப் புறம்பாகவும் பகுத்தறிவுக்கு புறம்பாகவும் செயற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் வெகுசன ஊடகங்கள் இதே அளவில்தான் இயங்கின. தமிழகத்தில் ஊடகம் மோசமான நிலையடைய பல காரணிகள் உள்ளன.

இரண்டு மூன்று வருடங்களின் முன்பு கோடம்பாக்கத்தில் தொடர் கொலை நடந்த பொழுது ஒரு தமிழக வார இதழ் சைக்கோ கொலை என்று ஒரு வருடமாக எழுதியது. தமிழ் பத்திரிகையின் சொல்லாடல்களைப் பார்த்தால் மிக்க வருத்த்திற்குரியதாக உள்ளன. எல்லாக் கொலைகாரரும் சைக்கோ என்று சொல்லுவதோடு குழந்தையையும் முதியவரையும்கூட சைக்கோ என்றும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு பத்திரிகை விபச்சாரம் செய்யும் பெண்ணை அழகி என்று சொல்லும் சொல்லலை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக செய்யும் தொழிலை அழகியலாக்கி செய்தி வெளிட்ட பெருமை நமக்கு உண்டு. நித்தியானந்தாவை உருவாக்கியதும் ஊடகங்கள்தான். அதே நித்தியானந்தாவை நித்தி என்று கேலி செய்வதும் ஊடகங்கள்தான். கூடங்குளம் பற்றிய பல உண்மைளை மறைக்கும் வேலையையும் நமது ஊடகங்கள்தான் செய்கின்றன.

எந்த வகையில் பாத்தாலும் வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன. இவைகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டுமா என்றும் இதில் நமக்கு என்ன பாத்திரம் இருக்கிறது என்றும் நாம் கருதவேண்டியிருக்கிறது. இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் நாம் மட்டுமல்ல, நமது ஊடகங்கள் மட்டுமல்ல அரசங்கமும்தான்.

அறிவியல் சார்ந்த கருத்தும் பகுத்தறிவு சார்ந்த கருத்தும் மக்களுக்கு கிட்டக்கூடாது என்று முனைப்போடு பல காரணிகள் செயற்படுகின்றன. முக்கியமான காரணி அரசாங்கம் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2012 இல் தர்மபுரியில் நடந்த சம்பவத்திற்கு நவீன தமிழகம் காரணமா? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும். நாம் ஜாதிய நிலப்புரபுத்துவ சமூகக் கட்மைப்புக்குள் தோய்ந்துபோனவர்கள். இந்த கட்டமைப்புக்குள் தோய்ந்துபோன மனம் அறிவியல் சார்ந்த பார்வையையும் பகுத்தறிவு சார்ந்த பார்வையையும் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? என்று  கேள்வி எழுப்பினார் பேராசரியர் இரவீந்திரன்.

நன்றி: உலக தமிழ் செய்திகள்

Oct 30, 2012

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் பள்ளியில் கற்ற அறிவியலை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் ஆண்டு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோடை அறிவியல் திருவிழாக்கள்,துளிர் அறிவியல் மேளாக்கள்.மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் எளிய அறிவியல் கருவிகள் செய்வதற்கான பயிற்சிகள்,துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் தமிழகத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது..


அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளுக்கான பணிகள் இந்த ஆண்டும் துவக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் பள்ளிகள்,மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக கடந்த 2008ம் ஆண்டில் 12525ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2009ல் 15311 ஆகவும் 2010ல் 19831 ஆகவும் 2011ம் ஆண்டில் 23500 ஆகவும் அதிகரித்துள்ளதன் மூலமே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் இப்போட்டிக்கான வரவேற்பை அறியமுடியும். இந்த ஆண்டும் உங்களின் பேராதரவுடன் மிகச்சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்..


போட்டிக்கான விதிமுறைகள்:

ஆறாம்வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். 6-8 வகுப்புகள் வரை இளநிலை என்றும் 9-12 வகுப்புகள் வரை மேல்நிலை என்றும் இருபிரிவுகளாகத் தேர்வுகள் நடைபெறும். ஐ.டி.ஐ.,பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளில் முதலிரண்டு ஆண்டுகளில் பயில்வோறும் இதில் பங்கு கொள்ளலாம்.



இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100/-(ரூபாய் நூறு மட்டும்) செலுத்திப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும். ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும்.



இப்போட்டி 17.11.2012 சனிக்கிழமையன்று ஒரே நாளில், ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் எழுத்துத் தேர்வாக நடைபெறும்.மாணவர்கள் எழுத்துத்தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும். வினாக்கள் பொது அறிவியலாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும்வகையிலும் இருக்கும்.

வினாக்கள் 4 விடைகளிலிருந்து 1 விடையைத் தெரிவு செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான பங்கேற்கப் பயிற்சியளிக்கும் வகையிலும் இருக்கும்.

பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்துவதாக இருக்கும்.

வினாக்கள் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.எனவே ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் இரு மாணவர்களுக்கு (இளநிலை மற்றும் முதுநிலை) அறிவியல் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.(DD in favour of Thulir, Payable at Chennai)

இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 30.09.2012க்கு முன்னரும் இரண்டாம் மற்றும் இறுதிப்பட்டியல் 31.10.2012க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

பள்ளிகளுக்கான பரிசுகள்:

ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.

100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல் மென்தட்டுகள்(சி.டி.)

அதிக பதிவுகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.
இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.


பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படும்.இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும்.

இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம்.


மாவட்ட ஒருங்கிணைப்பாளர்:
பா.செந்தில்குமரன், தலைமை ஆசிரியர்
(மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)
அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, அன்னஞ்சி, தேனி.
அலைபேசி: 99421 12203, 94880 11128


மாநில ஒருங்கிணைப்பாளர்:
எம்.முகமது பாதுஷா
மாநிலச்செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
14A, கூட்டுறவு காலனி, 4ம் தெரு
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-641301
அலைபேசி: 94868 27773

Oct 23, 2012

மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்

ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற என்ற இரண்டு கொசு வகைகள் தான் டெங்கி (டெங்கு அல்ல) காய்ச்சலுக்கு காரணமானவை. இவை நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இவை பகலில் தான் மனிதர்களை கடிக்கும். இந்த கொசுக்கள் தான் டெங்கி வைரசுகளை மனிதனுக்குள் ரத்தத்தின் மூலமாக செலுத்தி டெங்கி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. நான்கு விதமான டெங்கி வைரசுகள் உள்ளன. அவை DENV 1, DENV 2, DENV 3 மற்றும் DENV 4 ஆகும். டெங்கி காய்ச்சல், டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று டெங்கி காய்ச்சலின் வகைகளும் உண்டு. இதில் டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் தான் கொடூரமானது. இதற்கு இதுவரை எந்த தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் இதன் வகைகளும் மாறுபடும். பருவமழைக்குப் பின் தான் இதன் தாக்கம் அதிகமாயிருக்கும். இன்னும் ஓரிரண்டு மாதம் தான் பின் அடுத்த பருவ மழைக்காலம் வரை தப்பிக்கலாம். டெங்கி மட்டுமல்ல எந்த வைரசுகளும் நம் உடலில் வந்துவிட்டால் சாகும் வரை நம்முடனே இருக்கும். நாம் பலவீனப்படும் போது அவை தலை தூக்கும். எனவே தான் தடுப்பு ஊசி அவசியம்.

சமீப காலமாக நம் தமிழகம் தாங்க முடியாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. மின்வெட்டுக்கும் டெங்கி காய்ச்சலுக்கும் தொடர்புண்டு. நினைத்த வேளையில் நம்மால் போர்வெல் இயந்திரங்களை இயக்க முடியாததால் நாம் தண்ணீர் பிடித்து வைக்கிறோம். ஆனால் அவையே இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகிறது. தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தாற் போல வாழக்கற்றுக்கொள்ளுங்கள். தப்பித்துக்கொள்ளலாம்.

முனைவர்.எஸ்.தினகரன்

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள் உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை.

டெங்கி என்ன தான் செய்யும்?

கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண் தீர்ப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும்.

வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்த காய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில் உள்ள புங்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை டெங்கி சாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?


நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிக அவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்து விடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல. பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம்.

ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா?

இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும்.

இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா?

வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம். நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும், சீனாவிலும் இவ்வகை கொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு.

இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா?

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள் எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனை எத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன் பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன. எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது. லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்?


BT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும் என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றை இயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.

முனைவர்.எஸ்.தினகரன்

Oct 9, 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பரிந்துரை

கம்பம்:
தொடக்க கல்வித்துறையில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய தமிழ்நாடுஅறிவியல் இயக்கம், ஆசிரியர் சங்கங்கள் பரிந்துரை செய்துள்ளன. தமிழக அரசு தொடக்க கல்வியில் அறிமுகம் செய்துள்ள "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறி வந்தன. இத் திட்டம் பற்றி விவாதிக்க, கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது.
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், ஆசிரிய பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்சி மாணவர்கள் என பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்றனர். 
 
நடப்பு கல்வியாண்டில் 9,10 வகுப்புகளுக்கும், 2014-15 ம் கல்வியாண்டில் பிளஸ்-1,பிளஸ் 2 வகுப்புகளுக்கும் இந்த முறைஅமல்படுத்தப்பட உள்ளது, என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன் மாதிரி ஆய்வு கால அனுபவங்களையும், நிறை குறைகளையும் ஆராய்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைத்துள்ள விஷயங்களை பரிசீலனை செய்து, முழுமையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்திட அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
நன்றி: தினமலர்
நாள்: அக்டோபர்,8,2012

Oct 6, 2012

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்,அக்டோபர்,5,2012

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 19 ஆண்டுகளாக குழந்தை விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இம்மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அக்டோபர் 5,2012 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில் துவங்கிய பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் பி.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையநோக்கம் குறித்துப் பேசி துவக்கிவைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் துறைத்தலைவர் முனைவர்.சி.இ.சூர்யமூர்த்தி(ஓய்வு) ஆற்றலின் இன்றைய தேவை மற்றும் வருங்காலத்திற்கான மாற்றுத்திட்டங்கள் குறித்து பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் முனைவர்.எஸ்.கண்ணன் ஆய்வு மேற்கொள்ளும் வழிமுறைகள் மாநாட்டின் விதிமுறைகள் குறித்தும் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டின் மையக்கருத்தான ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (ENERGY: EXPLORE ,HARNESS & CONSERVE) குறித்தும் துணைத்தலைப்புகளான ஆற்றல் வளங்கள், ஆற்றல் அமைப்புகள், ஆற்றலும் சமூகமும், ஆற்றலும் சுற்றுச்சூழலும், ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு, ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை குறித்தும் அதன்கீழ் மேற்கொள்ளக்கூடிய மாதிரி ஆய்வுத்தலைப்புகள் குறித்தும் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கல்வி மாவட்டம் முழுவதும் 40 பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான மாவட்ட அளவிலான் குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர்,4ஆம் தேதி நடைபெறும். பயிற்சி மாலை 4.30க்கு நிறைவுபெற்றது.

Oct 2, 2012

வாத்தியார்கள் சரியில்லை..

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை குறித்த கலந்தாய்வு தேனி மாவட்டம் கம்பம் கிளையில் உள்ள ஆசிரியர் இணையத்தால் நடத்தப்பட்டது. சுமார் இருபது பேர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட சிறிய குழுவாக விவாத்தை எடுத்துச் சென்றன. இவ்விவாதம் எவ்வளவு முக்கியம் என்பதை அங்கே பங்கேற்ற எனக்கு உணர்த்தியது. 
காரணம் இன்றைக்கு அரசு எதையும் யோசிக்காமல் அடுத்தடுத்து கல்வியில் மாற்றத்தை கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற திட்டம் நாளைக்கு இருக்குமா? என்ற கேள்வியோடையே ஆசிரியர்கள் இருப்பதால் ரிக்காடிக்கலாக வேலைசெய்தால் போதும் என்ற நிலையில் இருப்பதை நாம் பாக்க முடிகிறது. எதற்கெடுத்தாலும் வாத்தியார்கள் சரியில்லை என்பதையே காரணம் காட்டி இந்த அரசு பள்ளிகளை மூடுவதற்கான வேலைகளை செய்ய துடிக்கிறது. 
ஆசிரியர்கள் பேசும் போது ஏ.பி.எலை கொண்டு வந்து அதை நாங்கள் புரிந்து கொண்டு வேலை செய்ய தயாராக இருந்தபோது இப்போது புத்தகத்தை கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது. அந்த முறையில் மாணவன் எப்போது அந்த அடைவுகளை முடிக்கின்றானோ அதன்பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இதி்ல் காலாண்டுக்குள் அவன் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது எப்படி பொருந்தும்.

இது பொன்ற பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இது போன்ற சிறிய கூட்டங்கள் ஆங்காங்கே ஆசிரியர்கள் மத்தியில் நடந்தால் கல்வியில் நாம் சரியான வழியை கண்டறிந்து அடுத்த தலைமுறையை அதன் வழியில் நடத்த நம்மால் முடியும்.
மொ.பாண்டியராஜன், மதுரை


முப்பருவக் கல்வி & தொடர் மதிப்பீட்டு முறை: அறிவியல் இயக்கம் அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டு முதலாக 1 முதல் 8 வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை அமுல்படுத்தியுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டில் உயர்நிலை வகுப்புகளுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளுக்கும் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

அறிவொளிக்காலம் முதல் ஆரம்பக்கல்வியில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அரசு அமுல்படுத்தியுள்ள CCE மதிப்பீட்டு முறையை நன்கு ஆய்வு செய்யும்பொருட்டு மாநிலம் முழுவதும் பரிசீலனைக் கூட்டங்களை நடத்தியது.

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்டம்பர்,27,2012 அன்று கம்பம் அக்குபங்சர் அகடமியில் பரிசீலனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாண்வர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இக்கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கீழ்க்காணும் நுட்பமான விமர்சனங்களையும் நடைமுறையில் CCE அமுலாகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் குறித்த கோரிக்கைகளையும் தமிழக அரசின் பார்வைக்கும் உடன் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் சமர்ப்பிக்கின்றோம்.

1. முற்றிலும் மனப்பாடத்திறனை மையப்படுத்தி அமைந்திருந்த முறையை மாற்றி, புதிய மதிப்பீட்டு முறையை அமுலாக்கியிருப்பது அடிப்படையில் வரவேற்கத்தக்கதே. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள CCE மதிப்பீட்டு முறை முழுமையான மாற்று மதிப்பீட்டு முறையல்ல என்பதை கவலையோடு சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

2. பாடத்திட்டம், பாடப்புத்தகம், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளியின் உள் கட்டமைப்பு அனைத்துக்கும் CCE மதிப்பீட்டு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றை மாற்றியமைக்காமல் நடைமுறைப்படுத்தப்படும் CCE முறை நிச்சயம் எதிர்பார்க்கும் பலனைத்தராது.

3. ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என கல்வியோடு தொடர்புடையவர்கள், அக்கறையுடையவர்கள் என அனைவரிடமும் CCE மதிப்பீட்டு யுத்தி பற்றி விரிவான கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் கருத்துக்களையும் உள்ளடக்கி அமுலாக்க முறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் முறைக்கும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கற்றே தீரவேண்டிய முப்பருவ தேர்வு முறைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகள் களையப்பட்டிருக்க வேண்டும்.

5. எந்தவொரு மாற்றுமுறையும் ஒரு PILOT STUDY க்கு பிறகே அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் CCE மதிப்பீட்டு முறை PILOT STUDY இல்லாமல் அமுலுக்கு வந்தது பெரும் குறைபாடாகும்.

6. தொடர் மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வழங்கப்பட்ட பயிற்சிகளும் அவசரகோலத்தில் நடத்தப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு எப்படி மதிப்பீடு செய்வது என்ற தெளிவினைத் தரவில்லை. பயிற்சி அளித்தவர்களுக்கும் குழப்பமே மிஞ்சி நிற்கிறது. CCE மதிப்பீட்டு மாதிரிகள், வழிகாட்டி ஆசிரியர் புத்தகம், மதிப்பீட்டிற்கான ஆதார நூல், புத்தகம் ஆகியவை அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். முதல் பருவம் முடிந்துவிட்ட சூழ்நிலையில் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

7. நடைமுறையிலிருப்பதாக கூறப்படும் செயல்வழிக்கற்றலுக்கான கற்றல் அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த பருவத்திலாவது வழங்கிட வேண்டும்.

8. சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் நீண்டகாலமாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில் CCE மதிப்பீட்டு முறை மாணவர்களிடம் பாகுபாடு காட்டவும், அவர்களை மிரட்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு என்பதைக் கருத்தில்கொண்டு அதனைத் தடுப்பதற்கான உரிய வழிமுறைகள் செய்யப்படவேண்டும்.

9. CCE மதிப்பீட்டு முறை என்பது படிவங்களை மட்டும் பூர்த்தி செய்யும் நடைமுறையாக மாறிவிடும் அபாயம் தவிர்க்கப்படவேண்டும்.

10. CCE மதிபீட்டு முறை என்பதே அடிப்படையில் 1:20 என்னும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. இந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை கவனத்தில் கொள்ளாமலும், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஈராசிரியர் பள்ளிகளின் கற்பிக்கும் சூழலைக் கணக்கில் கொள்ளாமலும் CCE மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

11. CCE மதிப்பீட்டு முறையை முதலில் அறிமுகப்படுத்திய CCE அமுலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளையும் CCE மதிப்பீட்டு முறைக்கு ஏற்ற வகையில் பாடப்புத்தகங்களையும் கலைத்திட்டத்தையும் மாற்றி அமைக்க மறுபரிசீலனை செய்து வருகிறது. இதனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

12. முப்பருவ முறைத்தேர்வு என்பது குறைந்தபட்சம் மூன்றாம் வகுப்பு வரை தவிர்க்கப்பட வேண்டும்.

13. நான்காம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் வளரறி தேர்வு-ஆ பகுதியை, கேரளாவில் உள்ளதைப் போல மாணவர்களே சுயமதிப்பீடாக பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்தலாம். அதன்மூலம் மாணவர்களின் சுயமதிப்பீட்டு ஆற்றலும் தலைமைப் பண்பும் வளரும். ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறையும்.

14. ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதிப்பீட்டு முறையைவிட மேம்பட்ட மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் ஆசிரியர்களின் முழுமையான ஈடுபாடு தேவை. அப்பொழுதுதான் CCE முறை வெற்றி பெறும். அதற்கேற்ப உளவியல் சார்ந்து ஆசிரியர்களின் முழுப்பங்கேற்புடன் கூடிய பயிற்சி முறைகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட குறைபாடுகள் பரிசீலனை செய்யப்படாமல் குறைகள் களையப்படாமல் தொடக்கக்கல்வியில் அமுலாக்கப்பட்டிருக்கும் மாற்று மதிப்பீடு உண்மையான பலனைத்தர வாய்ப்பில்லை. எனவே, தமிழக அரசு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி, அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டுகிறோம்.

  • 2012-2013 கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் CCE அமுல்படுத்தப்பட்டு இருப்பதை PILOT STUDY PERIOD என அறிவிக்க வேண்டுகிறோம்.
  • 2013-2014 கல்வியாண்டில் 9,10 வகுப்புகளுக்கும் 2014-2015 கல்வியாண்டில் 11,12 வகுப்புகளுக்கும் CCE முறை அமுல்படுத்தப்பட உள்ளது என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்திட வேண்டுகிறோம்.
  • PILOT STUDY PERIOD ல் கிடைக்கும் அனுபவங்களையும், நிறைகுறைகளையும் ஆராய்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைத்துள்ள விஷயங்களையும் பரிசீலனை செய்து குறைகளை நிறைவு செய்து முழுமைப்படுத்தி CCE முறையை அமுலாக்க வேண்டுகிறோம்.
மாவட்டச்செயலாளர்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.பெரும்பாலான நோய்கள் அனைத்தும் தடுக்க கூடியவையே.சுகாதாரமான சுற்றுச்சூழலில் இந்த நோய்க்கிருமிகள் உருவாவதையும்,பரவுவதையும் தடுக்க முடியும்.சுகாதாரமான சுற்றுச்சூழல் என்பது கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்வது.வெட்ட வெளியில் மலம் கழிக்காதிருப்பது,குப்பை கூளங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது,பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பது,வீட்டை சுற்றிய பகுதிகள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது,கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது போன்ற செயல்கள் மூலம் சாத்தியமாகும்.ஏனெனில் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகள் வளர வாய்ப்பினை உருவாக்கிவிடும்.

டெங்கு,மலேரியா, புளு,வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மேற்கண்ட சுகாதாரமற்ற சூழலில்தான் ஏற்படுகின்றன.

தற்போது டெங்கு காய்ச்சல் நோய் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவியிருக்கிறது..குறிப்பாக அறந்தாங்கி,அரிமளம்,கீரனூர் வட்டங்களில் பரவியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.எனவே மக்களிடம் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இதன்காரணமாகவே அறிவியல் இயக்கம் இந்தப்பிரச்சாரத்தை நம்முடைய மாவட்டம் முழுவதும் செய்ய முடிவெடுத்துள்ளது.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்குக் காய்ச்சல் என்பது கொசுவினால் பரவக்கூடிய புளு காய்ச்சலைப்போன்ற ஒரு நோய்.இது குறிப்பிட்ட வகையான கொசுவால் பரப்பப்பட்டு நான்கு வகையான வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயாகும்.இது சாதரண வகையிலிருந்து மிகவும் ஆபத்தான நிலைவரை வேறுபடும்.மிகவும் ஆபத்தான நிலை என்பது டெங்குபற்றிய பீதியான நிலை மற்றும் ரத்தக்கசவுடன் கூடிய காய்ச்சலுக்கு இட்டுச்செல்லும்.தற்போது டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து ஏதும் இல்லை.

டெங்குக்காய்ச்சலுக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

அறிகுறி என்பது நோயாளி உணர்ந்து வெளியில் சொல்வதாகும். அடையாளம் என்பது மற்றவர்கள்,மருத்துவர்கள் கண்டுபிடிப்பதாகும்.உதாரணமாக தலைவலி என்பது அறிகுறியாகும்.மாறாக புண்கள் போன்றவை நோயின் அடையாளங்களாகும்.

சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

இதற்கான அறிகுறிகள் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்கள் கடித்து ஏழு நாட்க்கள் வரையிருக்கும். அதன்பின் மறைந்துவிடும்.இந்தவகைக்காய்ச்சல் மோசமான விளைவுகளையோ மரணத்தையோ ஏற்ப்படுத்தாது.இ ந்த சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்

Ø தசை மற்றும் மூட்டுகளில் வலி

Ø உடம்பின் தோல் பகுதியில் தோன்றி மறையக்கூடிய புண்கள்.

Ø அதிக காய்ச்சல்

Ø அதிகமான தலைவலி

Ø கண்களுக்குப் பின்புறம் வலி

Ø வாந்தி வருதல் ,உமட்டல்

இரத்தக்கசிவுடன் கூடிய டெங்குக்காய்ச்சல்

இவ்வகைக்காய்ச்சலில் அறிகுறிகள் ஆரம்பத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல மிகவும் மோசமாகும்.இவ்வகைக்காய்ச்சல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் மரணத்தில் முடியும்.சாதரண டெங்குக்காய்ச்சலுக்குள்ள அனைத்து அறிகுறிகளும் இவ்வகைக்கய்ச்சலுக்கும் இருக்கும்.அதே நேரத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளும் இருக்கும்.

Ø வாய் மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல்

Ø மூக்கில் ரத்தம் வடிதல்

Ø தோல் பகுதிகள் பிசுபிசுப்புடன் காணப்படுதல்

Ø வெள்ளை அணுக்கள் உருவாகும் இடங்களிலும் ரத்த நாளங்களிலும் குறிப்பிட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

Ø உடம்பின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கருப்பாக வாந்தி எடுத்தல் மற்றும் கருப்பாக மலம் வெளியாகுதல்.

Ø இரத்தம் உரைவதற்குத் தேவையன செல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

Ø வயிற்றில் ஒருவிதமான உணர்வு.

Ø தோலுக்கு அடியில் சிறுசிறு இரத்தப்புள்ளிகள் தோன்றுதல்.

Ø நாடித் துடிப்பு குறைதல்

டெங்குபற்றிய பீதியான நிலைக்கான் அறிகுறிகள்.

இந்த நிலையும் மோசமான நிலைக்கும் இறப்புக்கும் இட்டுச்செல்லும்.சாதரண டெங்கு காய்ச்சலுக்குள்ள அறிகுறிகளுடன் கூட கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும்.

Ø அதிகமான வயிற்றுவலி

Ø நிலை தடுமாற்றம்

Ø இரத்த அழுத்தம் வேகமாக குறைதல்.

Ø அதிகமான் இரத்தக்கசிவு.

Ø தொடர் வாந்தி.

Ø இரத்த நாளங்களிலிருந்து திரவம் வடிதல்.

நோய் வருவதற்கான காரணங்கள்.

டெங்குக்காய்ச்சலுக்குக் காரணமான நான்கு வைரஸ் கிருமிகள் ஏடிஸ் ஏஜிப்டி(Aedes Aegypti)என்ற கொசுவால் பரப்பப்படுகிறது. ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு ஆப்ரிக்காவில் தோன்றியது. ஆனால் தற்போது உலகின் அனைத்து வெப்பப் பிரதேசங்களிலும் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளில் பெருகி உள்ளது.வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட கொசுவால் இந்நோய் மனிதர்களுக்குப் பரப்பப்படுகிறது.டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை முதலில் கொசு கடிக்கிறது.இந்த கொசு வேறு ஒரு மனிதரைக்கடிக்கும் போது அந்தவைரஸ் கிருமி அவர் உடலுக்குள் சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்குகிறது. ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நோய் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது.ஏனெனில் இந்நோய் வெவ்வேறுவித வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.மறுமுறை வரும்போது அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஆனால் முன்பே இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமாதலால் அவர்களுக்கு இரண்டாமுறை தாக்கும் போது பாதிப்பு அதிகமிருக்க வாய்ப்பு குறைவு.

விளைவுகள்:

டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இருவாரங்களுக்குள் உடல் நிலை தேறிவிடுவார்கள்.ஆனால் சிலர் இந்த நோய் தொற்றுக்குப் பின்னால் பலமாதங்கள் களைப்பு மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.இக்காய்ச்சல் மேலும் கடினமான பாதிப்புக்களான இரத்தக்கசிவுடன்கூடிய காய்ச்சல் மற்றும் பீதியளிக்க கூடிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

டெங்குக்காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்.?


மேற்கூறிய அறிகுறிகளுடன் சாதரண டெங்குக்காய்ச்சல் என்றால் வா ந்தி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய சுத்தமான ( கொதிக்கவைத்து ஆறவைத்த ) நீரைக்குடிக்க வேண்டும்.உப்பு சக்கரைக்கரைசலும் அறுந்தலாம். காலதாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.


டெங்குக்காய்ச்சல் வருவதை தடுக்கும் முறைகள் :

டெங்கு வைரஸ் கிருமிகளின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடிய வகையிலான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே இந்நோய் வருவதைத் தடுப்பதற்கு சிறந்தமுறை என்னவென்றால் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதேயாகும்.

Ø இயன்றவரை உடலின் எல்லாபாகங்களையும் மூடும் வகையில் உடை அனிய வேண்டும்.

Ø தூங்கும்போது உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கவேண்டும்.

Ø கொசுவிரட்டிகளை பயன்படுத்தலாம்.

Ø கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

Ø ஜன்னல்களில் வலை அடிக்கலாம்.

கொசு உற்பத்தி தடுக்கும் முறைகள்

1.சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல் .தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சேகரித்து புதைத்தல் மற்றும் தீயிட்டு எரித்தல்.

2.டயர்கள்/தகரங்கள்/பலகைகள்/பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துதல்.

3.தண்ணீர் சேர்த்துவைக்கும் பாத்திரங்களின் ஓரங்களை சுரண்டி கழுவி தலைகீழாக காயவைத்தல்,குளிர் காற்றாடி மற்றும் பூந்தொட்டிகளை வாரம் ஒருமுறை காயவைத்தல்.

4.தண்ணீர் தொட்டிகள் கொசு புகாவண்ணம் மூடிவைத்தல்.

5.மரப்பொந்துகளில் உள்ள நீரை அப்புறப்படுத்தி வைத்தல் மற்றும் எறும்பு தடுப்புகளில் வாரம் ஒருமுறை உப்பு சேர்த்தல்.

6.கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்க களப்பணியாளர்களை அனுமதித்தல்.

சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாப்போம்!

டெங்குக்காய்ச்சலை ஒழிப்போம்!


தே.சுந்தர்
மாவட்டச் செயலாளர்
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
தேனி மாவட்டம்

Sep 29, 2012

முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை: விவாதம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் செப்டம்பர்,27 அன்று மாலை 5 மணிக்கு கம்பம் அக்குபங்சர் அகாடமி மையத்தில் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முப்பருவமுறை-தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை குறித்து விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயமுருகன் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் த.முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டச்செயலாளரும் பல்கலைக்கழக பாடத்திட்டக்குழு உறுப்பினருமான கவிஞர்.அ.உமர்பாரூக், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மா.ராஜேஷ், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மேற்பார்வையாளர் ஆர்.இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எஸ்.சேசுராஜ் மற்றும் அறிவியல் இயக்க நண்பர்கள் நந்தகுமார், முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பாவ்லோ பிரைரே-ஆசிரியர் இணையக்கூட்டம்

பிரேசில் நாட்டின் கல்வியாளர் பாவ்லோ பிரைரே அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்,19,2012 அன்று மாலை கம்பத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் ஆசிரியர் இணையக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாவ்லோ பிரைரே 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லி நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விசார் கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் நூல் வடிவமான  “எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” என்ற புத்தகத்தை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது.

ஒரு ஆசிரியரோ, கல்வியாளரோ எப்பொழுதும் நடுநிலையாளராக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. அப்படி ஒருவர் சொல்லிக்கொள்வாரேயானால் அது உண்மையில்லை. ஒவ்வொரு ஆசிரியருமே ஒரு அரசியல்வாதிதான் அல்லது கலைஞர்களாகத்தான் இருப்பார்கள்.

கற்பித்தல் என்பதே ஒரு அரசியல் செயல்பாடுதான்.

கல்வியின் மூலமாக மட்டுமே எந்த ஒரு அரசியல், சமூக மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற கல்வியும் பள்ளிகளும் நடுநிலையானவை அல்ல. அவை ஆளும் அதிகார வர்க்கத்தின் தத்துவார்த்த நிலையை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் மீள் உருவாக்கம் செய்கின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

ஆசிரியராக இருக்கின்ற ஒருவர் 50 விழுக்காடு மாணவராகவும், 50 விழுக்காடு ஆசிரியராகவும் இருக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது கற்றல் என்பது உரைவீச்சுக்களின் மூலம் நிகழ்வதாக இருக்கக்கூடாது. மாறாக கலந்திரையாடலின் மூலமாகவே நிகழவேண்டும்.

இவ்வாறு பல்வேறு சிந்தனைகளை, விவாதக்கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது. இவ்விவாதத்தில் அறிவியல் இயக்க நண்பர்கள் ஜெயமுருகன், தே.சுந்தர், மொ.தனசேகரன், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்புத்தகத்தினை எழுத்தாளர் கமலாலயன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.30/- அவசியம் படிங்க.

Sep 17, 2012

டார்வின் துளிர் இல்லத்தில் உலக ஓசோன் தினக் கருத்தரங்கம்

சூரியனின் கதிர்கள் முழுமையாக நம்மைத் தாக்காமல் பாதுகாக்கின்ற ஓசோன் படலம் மனிதர்களின் செயல்பாடுகளால் பாதிப்படைந்து வருவதை தடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு மாண்டிரியோலில் நடந்த மாநாட்டில் 24 நாடுகள் ஒப்பந்தம் செய்தன. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட செப்டம்பர்,16ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலக ஓசோன் தினமாக அறிவித்தது. அந்நாளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டக்கிளையின் சார்பில் சுருளிப்பட்டி, டார்வின் துளிர் இல்லத்தில் நேற்று (செப்டம்பர்,16) உலக ஓசோன் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் தலைமை வகித்தார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் முன்னிலை வகித்தார்.  மாணவர் பிரவீன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் உலக ஓசோன் தினம் குறித்தும் ஓசோன் படலம் பாதிப்பிற்கான காரணங்கள் குறித்தும் பாதிப்பினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பவர்பாயிண்ட் மூலம் விளக்கமளித்தார். மாணவர் பழனி நன்றி கூறினார்.

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Sep 11, 2012

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள்தாம் சிறப்பாக இருக்கும்!



First Published : 26 Aug 2012 12:00:00 AM IST

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  (மானுடவியல்) படித்து வரும் மாணவி எலினார். இவர் தனது படிப்பின் ஆராய்ச்சிக்காக கிராம மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தை அறிந்துகொள்ள கடந்த 10 மாதங்களுக்கு முன் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்துக்கு வந்து ஓவியம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான குழும வீட்டில் தங்கினார். இவருக்கு ஆறுமுகத்தின் மகள் எம்.எஸ்சி படித்த ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல வகைகளில் வழிகாட்டுதலாக இருந்து வருகிறார்.  மானுடவியல் பாடத்தில் மக்கள் கிராம தெய்வங்களை வழிபடுவது, திருமணங்கள் நடத்துவது குறித்தும், கோயில் திருவிழாக்கள் கலாசார முறைகளையும் தனது ஆய்வுக்காக ஊன்றிக் கவனித்து வருகிறார் மாணவி எலினார்.    மேலப்பசலை கிராம மக்களிடத்தில் மாணவி எலினார் அன்பாகப் பழகி வருவதால், கிராம மக்களும் இவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர்.  கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்வது, வீட்டில் சமையல் வேலை செய்வது, கிராம மக்களுடன் சேர்ந்து திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பது போன்றவற்றையும் தனது ஆராய்ச்சி படிப்புடன் எலினார் மேற்கொண்டுவருகிறார்.  மேலும், பெண்கள் வயல் வேலைகளுக்குச் சென்றால் அவர்களுடன் சென்று வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை ரசித்தபடி அனுபவித்துவரும் எலியனார் நம்மிடம் பேசியதிலிருந்து...  ""நான் பிரிட்டனில் முதுகலைப் படிப்புப் படித்தேன். தற்போது மானுடவியல் ஆராய்ச்சி படிப்புக்காக மேலப்பசலை கிராமத்தில் வந்து தங்கியிருந்து, படிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறேன்.  படிப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனது படிப்புக்கு அமெரிக்கா, இந்திய அரசாங்கங்கள் உதவி செய்து வருகின்றன. நான் மேலப்பசலை அருகேயுள்ள கரிசல்குளம் கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு நேரிடையாகச் சென்று, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.  இது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  படிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமானதாகும். அமெரிக்க கல்வி முறையானது படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில் இல்லை. ஆனால், இந்தியாவில் படிக்கும் பாடத்திலிருந்து கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்து, அதையே பதிலாக எழுதுகிறார்கள். இந்த படிப்பு முறை வாழ்க்கைக்கு உகந்ததல்ல. படிக்கும் பாடத்திலிருந்து சொந்தமாகப் பதில் எழுத வேண்டும்.  அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தான் சிறப்பானதாக இருக்கும். வீடுகளுக்கு அருகேயுள்ள பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியப் பாடங்களாக இருக்கும்.  தமிழகத்தில் விளையாட்டுக் கல்வி முறையும் படிப்பும் மாணவர்களை முன்னேற்றும் விதத்தில் இல்லை. இரவானால் இங்கு பெண்கள் வெளியில் செல்லத் தயங்குகிறார்கள். அமெரிக்காவில் இரவில் வெளியில் செல்ல பயம் கிடையாது.  திருமணத்துக்காக இங்கு போல் வரதட்சிணை வாங்கும் பழக்கம் எங்கள் நாட்டில் இல்லை'' என்றார்.  இவருக்கு உதவியாக உள்ள மேலப்பசலை ராஜேஸ்வரி, ""எலினார் தன்னம்பிக்கையுடன் சுறுசுறுப்பாக உள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் எங்கும் செல்லும் தைரியம் இவரிடம் உள்ளது.  மேலப்பசலை கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ள இவர், சிறுவர்களுடன் விளையாடுவது இளைஞர்களுடன் சகஜமாக பேசி பழகுவது பெண்களுடன் சேர்ந்து வயலுக்கு நாற்று நடவும் களை எடுக்கவும்கூட செய்கிறார். இதெல்லாம் இவரது சிறப்பாகும்.  இவர் மேலப்பசலைக்கு வந்த பின்னர், இவரது பெற்றோர் ஒருமுறை இங்கு வந்து சென்றுள்ளனர்''  என்றார். 
ஞாயிறு கொண்டாட்டம்,

சாதனை மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் பாராட்டு


 பதிவு செய்த நேரம்:2012-09-10 11:39:25
 
விழுப்புரம், : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் சர்வதேச எழுத்தறிவு தின விழா விழுப்புரத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மாநில பொருளாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவமுருகன், மாவட்ட கல்வி உப குழு அய்யனார், மாவட்ட பொருளாளர் கருணாகரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் கல்வி பிரசார உப குழு வீரபாஸ்கரன் வரவேற்றார். ரமேஷ் அறிமுக உரையாற்றினார். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற 422 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாதேவி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க இணை இயக்குனர் நரேஷ் சிறப்புரையாற்றினார். இஎஸ் கல்வி குழும தலைவர் சாமிக்கண்ணு, அறிவியல் இயக்க மாநில தலைவர் மணி, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பாட்சா, அனைத்து பொறியாளர் பேரவை மாநில துணை செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

நன்றி: தினகரன்

சர்வதேச எழுத்தறிவு தினம் - 2012

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் மதுரை மேற்கு ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஆகிய இடங்களில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்வதேச எழுத்தறி தினம் நடத்தப்பட்டது. கருத்தரங்கம், மாணவர்களுக்கான போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

திருமங்கலத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கா,காமேஷ் தலைமை வகிக்க. குருசாமி - ஞானவள்ளி அறக்கட்டளை நிறுவனர் குருசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். எழுத்தறிவு குறித்து பி.கே.என். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சு.சங்கரன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/ கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினரும். கவிஞருமான ஆர்,காசிபாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக தீபம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோமதி வரவேற்புரையாற்ற, தீபம் மாவட்டப் பொருளர் முத்துலட்சுமி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
பொதும்பு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு கிளைத் தலைவர் ஹரிபாபு தலைமை வகித்து சிறப்புரையாற்ற.பரவை சத்தியமூர்த்தி நகர் உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் மஞ்சுளா சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி. ஓவியப்போட்டி. கட்டுரைப்போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிளைச் செயலாளர் ஜோதிமுருகன் சிறப்பாக செய்திருந்தார். 25 க்கும் மேற்பட்ட துளிர் இல்ல மாணவர்கள். பெற்றோர்கள் என கலந்துகொண்டனர்.

Aug 23, 2012

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா? ஏலம் போட வேண்டுமா?

ஏலக்காய் டீ!..இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ஆர்டர் பறக்கும். ஒனக்கு வேற வேலையே இல்லடா என்று சொல்லிக்கொண்டே அந்த அருமைத் தமக்கை தம்பிக்கு, சொன்ன வாய் மூடுமுன்னே, அவனுக்குப் பிடித்த ஏலம் கமகமக்கும் டீத்தண்ணி யுடன் நிற்பார். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்கள ? அட அட எப்படி இருக்கும்கிர்றிங்க ,. சூப்பர்பா !ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! இதெல்லாம் நெசந்தான். ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..! அதுவும் சாப்பிட்டு முடித்ததும் ரெண்டு ஏல விதையை வாயில் போட்டு மென்று பாருங்களேன் அட..அட அந்த ஆனந்தமே தனிதான்.

மணங்களின் .. ராணி..!

ஏல விதைக்குஅதன் சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியம் / சொர்க்கத்தின் வாசனைப்பொருள் " என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. ரொம்ப பொருத்தமான பெயர்தான். ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. ஏலத்தின் மணத்தை மிஞ்ச,இந்த உலகில் வேறு மணமே கிடையாது நண்பா !. அதனால்தான் அனைத்து இனிப்பு வகை உணவிலும், ஏலம் கலக்கப்படுகிறது. ஒரு பொருளில் ஏலத்தைக் கலந்தாலே அதன் வாசனையே அப்படியே அலாக்காக ஆளைத் தூக்கிவிடும். பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது வாசனை ராணியான ஏலக்காய்தான். விலைதான் குங்கும்ப்பூவை விட குறைவே தவிர மணத்தில் குங்குமப்பூவை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஏலம்.


பழம் பெருமை பேசும் ஏலம்.!


உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள்களில் ஒன்று ஏலம். இதன் வயதைக் கேட்டால் மயக்கம் போட்டுவிடுவோம்.. வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால்,இதன் சரித்திரம் சுமார் 5,000௦௦௦ ஆண்டுகளைக் கடந்தது..ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. அன்று இருந்த ஏராளமான் வாசனைப் பொருட்களில், வாசனையுடன் மருத்துவ குணத்திலும், சமையல் பயன்பாட்டிலும், உடலுக்குப் பயன்படுத்தும் நறுமண தைலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பும் மரியாதையும் அதிகமோ அதிகம்தான். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய சரித்திரத்தில், அதன் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் ஏலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது எப்பர்ஸ் பாப்பிரசில் (Ebers Papyrus) குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் எகிப்தியர்களின் மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம். எகிப்திய பதிவுகளில் பழமையானதும், முக்கியமான மருத்துவக் குறிப்புகள் அடங்கியுள்ளதும் இதுதான். ஏற்கனவே சுமார் 5000 ஆண்டுகுகளுக்கு முற்பட்ட தகவல்களை எடுத்து மீண்டும் இந்த பாப்பிரஸ் பட்டையில் ஹீராடிக் எழுத்தில் எழுதியுள்ளார்கள் , இந்த பாப்பிரஸ் சுருள் 110 பக்கங்கள் கொண்டது. 20 மீட்டர் நீளம் உள்ளது.இதில் சுமார் 700 அற்புதமான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைக்கப் பட்டுள்ளன. ஏலத்தை அன்று எகிப்தியர்கள் நறுமணப் பொருளாக பயன்படுத்தியதுடன், உடல் வலி போக்கும் மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகவும்,, மதரீதியான சடங்குகளுக்கும் ஏலத்தை அதிகம் பயன் படுத்தினர்.

நாட்டுக்குள் வந்த காட்டு ராணி ஏலம்..!

ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். மத்திய தரைக் கடல் வழியே பயணம் செய்த வணிகர்கள், மணம் மிகுந்த மனதைக் கொள்ளையிடும் ஏலத்தை கான்ஸ்டாண்டி நோபிளிருந்து ஸ்காண்டிநேவியாவுக்கு கொண்டு வந்தனர். இன்றும் கூட அங்கு இதன் பெருமை குன்றாமல் இருக்கிறது. இன்றும் கூட இங்கு பாஸ்திரி, கறி உருண்டை மற்றும் ஒயினில் மணமிக்க ஏலத்தை கலக்கின்றனர்.அனைத்துப் பொருள்களிளும் ஏலக் கலப்புதான். அங்கே ஏலத்தை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாயின் துர்நாற்றம் போக்கவும், பல்லின் வெண்மைக்கும் இன்றும் ஏலம் பயன்படுகிறது.கிரேக்கர்களும், ரோமானியர்களும் அன்று ஏலத்தை நறுமணத் தைலங்களிலும், களிம்புகளிலும்,வாசனை எண்ணெய்களிலும்,பயன்படுத்தினர். ரோமானியர்கள் மேலும் இதனை உடலின் மணப்பொருள் தயாரிக்கும்போதும், வாயின் கெட்ட வாசனை போகவும், அதைவிட முக்கியமாக, உடலுறவைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.


இந்தியாவின் ஏலம்.!


ஏலம் கடந்த 2000 ஆண்டுகளாக, இந்திய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் கூட இதனை பற்றி இந்திய வரலாற்றில் பதிவு உள்ளது. கி.மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, ஏலத்தை இந்தியர்கள் சமையல், வாசனைப் பொருள் மற்றும் மருத்துவத்தில் பயன் படுத்தினர் என்ற குறிப்பு காணப்படுகிறது.இந்தியாவில் 11 ம் நூற்றாண்டிலிருந்து எல்லம் நடமாடுகிறத். அப்பொது பஞ்சமுக தாம்பூலத்தில், எலக்காயின்பட்டியல் உள்ளது.ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமை வளம் கொழிக்கும் மழைக்காடுகள் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது.ஏலம் இந்தியாவிலும், மலேசியாவிலும் அக்டோபர் மாதம் ஏலம் அறுவடை செய்யப்படுகிறது.பின்னர் அந்த காய் முழுவதையும் சூரிய ஒளியில் வைத்தே வெயிலில் காயப்போட்டு உலர்த் துவார். அதன் நிறத்துக்கு ஏற்றாப்போல தெரிவு செய்யப்பட்டு அதன் மணம் அறிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பச்சை ஏலம். அடுத்து கருப்பு ஏலம். அவை பச்சை நிறத்தில இருந்து கருஞ்சிவப்பு /வெள்ளை கூட இருக்கிறது. ஏலத்தின் விதை பச்சை வண்ணத்திலிருந்து, மஞ்சள், சாம்பல் வரை. இருக்கும்


ஏலத்தின் மணம் முழுவதும், ஏல விதைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடைத்து பொடி செய்துவிட்டால் மணம் காலப்போக்கில் குறைந்து போகும். ஏலத்தின் அருமையான மணம் மனித மனங்களை,சுண்டி இழுக்கிறது.ஏலத்தை உலர்த்திய பிறகுதான் முழு மணமும் கிடைக்கிறது. ,தென்னிந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஏலம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அது இன்று இலங்கை, கவுதமாலா ,இந்தோ-சீன மற்றும் டான்செனியா விலும் பயிரிடப்படுகிறது . இந்தியாவில்தான் ஏராளமான ஏலம் விளைந்தாலும், இங்கிருந்து குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் தனக்கு மிஞ்சி தானே தான தர்மம். அதன் விளைவுதான். நாமே எல்லாவற்றையும் பயன்படுத்திவிடுகிறோம். உலகிலேயே அதிகம் ஏலம் ஏற்றுமதி செய்யும் நாடு கவுதமாலாதான்.ஆனால் இங்கே சுமார் 100 ஆண்டுக்கு முன்னர்தான் ஏலம் அறிமுகமாயிற்று.


பெயர் சூடும் சூடாமணி..!


ஏலத்திற்கு கார்டமன் (Cardamon)என்ற பெயர் பெர்சிய விலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த புதிய பெயரான ஏலேட்டரிய என்பது தெற்காசிய நாவிலிருந்து பிறந்திருக்க வேண்டும். இந்தி, பஞ்சாபி யிலும் இது எலாச்சிதான்.இதன் பொருள் பச்சை ஏலம் என்பதே. ஆனால் சில மொழிகளில்கருப்பு ஏலம் என்றும் போருல்படியாகவும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதனை ஏலா/எல்லாகா என்கின்றனர். எல்லாம் திராவிடிய மொழியிலிருந்து வந்துள்ளது. ஆனால் ஏலம் என்பது முடிவாக தமிழ் எல்லை என்பத தெரிகிறது. தமிழ் மலையாளம், கன்னடம், இது ஏலக்காய் தான் தெலுங்கில் மட்டும் இதன் பெயர் ஏலகுலு .


வேதத்திலும்..கிரேக்கத்திலும்.. ஏலம்.!.

ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.


ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!

போருக்கு வந்து நாட்டைக் கையகப்படுத்த வந்த மாவீரன் அலெக்சாண்டரின் போர்வீரர்கள், இங்கு இந்தியாவில் தங்கி இருந்தபோது இலக்காயால் ஈர்க்கப்பட்டனர். அதன் மணத்தில் மயங்கிய போர் வீரர்கள், மறக்காம ல் , தங்கள் ஊருக்குத் திரும்புமோது, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனாராம். அப்படிப்பட்ட பெருமை உடையது ஏலம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான செய்தி ! கி.மு. 27 ம ஆண்டுகளில் வாழ்ந்த ,கிரேக்க சாம்ராஜ்யத்தின் உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏல மணத்தின் மீது கொள்ளைப் பிரியமாம். கிளியோபாட்ரா தான் குளிக்கும் நீரில் ஏலத்தை அரைத்து கலக்கச் சொல்லியே குளிப்பாராம். . அதன் வாசனையில் அவள் கிறங்கிப் போவாராம். அது மட்டுமா ? தன் காதலன் மார்க் ஆண்டனியின் வருகையை எதிர்பார்க்கும்போதேல்லாம், தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம். எப்போதும் அவரை சுற்றி ஏலத்தின் மணம் கமழுமாம்.


பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.

இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது.இருந்தாலும் கூட, ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதியானது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் தரும்படியான கிரேக்க வார்த்தையில் "அமோமன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல கொண்டுதான பேரரசர்களைச் சந்திக்க வேண்டுமாம். அரசர்கள் முன் இவர்கள் வாய் நாற்றத்துடன் பேசிவிடக்கூடாதல்லவா? அதான். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களான பேரரசர்கள் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்தபந்தவான படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.


நாங்க..இஞ்சி..குடும்பம்தாங்க..!


இப்படி பார் புகழும் ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்

அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!

ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர்.அரேபியர்கள் காபியில் எலாம் கலந்து தருவதை உபசரிப்பின் உச்சபட்ச மரியாதை என்று நினைக்கின்றனர் . அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் கலந்து அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் போது அரிசியுடன் ஏல அரிசியும் கலந்து போட்டே சமைக்கின்றனர். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்றுதான். . புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன்,உப்புமா என அனைத்துப் பொருளகளிலும் மற்றும் பிற இனிப்புகளில்மும் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்! எதியோபியாவிலும் இதே கதைதான். அவர்களும் விதம் விதமாக ஏலத்தை காபியில் கலந்து பரிமாறுவார்கள்.மத்திய ஆசியாவிலும், உஸ்ப்கிச்தானிலும் அரிசி, கறி மற்றும் இனிப்பில் என அனைத்துப் பொருள்களிலும் சும்மா சகட்டு மேனிக்கு கலந்து உண்கின்றனர் . உலகில் அதிக அளவில் ஏலம் பயபடுத்துவதில் முதல் பரிசுதான் அரேபியாவுக்கு.

மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!

ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம், ஏலம் இருமலை சரி செய்யும் மருந்தாகவும், உணவு தூண்டுவதாகவும், உடலின் சூட்டைத் தக்கவைக்கவும், எதிர் உயிரியாகவும், எதிர் பூஞ்சைக்காலன் பொருளாகவும், , டானிக்காகவும்,வயிற்றை சரிச்ய்யும் மருந்தாகவும், உடல்வலியைக் குறைக்கும் மருந்தாகவும் இருக்கிறது. 100 கிராம் ஏலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் :மேலும் வயிற்றுப் போக்கு மலமிளக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் கொண்டது இது. வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இதனைக் கட்டாயம் வா உன்ன வேண்டும். நெஞ்சு சளிக்கும் இது நல்லது. பொதுவாக கருவுற்ற பெண்கள் இதனை உண்ணக்கூடாது.

See the table below for in depth analysis of nutrients:


Cardamom, Nutritional value per 100 g.(Source: USDA National Nutrient data base) PrincipleNutrient ValuePercentage of RDAEnergy 311 Kcal 15.5% Carbohydrates 68.47 g 52.5% Protein 10.76 g 19% Total Fat 6.7 g 23% Cholesterol 0 mg 0% Dietary Fiber 28 g 70% VitaminsNiacin 1.102 mg 7% Pyridoxine 0.230 mg 18% Riboflavin 0.182 mg 14% Thiamin 0.198 mg 16.5% Vitamin A 0 IU 0% Vitamin C 21 mg 35% ElectrolytesSodium 18 mg 1% Potassium 1119 mg 24% MineralsCalcium 383 mg 38% Copper 0.383 mg 42.5% Iron 13.97 mg 175% Magnesium 229 mg 57% Manganese 28 mg 1217% Phosphorus 178 mg 25% Zinc 7.47 mg 68%


Cardamom Tea Recipe

Ingredients: (makes 2 cups)

2 cups water8-10 green cardamom pods2 green tea bags (optional)1 tbsp grated orange rind (or fresh orange juice)Honey or agave nectar (optional)

tbsp = tablespoon

Directions:

Add the water to a saucepan and bring to the boil, then reduce to a simmer. Crack open the green pods and add to the saucepan and simmer for 2-3 minutes. The seeds will dissolve in their pods.

Turn off the heat and, if using, add the teabags and the orange rind (or juice) and let steep for 5-10 minutes.

Remove the teabags and pods, and, if you like a bit of sweetness, add the honey or agave and serve.

Honey and Cardamom Ice Cream

The following recipe is from Food Fit for Pharaohs by Michelle Berriedale-Johnson

2 cups whole milk

1 level teaspoon arrowroot

2/3 cup double or heavy whipping cream

10 cardamom pods bruised with a rolling pin

2 tablespoons honey

1 tablespoons orange flower water

½ tsp crushed mastic (if available)

Mix a little of the milk into the arrowroot to make a smooth cream.

Add this to the rest of the milk and the cream. Transfer to a saucepan with the cardamom and honey and bring slowly to a boil. Cook very gently, stirring continuously until mixture thickens slightly. Add orange flower water and crushed mastic (if using) and continue to cook a few more minutes. Remove from heat, cover and allow to cool completely.

When quite cold, put into an ice-cream maker and churn-freeze until frozen, but not frozen hard. Serve at once if possible. If not, freeze hard, but before serving remove from the freezer and allow to soften in the fridge at least 30 minutes. Serve with fresh fruit or a macerated fruit salad.

How to make cardamom chai tea
?

Serves: 4

  • Cardamom chai tea ingredients
  • 2 teaspoon of loose black tea leaves
  •  3 pods of green cardamom
  • 1’’ piece of ginger
  • 2 cups of milk
  • 3 cups of water
  • A pinch of cinnamon powder (optional)
  • A pinch of freshly ground cardamom powder
  • Sugar to taste.
  • Method:
  • Put the seeds from the green cardamoms in a mortar and pound it with a pestle to turn it into fine powder
  • Clean and peel the ginger, cut it into thin slices and crush it in a mortar separately.
  • Boil the water in a medium sized pan along with the freshly crushed spices for few minutes.
  • Turn off the flame, cover it with a lid and let the spices infuse their flavour into the boiled water.
  • Now add the milk, sugar and tea leaves to it, bring it to boil 2-3 times but don’t let the mixture boil over.
  • Turn down the heat and let the blend simmer for 5 minutes.
  • Remove from heat and strain it into serving cups.
  • Sprinkle a pinch of cardamom powder and cinnamon powder (if available) and serve piping hot.
  • note: You can also turn this simple recipe into a latte. All you have to do is top your chai with milk directly from the espresso machine instead of boiling it with the tea leaves. This will confer a delicious frothy quality to your chai. This chai can also be relished cold. Add a sumptuous scoop of vanilla ice cream to your chilled elaichi chai tea instead of milk or top it up with a swirl of whipped cream to transform this spicy tea into a pleasant summer drink.


தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.


கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். இது எப்படி இருக்கு நண்பா! இன்று அதனை தங்கம் விற்கும் நிலையில் நினைத்துக் கூடப்பர்ர்க்க முடியுமா? 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம் முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. பிற நாட்டு முதலாளிகள் எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?
-PROF.S.MOHANA






















Aug 21, 2012

நாகையில் துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி


First Published : 19 Aug 2012 01:34:35 PM IST

நாகப்பட்டினம், ஆக. 18: தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

அறிவியல் இயக்க பொதுச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைச் செயலர் ஆவராணி ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) மீனா, அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் இரா. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் தேர்ச்சி பெற்ற 65 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

துளிர் அறிவியல் போட்டியில் வென்ற பள்ளிகள்: 6, 7, 8 வகுப்பு: புஷ்பவனம் உதவிபெறும் பள்ளி, குத்தாலம் கணபதி தேசியப்பள்ளி, ஓரடியம்பலம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி. 9,10-ம் வகுப்பு: வலிவலம் தேசிகர் பள்ளி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பள்ளி,புறாகிராமம் அரசுப்பள்ளி. 11, 12-ம் வகுப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபள்ளி, வலிவலம் தேசிகர் பள்ளி, ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப்பள்ளி.

ஜந்தர் மந்தர் வினாடி வினா:6, 7, 8-ம் வகுப்பு: சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, நாகை நகராட்சி மகளிர் பள்ளி. 9,10-ம் வகுப்பு: நாகை நகராட்சி மகளிர் பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, நாகை தூய அந்தோனியார் பள்ளி. 11, 12-ம் வகுப்பு: நாகை தேசிய பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி.

போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி சுழற்கேடயங்களை வழங்கினார்.பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன், நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமலிங்கம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கீழ்வேளூர் உதவி தொடக்கக் கல்வி அலுவர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நன்றி: தினமணி

வினாடி, வினா : மாதம்பட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்

பதிவு செய்த நேரம்:2012-08-13 10:01:37

தொண்டாமுத்தூர்,: கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி, வினா போட்டி எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. தொண்டாமுத்தூர் ஒன்றிய அளவிலும், கோவை மாவட்ட அளவிலும் 6,7,8 நடுநிலைபள்ளி பிரிவில், 9 மற்றும் 10 வகுப்புகள் பிரிவில் மாதம்பட்டி பள்ளிகள் முதலிடம் பெற்றன. இதை தொடர்ந்து 6 மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள வினாடி, வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் புரட்சிதம்பி பரிசு வழங்கினார். விழாவில், தென்கரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருபுத்திரன், தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

தேவகோட்டையில் விநாடி வினா

First Published : 13 Aug 2012 10:06:18 AM IST


  தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் விநாடி வினா போட்டிகள் லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளியில் நடைபெற்றன.  மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 29 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜசேகரன், ரேணுகா, ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர்.

இதில் 6,7,8 வகுப்பு பிரிவில் நானாக்குடி ஆர்.சி நடுநிலைப்பள்ளி முதலிடமும், தேவகோட்டை முத்தாத்தாள் பள்ளி இரண்டாமிடமும், 9,10 வகுப்பு பிரிவில் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.  11, 12 வகுப்பு பிரிவில் பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி முதலிடமும், நகரத்தார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் முனைவர் குமரப்பன் தலமைமையில் செயலாளர் எட்வின், பள்ளி முதல்வர் ராஜீ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயூ ஆகியோர் வழங்கினர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

மூலம்: தினமணி

துளிர் வினாடி-வினா போட்டி விவேகானந்தா பள்ளி அசத்தல்

ஆகஸ்ட் 14,2012,00:12

பல்லடம் : பல்லடத்தில் நடந்த துளிர் வினாடி-வினா போட்டியில், மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து சுவாமி விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பல்லடம் ஒன்றிய அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி-வினா போட்டி நடந்தது.

30 பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

மூன்று பிரிவுகளிலும், பல்லடம் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீரஞ்சனா, பிளெஸ்ஸி மோனிசா, அண்ணாமலை, விக்னேஷ், அனீஸ் கார்த்திக், மோகன் சுந்தர், கவிபிரியன், நர்மதா, இந்துபிரியா ஆகியோரை தாளாளர் முத்துக்குமார், பள்ளி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.


நன்றி: தினமலர்

Aug 11, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தினநிகழ்ச்சிகள் -2012

கடந்த 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்,6,9 தேதிகளில் அமெரிக்கா  ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களின் மீது நடத்திய  நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் 3 இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் பலியானார்கள். ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. அதன் தாக்கம் இன்றுவரை ஜப்பானிய மக்களிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அனாலும்  இன்றும் உலகின் பல  பகுதிகளில்  போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகஸ்ட், 6,9 தேதிகளை போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்கின்ற முழக்கங்களை முன்வைத்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு போட்டிகளையும் பேரணி, மனிதச்சங்கிலி, கருத்தரங்குகள் போன்ற பல நிகழ்ச்சிகளையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் விபரம் பின்வருமாறு:

பெரியகுளம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  ஆகஸ்ட்,10 காலை 11 மணிக்கு பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா-நாகசாகி  நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர் தங்க.பாண்டியராஜன் நன்றி கூறினார். ரஹீம் சகோதரர்கள் நடுநிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

போடி: போடிநாயக்கனூர் ஒன்றியம் முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கஸ்தூரி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எம்.கலா கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் கருத்துரை வழங்கினார். பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தேனி: தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் காமுத்தாய், கலைச்செல்வி, மலைச்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கம்பம்: கம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. சி.எஸ்.ஐ. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை வகித்தார். அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு பேரணியைத் தொடங்கிவைத்தார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் வட்டாரச் செயலாளர் க.முத்துக்கண்ணன் ஒருங்கிணைத்தார்.

கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன் பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11.30 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அணு ஆயுத எதிர்ப்புக் கருத்துரை வழங்கினார். மாணவர்கள் ஹிரோஷிமா நினைவு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்கள் முருகன், கணேசன், ராஜன், அழகுசித்ரா, ஜெயலட்சுமி உள்ளிட்டு சுமார் 150 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரெஜினாள் தொடங்கிவைத்தார். 2 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், அறிவியல் இயக்க முன்னாள் செயலாளர் க.மா.சிவாஜி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிச் செயலாளர் ஜி.இரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஒருங்கிணைத்தார்.

மனிதச் சங்கிலி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் நகரில் இன்று மாலை 3 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்பு மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா நடுநிலைப்பள்ளி, ஸ்ரீமுத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 700பேர் கலந்துகொண்டனர். காந்திசிலை முதல் அரசமரம் வரை மாணவர்கள் சாலையின் இருபுறமும் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். அறிவியல் ஆக்கத்திற்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் சுயசார்புக்கே, அழிவிற்கல்ல அழிவிற்கல்ல அணுவின் சக்தி அழிவிற்கல்ல, நிலவட்டும் நிலவட்டும் அமைதி எங்கும் நிலவட்டும், பரவட்டும் பரவட்டும் சமாதானம் பரவட்டும் என்கின்ற முழக்கங்களை உரத்தகுரலில் எழுப்பினர். பள்ளித்தலைமை ஆசிரியர் கணேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.இளங்கோவன், வி.வெங்கட்ராமன், கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார், கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கம்பம் கிளைப்பொறுப்பாளர்கள் சி.பிரபாகரன், பாண்டி, அய்யப்பன் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்களும் 15க்கும் மேற்பட்ட ஆசிரிய நண்பர்களும் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI



--

Aug 7, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தின போட்டிகள்-2012



அன்புடையீர்,

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே கல்லாமையைப் போக்குவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்போடு அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை வலியுறுத்தியும் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளையும் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி இயக்கத்தையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வுகளில் தங்கள் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
போட்டிகளின் விபரம் பின்வருமாறு:
பிரிவு
வகுப்பு
தலைப்பு
அளவு
ஓவியம்
6,7,8
போரில்லாத பூமி
30*45செ.மீ.சார்ட்
கட்டுரை
9,10,11,12
அணு-நேற்று இன்று நாளை
4 பக்க அளவில்
கவிதை
கல்லூரி
உயிர் பொசுங்கும் வாடை வீசுதே
25 வரிகளில்
கட்டுரை
ஆசிரியர்/ஆர்வலர்
அணு இன்றி அமையாதா உலகு
4 பக்க அளவில்
மேற்காணும் மாவட்ட அலுவலகத்திற்கு 
 தங்களின் தெளிவான முகவரியுடன்
படைப்புக்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட்,21,2012
:9488011128