முதல் பக்கம்

Jul 24, 2012

20வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012


மையக்கருத்து: ஆற்றல்- தேடல், கையகப்படுத்துதல் & சேமித்தல்

             வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 19 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

             தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. கல்லாமையைப் போக்க தமிழகம் முழுவதும் அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சிகள், போஸ்டர் கண்காட்சிகள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

            குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். தேசிய அளவிலான மாநாட்டில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்கின்ற குழந்தைகளுக்கு நமது நாட்டின் குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு  இளம் விஞ்ஞானி விருது வழங்கிச் சிறப்புச்செய்வது பொதுவான நடைமுறையாகும்.

            நமது தேனி மாவட்டத்தில் கடந்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
               
மையக்கருத்து:
             இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாட்டிற்கான மையக்கருத்து அறிவிக்கப்படுகிறது. 1993ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கள் விபரம் பின்வருமாறு:

1993:                         KNOW YOUR ENVIRONMENT
1994 & 1995:         CLEAN UP INDIA
1996 & 1997:         INDIA OF OUR DREAMS-LET’S GO FOR IT
1998 & 1999:         NATURE: LET’S CONSERVE, SHARE & CARE
2000 & 2001:         INDIGENOUS SCIENTIFIC KNOWLEDGE FOR A BETTER 
                                    TOMORROW
2002 & 2003:        FOOD SYSTEMS TOWARDS NUTRITION FOR ALL
2004 & 2005:        HARNESS WATER RESOURCES FOR BETTER FUTURE
2006 & 2007:        BIODIVERSITY: NURTURE NATURE FOR OUR FUTURE
2008 & 2009:         PLANET EARTH : LET’S EXPLORE, CARE & SHARE
2010 & 2011:            LAND RESOURCES: USE FOR PROSPERITY 
                                       & SAVE FOR POSTERITY
2012 & 2013:           ENERGY:  EXPLORE ,HARNESS & CONSERVE
   
ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் & பாதுகாத்தல்:
                     
               இந்த ஆண்டு 20ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  பொதுத்தலைப்பாக ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1. ஆற்றல் வளங்கள் 2. ஆற்றல் அமைப்புகள், 3. ஆற்றலும் சமூகமும் 4. ஆற்றலும் சுற்றுச்சூழலும் 5. ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு 6. ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்புக்களின் கீழ் குழந்தைகள் ஆய்வு மேற்கொண்டு மாநாட்டின்போது சமப்பிக்கவேண்டும்.

பங்கேற்க தகுதியுடையவர்கள்:
                 
                      இந்தியா முழுவதும் உள்ள 10 முதல் 17 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கலாம். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், துளிர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என எங்கிருந்தும் குழந்தைகள் பங்கேற்கலாம். பள்ளிசாராக்குழந்தைகளும் இடைநின்ற குழந்தைகளும் கூட பங்கேற்கலாம்.  பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டுமே.

மாநாட்டிற்கான சில விதிமுறைகள்:

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் தங்கள் ஆய்வை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். (பதிவு செய்யக் கடைசி நாள்: ஆகஸ்ட்,4)
 
3 முதல் 5 குழந்தைகள் இணைந்து குழுவாக மட்டுமே ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
 
10 முதல் 13 வயது வரை இளநிலையாகவும் 14 முதல் 17 வயது வரை முதுநிலையாகவும் கருதப்படும்.
 
இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரித்தல் வேண்டும்.
 
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாம்.
 
ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
 
தேர்ந்தெடுத்த தலைப்பு குறித்து மூன்று மாதகாலம் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆய்வுகள் எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளவேண்டும்.
 
ஆய்வாளர் அடுத்த மாவட்ட தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்தல் கூடாது.
 
இணையதளத்தில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்துகொண்டு வரக்கூடாது.
 
தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
 
ஆய்விற்கான செலவினம் ரூ.250க்குள் இருக்கவேண்டும்.

பயிற்சி முகாம்கள்:
                  
                  இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாகச் செயல்படலாம். அவர்களுக்கான பயிற்சி முகாம்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பெரியகுளம் கல்வி மாவட்ட அளவில் தேனியிலும் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் உத்தமபாளையத்திலும் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் அனைவ்ரும் கலந்துகொள்ளலாம். பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வு வழிமுறைகளை விளக்குகின்றனர். மேலும் ஆய்விற்கான விளக்கக் கையேடுகளும் பதிவுப்படிவங்களும் வழங்கப்படும்.

மாநாட்டு தேதிகள்:
    
                 மாவட்ட அளவிலான மாநாடு அக்டோபர் இறுதியில் பெரியகுளத்தில் நடைபெறும். மாநில அளவிலான மாநாடு நவம்பர் 9,10,11 தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் வாரணாசியில் நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு:
                
                 மாநாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு திரு.மு.தெய்வேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்.8, குட்டியாபிள்ளைத்தெரு, கம்பம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 9791457385, 9488011128

தே.சுந்தர்,மாவட்டச்செயலாளர்,9488011128

Jul 8, 2012

இயக்கச் சுவடுகள்….


இயக்கச் சுவடுகள்….

3வது இளைஞர் அறிவியல் திருவிழா-2012


இயற்கை, விஞ்ஞானம் மற்றும் சமூகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், திறனறிதல் தேர்வுகள், அறிவியல் வினாடிவினா, எளிய அறிவியல் பரிசோதனைகள், ஓரிகாமி, வான்நோக்கல் நிகழ்ச்சிகள்  என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் அறிவியல் திருவிழாவை நடத்தி வருகிறது.

3வது மாநாட்டிற்கான மையக்கருத்து:

மூன்றாவது மாநாட்டிற்கான மையக்கருத்தாக இயற்கை, விஞ்ஞானம் மற்றும் சமூகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறைகள், சமூகத்தின் மீது அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம், மூடநம்பிக்கைகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல், கிராமப்புற வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் பெண் சமத்துவம் ஆகிய தலைப்புகள் சார்ந்து பிரச்சினைகளை நெருக்கமாக உற்றுநோக்கி தெளிவாக ஆராய்ந்து பொருத்தமான கேள்விகளை எழுப்பி பின்பற்றத்தக்க மாதிரிகளை உருவாக்கலாம். தீர்வுகளை முன்மொழிதல், மாற்றுத்தீர்வுகளை முயற்சித்தல், கள ஆய்வுகள் செய்தல் மற்றும் பரிசோதனைகள் மூலம் ஆய்வுகள் செய்வது வரவேற்கத்தக்கது.

பங்கேற்கும் தகுதியுடையவர்கள்:

v 17-23 வரையுள்ள அனைவரும் (கல்லூரி செல்லாதவர்களும்கூட) பங்கேற்கலாம்.

v 2 முதல் 4 நபர்கள் குழுவாக இணைந்து செயல்படவேண்டும்.

v ஒரு ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர் இருக்கவேண்டும்.

vவழிகாட்டி ஆசிரியர் கல்லூரிப் பேராசிரியராகவோ, கல்வியாளராகவோ, சமூக ஆர்வலராகவோ இருக்கலாம்.

v ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சம் 3 ஆய்வுகள் சமர்ப்பிக்கலாம்.

ஆய்வுக்கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்? :

v ஆய்வுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தயாரிக்கலாம்.

vஆய்வுகள் அவசியம் பதிவு செய்யப்படவேண்டும். ஒவ்வொரு ஆய்வுக்கும் பதிவுக்கட்டணமாக ரூ.100/-க்கு வரைவோலை Tamilnadu Science Forum என்ற பெயரில் சேலம் மாநகரில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.

vபுதுமையான, எளிமையான மற்றும் நடைமுறைக்கேற்றவாறு ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

vஅன்றாட வாழ்க்கைமுறைகளை, சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும்.

vகளப்பணி விபரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

vதகுதியான,பொருத்தமான எளிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல் வேண்டும்.

vஅறிவியல் முறைகள் மூலம் திட்டமிட்ட பலன்கள் கிடைப்பதாக மைய வேண்டும்.

vநிச்சயமான தொடர் கண்காணிப்பு முறைகள் இருக்க வேண்டும்..

vஅனுப்பக்கூடிய ஆய்வுகள் ஆய்வுத்தலைப்பு, குழுத்தலைவர் பெயர், வழிகாட்டி ஆசிரியர் பெயர் மற்றும் பணிபுரியும் நிறுவனப்பெயர், பொருள், ஆய்வுச்சுருக்கம் (20வரிகளில்), கருத்து, வழிமுறை, முடிவு, விவாதங்கள், சான்றுகள் உள்ளிட்ட  தகவல்களுடன் இருக்கவேண்டும்.


மதிப்பீடு மற்றும் பாராட்டு:

vஉடல் ஆரோக்கியம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்- இவைகளுக்கு தனித்தனியாக ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்படவேண்டும்.

vதேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினைகளின் முக்கியத்துவம், புள்ளி விபரங்கள் சேகரித்தல், ஆராய்தல், பரிசோதித்தல், பயன்படுத்துதல், தீர்விற்கு முயற்சித்தல், குழுவாக செயல்படுதல் இவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்படும்.

v ஒவ்வொரு பிரிவின் கீழும் சிறந்த 10 ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்படும்.

vஇம்மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

vதேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்.

முக்கிய தேதிகள்:

v பதிவு செய்வதற்கான கடைசி நாள்:
  ஜூலை 31, 2012

v ஆய்வுக்கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசி நாள்:
  செப்டம்பர்,25,2012

v தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் அறிவிக்கப்படும் நாள்:
  செப்டம்பர்,30,2012

v மாநாடு நடைபெறும் நாள்: அக்டோபர்,6&7.2012 இடம்: சேலம்

மேலும் விபரங்களுக்கு: www.tnsftheni.blogspot.com
முனைவர்.ஜி.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
இளைஞர் அறிவியல் திருவிழா
தாவரவியல் துறை,
கருத்தராவுத்தர் கலை அறிவியல் கல்லூரி,
உத்தமபாளையம்..
செல்: 9865073411
                                                     மாவட்டச் செயலாளர்

Jul 7, 2012

சூரியனைக் கடந்தது வெள்ளி: தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் மாணவர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

கம்பம், ஜூன். 6: சூரியினை நேர்கோட்டில் வெள்ளி கடக்கும் அரிய காட்சியை தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் புதன்கிழமை கண்டு ரசித்தனர்.சூரியனை நேர்கோட்டில் வெள்ளி 121.5 ஆண்டுகளுக்கு பின்னர், வரக்கூடிய அடுத்த 8 ஆண்டு இடைவெளியில் வெள்ளி இரண்டு முறை சூரியனைக் புதன்கிழமை கடந்தது. இதேபோன்ற நிகழ்வு 1882 டிசம்பர் 6-ம் தேதி 2004 ஜூன் 8-ம் நாள் சூரியக் கடப்பு நிகழ்வு நடைபெற்றது. அதைபோல் நிகழ்வு புதன்கிழமை காலை 6.30 மணியிலிருந்து காலை 10.20 வரை நடந்தது. இதன் பிறகு 2117-ம் ஆண்டு டிசம்பர் 11 நாளும், 2125 டிசம்பர் 8 நாளும்தான் இந்த அரிய சூரிய கடப்பு நிகழ்வு நடைபெறும் என்பதால் இந்த நூற்றாண்டில் முக்கியத்துவமான நிகழ்வகாக கருதப்பட்டது.தமிழ்நாடு அறிவில் இயக்கத்தின் சார்பில், மாவட்டத்தில் கூடலூரில் 2 இடங்களிலும், கருநாக்கமுத்தன்பட்டி ராமன் துளிர் இல்லம், சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி, நாராயணத்தேவன்பட்டி பெயர்டு துளிர் இல்லம், போடி-சிலைமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வை காணவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து என்பதால் சூரியக் வடிகட்டி கண்ணாடி, தொலை நோக்கி (டெலோஸ் கோப்), முகம்பார்க்கும் கண்ணாடி, ஊசித் துளை கேமரா உள்ளிட்ட சாதனங்களை கொண்டு மாணவர்களுக்கும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி மறைப்பு குறித்து கருத்துரைகள், படக்காட்சி, விளக்கம், போஸ்டர் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர்களான வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், தெய்வேந்திரன், சிவாஜி, ஜெகதீசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்காண மாணவர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
DINAMANI

கருத்தரங்கம்


தினமலர் : 9 ஜூன், 2012: கூடலூர்: 
 
விண்ணில் நிகழ்ந்த வெள்ளி கிரக இடைமறிப்பு பற்றிய விளக்க கருத்தரங்கம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பூங்கா நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது.

பள்ளித்தலைமை ஆசிரியை மெர்சி தலைமையில், அறிவியல் இயக்க கம்பம் கிளை செயலாளர் முத்துக்கண்ணன் வரவேற்றார். வெள்ளி இடைமறிப்பு பற்றிய விளக்க கையேடு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட கருத்தாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் சுருளிராஜ், கஸ்தூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளத்தில் அறிவியல் திறனறிதல் தேர்வு

பெரியகுளம், ஏப். 19-
 தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் திறனறிதல் தேர்வு 2012 நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் புஷ்பராஜ் சேவியர், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ராம்சங்கர் வரவேற்று பேசினார். விழாவில் நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பெரியகுளம் நகரசபை தலைவர் ராஜா, மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார்மைதீன், மேற்பார்வை யாளர் விஜயகுமார், கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், ஸ்டேட் வங்கி மேலாளர் வெங்கட்ராமன், டாக்டர் செல்வராஜ், கிளை துணைத் தலைவர் செல்வராஜ், முத்துமணிகண்டன்,
மாங்கனி அரிமா சங்கத் தலைவர் சிவபாலு, ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவினை கார்த்திகேயன், ஆனந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில் கிளை துணை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார். 
-MALAIMALAR