முதல் பக்கம்

Nov 30, 2011

இளம் விஞ்ஞானி விருதுக்கு கூடலூர்,விக்ரம் சாரபாய் துளிர் இல்ல ஆய்வுக்குழு மாணவர்கள் தேர்வு

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து நடத்திவரும் மாநாடு, மிகப்பெரிய அறிவியல் விழிப்புணர்வு இயக்கமாக நடந்துவரும் தேசிய அளவிலான அறிவியல் திருவிழாதான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மூன்று கட்டங்களில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த நவம்பர்,13ம் தேதி பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் மாவட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் முப்பது பள்ளிகளில் இருந்து 57 மாணவ ஆய்வுக்குழுக்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 7 ஆய்வுக்கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

மாநில அளவிலான மாநாடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழிநுட்பக்கல்லூரியில் கடந்த நவம்பர்,24,25,26 தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இண்டர்நேஷனல் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், துளிர் இல்லங்கள் என பல்வேறு விதமான பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 ஆய்வுக்குழுக்கள்/ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்  29 மாவட்டங்களிலிருந்து பங்கேற்று தமிழ்-முதுநிலை, தமிழ்-இளநிலை, ஆங்கிலம்-முதுநிலை, ஆங்கிலம்-இளநிலை என நான்கு பிரிவுகளில் தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
தேனி மாவட்டத்திலிருந்து  தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி, முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லம் ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.

தேசிய அளவிலான மாநாட்டிற்கு சிறந்த 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தமிழ்-முதுநிலை பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் பொ.சுரேந்தர், தினேஷ்குமார் , பகவதிராஜ், தீபன், சுபாஷ் ஆகியோர் மேற்கொண்ட வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் மனிதர்களால் ஏற்படும் மாசுபாடும் அதற்கான தீர்வுகளும் என்ற ஆய்வும் ஒன்று. ஆய்வு மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர் க.முத்துக்கண்ணன். தேர்வான இவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.முருகேச பூபதி அவர்கள் பாராட்டுச்சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கினார்.
இந்த மாணவர்கள் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்குழுத்தலைவர் பொ.சுரேந்தர் வருகின்ற டிசம்பர் 27-31 தேதிகளில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளார். மாநாட்டின் நிறைவில் இளம் விஞ்ஞானி விருதும் நினைவுப்பரிசும் வழங்கப்படவுள்ளது. குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொள்வார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரின் சார்பில் தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
SUNDAR.D





Nov 28, 2011

கூடங்குளம் அணுமின்நிலையம்- விஞ்ஞான விளக்கக் கருத்தரங்கம்,தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி வட்டாரக்கிளையின் சார்பில் கடந்த நவம்பர்,22ம் தேதி மாலை 6 மணிக்கு தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த விஞ்ஞான விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழு எஸ்..சேசுராஜ் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் இந்தியாவின் அணுசக்தி வரலாறு, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அணுமின்நிலையங்களின் செயல்பாடுகள், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் நிலைமை ஆகியவை குறித்து கருத்துரை வழங்கினார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் பேசினார். கிளைப்பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2011,23:36 IST

பெரியகுளம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில், குழந்தை விஞ்ஞானி விருதிற்கான 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் பெரியகுளத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர், பொருளாளர் சிவாஜி, பெரியகுளம் கிளை தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ராம்சங்கர் வரவேற்றார். மாநிலசெயலாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசினர். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலிருந்தும் 280 மாணவர்கள், 57 குழுக்களாக அறிவியல் ஆய்வுகளை சமர்பித்தனர்.தமிழ் இளையோர் பிரிவில், பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி. தமிழ் மூத்தோர் பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நன்றி: தினமலர்

பிரெஞ்சு வேதியலாளரும்,மருந்தக பட்டியலின் முதன்மையாலருமான ,நிக்கோலஸ் லேமேரி (Nicolas Lémery (November 17, 1645 – June 19, 1715) பிறந்த தினம்




நண்பர்களே, ஏராளமான அறிஞர்கள் வேதியலுக்கு பங்களித்து இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் பிரெஞ்சு வேதியலாளரும்,மருந்தக பட்டியலின் முதன்மையாலருமான ,நிக்கோலஸ் லேமேரி (Nicolas Lémery (November 17, 1645 – June 19, 1715) பிறந்த தினம் இன்று. நிக்கோலஸ் பிரெஞ்சு நாட்டில் ரூன் (Rourn) என்ற ஊரில் பிறந்தார்.அமில-கார வேதியலின் கொள்கைகளை உருவாக்கியவர்களில் ஒருவர்.நிக்கோலசின் தந்தைஜூலின் லேமேரி, நார்மண்டி பாராளுமன்றத்தின் வழக்கறிஞர்.நிக்கொலசுக்கு 11 வயதாகும்போதே அவரின் தந்தை மறைந்து விட்டார். ஆனால் அவர்களின் குடும்பம், பாரம்பரியமாக ரூனின் நீதியரசர் தொழிலைப் பார்த்து வந்தது. அவரது குடும்பம் செல்வ செழிப்பு மிக்கதும் கூட. அவரது மாமாவுடன் இணைந்து மருந்தகத் தொழிலைப் பார்த்தார். MD வரை படித்தார். . .நிக்கொலஸ் வேதியலுக்கு இரண்டு முக்கியமான பங்களிப்புகள் செய்தார். மருந்தகத் துறையின் அகராதி/கலைக்களஞ்சியத்தை எளிமையாக 1698 ல் தொகுத்து அளித்தவர் இவரே. அடுத்து இன்னொரு முக்கியமான பணி ஆண்டிமணி தாதுவை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும், அதன் குணங்கள் பற்றியும்,கண்டுபிடித்து தெளிவாக பதிவு செய்து வைத்துள்ளார்.
s
-- S Mohana <mohanatnsf@gmail.com>

ஈரோடு - வாசிப்புமுகாம்


6,7 நவம்பர் 11 இரண்டு நாள் ஈரோட்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த இரண்டு நாளும் நம்மை உலுக்கியெடுத்த நாட்கள். வாசிப்பின் முழுமையான அர்த்தத்தை உணர்த்தியவை. வாசிப்பிற்கு என்று தேர்வு தேவை என்பதை உணர்த்திய முகாம். நாம் யாராக இருக்க வேண்டும் என்கிறோமோ அதற்கான புத்தகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உணர்த்திய முகாம். குறிப்பாக ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுக்கு இன்றைய கல்விச்சூழலில் என்னமாதிரியான அனுகுமுறை தேவை? அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடையாக வாசிப்பு ஒன்றே என்பதை ஏற்கொள்ளச்செய்த முகாம். அதற்காக ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள் பற்றிய அறிமுகம். எந்த மாதிரியான நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்ற வழிகாட்டல் ஆசிரியர்களுக்கு கிடைத்த அற்புதமான முகாம். முகாமில் நடைபெற்றவற்றை முழுமையாக எழுத்தில் கொண்டுவருவது என்பது சால சிறந்ததாக இருக்கும். ஆனால் என்னால் அந்த அளவிற்கு  கொண்டு வர இயலுமா என்பது தெரியவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்கிறேன். இதில் தலைமை அறிமுகம் குறித்த விசயங்களை நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் அங்கே நடைபெற்ற விவாதம், உரை, கருத்துக்கள் ஆகியவற்றை சுருக்கிய வடிவில் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.

              மதுரையிலிருந்து நானும் இந்திராவும் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டுநாள் வாசிப்பு அரங்கத்தில் பங்கேற்றோம். எங்களோடு சுமார் 28 பேர் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் மிகச் சிறந்த அனுபவம். ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள நிமிடமாக அமைந்தது. வாசிப்பும் விவாதமும் மிகத்தரமாக அமைந்திருந்தன. ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கமலாலயன் ஆகியோரின் பங்கும், பங்களிப்பும் மறக்க முடியாத அனுபவம். உலகலாவிய டைரி குறிப்பு குறித்த கருத்துரை கமலாலயனின் வாசிப்பின் முதிர்ச்சியை நம்மால் உணரமுடிகிறது. வாசிப்புக்காக தன்னுடைய வாழ்க்கைய தொலைத்தவர் கமலலாயன் அவர்கள். அவரை மதுரையில் 90களின் மையப்பகுதியல் தொடங்கப்பட  BGVS  கருத்துககூத்தில் பார்த்தபோது இருந்த அதேவேகம் வாசிப்பில் தற்போதும் இருப்பதை பார்க்கும் போது மிகுந்த வியப்பை எனக்கு ஏற்படுத்தியது.  வாசிப்பின் வேகத்தில் கொஞ்சம் கூட அவரிடம் குறையவில்லை.
                   BGVS கருத்துக்கூடத்தில் அவர் கொடுத்த நூலகத்தின் வரலாறு என்னை இன்னும் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.   BGVS கருத்துக்கூடம் ஒரு பொக்கிஷமாக விளங்கிய காலம் அது. கருத்துக்கூடத்தில் வளர்ந்ததில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். கருத்துக்கூடம் வாசிப்பு இயக்கத்தை நடத்தியபோது ஏற்பாட்ட அனுபவத்தை முன்வைத்து கமலாலயன் அவர்கள் அன்றைய முதல் உரையை முன்வைத்தார். விருது நகர் கன்னிசேரி புதூர் கிராமத்தில தக்காளி விற்றுவிட்டுச் சென்றவர் 4 ரூபாய்க்கு புகத்தகம் வாங்கிச்சென்றார். மாட்டு வண்டியில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வாசிப்பை மேம்படுத்துவதற்காக கிராமம் கிராமமாக சென்றது இன்னும் என் மனக் கண்ணுக்குள் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மக்களை ஒன்று திரட்டுவதற்காக கிராமம் கிராமம்மாக சென்றதாக கமலாலயன் தன்னுடைய நூலக வரலாறு என்ற கட்டுரையில் சொல்லியிருந்தார். அதற்கடுத்தார்போல் கருத்துக்கூடத்தில் தான் அறிவொளிக்கு பிறகு இந்த மாட்டுவண்டி பயணம் நடைபெற்றது. கிராவின் காய்ச்ச மரம் புத்தகத்ததை வாசித்து காட்டியபோது தீப்பெட்டித்தொழிற்சாலையில் பணி செய்த பணியாளர்கள் கண்ணீர் சிந்தியதை பார்க முடிந்தது . ( ஒரு புத்தகத்தின் விலை 1 ரூபாய் மட்டுமே. இதில் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த புத்தகங்களும், வெளிநாட்டு ஆசிரியர்களின் மிகச்சிறந்த புத்தகங்களும் கருத்துக்கூடத்தின் வாயிலாக புதிய கற்றோருக்காக எளிய வடிவில் பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களைக்கொண்டு உருவாக்கி கொடுக்கப்பட்டவை) அனுபவம் என்பது வசிப்பு இயக்கம் நடைபெற்ற பெரும்பாலான கிராமங்களில் காணப்பட்ட ஒன்று. இன்றைக்கு ஈரோட்டில் நிறைவுறும் ஓராண்டு வாசிப்பு இயக்கமானது பல அனுபங்களை ஆசிரியர் மத்தியில் ஏற்படுதுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    உரையின் தொடர்ச்சியாகஅவர் பேசும் போது பொதுவாகவே (டைரி) நாட்குறிப்புகளை எழுதுவது என்பதை யாரும் விரும்பாததற்கு காரணம் நாம் எதிலும் மாட்டிக்கொள்வோமோ என்ற நினைவுதான். சில சமயங்களில் அதுவும் உண்மைதான். ஆனால் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் அந்த அந்த காலக்கட்டத்தின் நிலைகளை உணர்துகிறார்கள் என்தை நாம் பார்க்க வேண்டும்.
      பாண்டிச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்பு பிரபஞ்சன் என்ற எழுத்தாளரை 2 நாவல்கள் எழுத தூண்டியது என்றால் அந்த நாட்குறிப்பின் அவசியம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த நாட்குறிப்பைக்கொண்டு பிரஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது தினம்தோறும் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த நாட்குறிப்பு. உணர்வுகளின் சொற்கம் அந்த நாட்குறிப்பு.
          மார்களி மாதங்களில் பெண்கள் பாடுகின்ற திருப்பாவை என்பதும் 30 நாட்கள் எழுதப்ட்ட நாட்குறிப்புதான். ஆண்டாள் எழுதிய நாட்குறிப்பில் ஒரு இளம் பெண்ணின் உள்ளக்குமுரலை நாம் பார்க்கலாம்.

            யூத குடும்பத்தைச் சேர்ந்த ஆனி ஃபிராங் என்பவர் எழுதிய  நாட்குறிப்பு கிட்லர் காலத்தில் ஜெர்மன் நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளதை நாம் பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டு காலம் ஒரு தனியரையில் தாய்தந்தையுடன் தங்கியிருந்தபோது எழுதிய நாட்குறிப்பு இது. போருக்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத சாதாரண குடிமக்களின் துன்பத்தை போரின் போது அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கண்முன் நிறுத்தச்செய்வது இந்த நாட்குறிப்பு. இதே போல அனோனிமா வின் நாட்குறிப்புகள் இரஷ்ய படைகளின் அட்டூலியத்தை காட்டுவதை நாம் பார்க்கலாம். விடுதலைக்காக போராடுகிற ராணுவத்தினரும், சர்வதிகாரத்திற்காக போராடுகிற ராணுவத்தினரும், செயல்பாடுகளில் எந்தவித மாறமும் இருப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள இந்த இரண்டு நாட்குறிப்புகளும் உதவும்.



            கியூபாவின் புரட்சிக்கு வித்திட்ட டாக்டரின் மோட்டார் சைக்கிள் நாட்குறிப்பு நமக்கு ஒரு புதிய வழியைக் காட்டும்.

நடிகர் சிவக்குமாரின் டைரிக்குறிப்பு அவர் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதியவை. மிகச்சிறந்த பதிவுகளை கொண்டவை. ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின டைரி ஒருமிகச்சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்களுக்கு உதவுவதாக உள்ளது.

இது போன்ற உலகலாவிய நாட்குறிப்புகள் பல உள்ளன. அவைகளை நாம் தேடி படிக்கும் போது ஒரு உத்வேகம் வரும். நீங்கள் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் வருங்கால சந்ததினருக்கு இன்றைய சமூகத்தை காட்டுவதற்கு உதவுகிறீர்கள் என்பது அர்த்தமாகிறது. மேலும் ஆசிரியர்கள் தங்களது வகுப்பறை அனுபங்களை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யும்போது மேலும் நம்மை செலுமைப்படுத்த அந்த நாட்குறிப்பே கூட உதவும். தினம்தோறும் எழுதுவது முடியவில்லை என்றாலும் கூட குறிப்பிட்ட நிகழ்வு உங்களை பாதித்த நிகழ்வை எழுதி வைக்கலாம். இப்போது முதல் நாம் அனைவரும் நாட்குறிப்பு எழுதுவது என்ற உந்துதல்லோடு செல்லலாம் என்று அந்த உரையை முடித்தார்.

அதைத்தொடர்ந்து ஆசிரியரின் அனுபவக்குறிப்பு குறித்து நண்பர் சுடரொளி அவர்கள் சென்னையில் நடைபெற்ற வாசிப்பு முகாமில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்துகொண்ட அனுபங்கள் காலம் கடந்தும் காயங்கள் ஆறவில்லை என்பதை நமக்கு காட்டியது.

ஒரு ஆசிரியர் தண்டனை குறித்த தன் அனுபவத்தை சொன்னபோது

வகுப்பின் இடைவேளை முடிந்து எல்லோரும் வகுப்புக்குள் புகுந்தனர். ஒரு மாணவிமட்டும் வகுப்பறைக்குள் டிப்பன் பாக்ஸை திறந்து அதிலிருந்த வாழக்காய் துண்டை எடுத்து போட்டு்ள்ளார். சரியாக அந்த நேரம் பார்த்து அந்தவகுப்புக்குள் ஆசிரியை வர அம் மாணவி பாக்ஸை மூடிவிட்டு வாழக்காயை தின்னவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்திருக்கிறார். ஆசியை அம் மாணவியை கூப்பிட்டு வாயை திறக்கச்சொல்லி வாயுக்குள் இருப்பதை ஒவ்வொரு மாணவியிடமும் காட்டிவிட்டு வா! என்று சொல்லி அனுப்பியுள்ளார். அம்மாணவியும் அவ்வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளிடமும் வாயை திறந்தாற்போல காட்டி முடித்தப்பின்னரும் விட்டாரா அந்த ஆசிரியை? இதே போல பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புக்கும் சென்று காட்டி வா என்று சொல்லி, இவள் காட்டுகிறாளா என்பதை கண்காணிக்க ஒரு மாணவியையும் சேர்த்து அனுப்பியுள்ளார் அந்த ஆசிரியை. இப்படியொரு தண்டனையை நாம் யோசிக்க கூட முடியவில்லை. ஒரு மாணவனை அல்லது ஒரு மாணவியை அடிப்பதைக்காட்டிலும் பெரிய தண்டனை இது. இந்த அனுபவத்தைச் சொன்ன ஆசிரியை கண்ணீர் வடித்துவிட்டார். இந்த தண்டணை பெற்றவர் அல்ல இவர். இவர் அந்த மாணவியை கண்காணிக்கச்சென்றவர்.

மற்றொரு அனுபவம், தண்டனை என்னவோ பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கின்றோம். இரு ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒரு ஆசிரியர் பெற்ற அனுபவம். ஆசிரியர் பயிற்சியில் பயிலும் ஆசிரியர்கள் தங்களை தலை முடிகளை சடை போட்டு கொண்டை போட்டுத்தான் வரவேண்டும். ஒரு நாள் இவர் கொண்டை போடாமல் போய்விட்டார். இதைப் பார்த்த அந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் அவர் தலைமுடியை பிடித்துக்கொண்டே போயி வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் முன்னிலையில் "இவலெல்லாம் டீச்சராகி ஒழுக்கத்தைக் கத்துக்கொடுக்க"  என்று திட்டிவிட்டு சென்று விட்டார். இந்த செய்கைக்கு பின்னர் அந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முயன்று தன் குடும்ப சூழலை நினைத்து அதை கைவிட்டுவிட்டார். பின்னாலில் அவர் ஆசிரியரானதும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை கைமொட்டிகளிலேயே அடித்துள்ளார். கையெழுத்து சரியில்லை, நகம் வெட்டவில்லை, தலைவாரவில்லைஎன்றால் போதும் கை மொட்டி பேர்ந்துவிடும். அந்த ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் முத்து முத்தாக எழுதுவார்கள் என்ற நல்ல பெயரை எடுத்துள்ளார். ஆனால் அதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர் உணரவே இல்லை. தெரியவும் இல்லை. இனிஇந்த மாதிரிசெய்யமாட்டேன் என்று அந்த ஆசிரியை முடிவெடுக்கச்செய்தது ஆய்ஷா என்ற சிறிய புத்தகம்.

இது போன்ற பல அனுபங்களை சுடறொளி பகிர்ந்துகொண்டார். தண்டணை என்பது பிரம்பால் அடிப்பது மட்டுமல்ல மேலே சொல்லப்பட்டது போல தண்டனைகளும்தான். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் தூங்குகிறான் என்றால் எல்லோரும் பார்க்க "டேய் எழுந்திரு போய் முகம் கழுவிவிட்டு வா" என்பது கூட ஒரு விதமான தண்டனைதான் என்றார். இது போன்ற தண்டணைகளை நாமும் கொணடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இதை தவிற்பதற்கும் இந்தமாதிரி தண்டணைகளை கண்டறிந்து கொள்வதற்கும் வாசிப்பு முகாம்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

பின்னர் கமலாலயன் மொழி பெயர்த்திருந்த பாவ்லோஃபிரெய்ரேவின் எதார்தத்தை வாசித்தலும் – எழுதுதலும் என்னும் சிறிய நூல் அச்சுக்க போகாமலே வாசிப்பறங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்மீது விவாதமும் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக இந்த நூலை கல்வியாளர் பாண்டிச்சேரி ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

பாவ்லோஃபிரெய்ரே 1979ல் இந்தியாவிற்கு வந்திருந்தபோது ஆய்வு மாணவர்களுக்கு உரை நிகழ்த்த கூப்பிட்டபோது அவர்சொற்பொழிவிற்கு பதிலாக குழு விவாதங்களில் பங்கேற்க இயலுமானல் தமக்கு மிக்க மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார் என்பதிலிருந்தே அவர் மக்களுடன் எவ்வளவு நெருக்கமுடன் இருந்துள்ளார் என்பதை நமக்கு காட்டுகிறது. ஜே.கே அவர்கள் அந்நூலி சில முக்கிய பகுதிகளை சுட்டிக் காட்டினார். அவை

           



# எனது நாட்டில் நான் (பாவ்லோஃபிரெய்ரே) சிறையினுள் இருந்த காலம் அது 1.70 மீட்டர் நீளமும் 60சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெட்டியினுள் சிறைப்பட்டிருந்தேன். சிறையினுள் இருந்தவாறு வெளியே இருந்த புற உலகத்தைப் பற்றி என் கற்பனையில நான் சிந்திக்க முடியும், என் மனைவியும் – குழந்தையும் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் நான் சுதந்திரமாக வெளியே போக வேண்டுமென்றால் வெளியே போவதற்குரிய வாயிற்கதவைத் திறந்தால்தான் முடியும் என்பதைக் கூற வேண்டியதில்லை.



# சமூக வர்கங்களுக்கு அழுத்தம் தந்து சொல்லுவதற்கு பதிலாக நான் (பாவ்லோஃபிரெய்ரே) மக்கள் என்பதற்கு அழுத்தம் தந்திருகுக்கிறேன். மக்கள் என்ற கருது கோள் மிகவும் மூடகமானது.



# சமூகத்தின் கலகத்தன்மை மிக்க உருவமாற்றம் தன்னளவில ஒரு புரட்சியாக அமைந்திருப்பது ஒரு கல்விசார்ந்த நடவடிக்கை



# ஒரு புதியக்குழுவுடன் நாம் சேர்ந்து பணியாற்றும் போது நம்முடைய வார்ததையை மேலதிகம் அதிகமாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கண்டறிவோம் எனும் பட்சத்தில் 50٪ ஆசிரியர்களாகவும் 50٪ மாணவர்களாகவும் ( நாம் நம்மை ஆக்கிக் கொண்டு) தொடங்குவது மிக நன்றாக இருக்கும். முற்றிலுமாக ஆசிரியர்கள் மட்டுமாய் இருப்பதிலிருந்து நாம் மரணித்து, ஆசிரியர் – மாணவர் என்று மீண்டும் மீள்பிறப்பு எடுப்பதற்கான செயல் முறைக்கு இது உகந்ததாக அமையும். மேலும் முற்றிலும் மாணவர்களாக மட்டுமிருந்த நிலையிலிருந்து மரணித்து மீண்டும் மாணவர் – ஆசிரியர் என மீள்பிறப்பு எடுப்பதற்கு வருமாறு மாணவர்களை அழைப்பதற்கும் இது உகந்த செயல்முறையாக இருக்கும்.



# வரலாற்றை உருவாக்குவதன் வழியாக வரலாற்றில் நாம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். வரலாறு இலவசமாக உருவாக்கப்பட முடியாத ஒன்று. உலகை நீங்கள் இலவசமாகக் கடந்து செல்ல முடியாது.



            இந்த நூல் குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இறுதியில் கமலாலயனும், ஜே.கேவும் தொகுத்து விளக்கினர். மொழிபெயர்ப்பு புத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே மொழிபெயர்கப்பட்டுள்ளதால் கருத்து பிறளாமல் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு அப்படியே செய்ததால் முதல் சில பக்கங்கள் புரிவதில் சிறமம் ஏற்பட்டது. மேலும் சில புதிய வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொழிப்பெயர்ப்பாளரின் சிந்தனை அந்த நூலை அவர் சொல்லியபடியே கொடுக்க வேண்டும் என்பதுதான் போலும். இதனால் தான் இல்லை, இல்லை, இல்லை என்பது போன்றவை பல இடங்களில் பல முறை வருகின்றன. இந்த நூல் இன்னும் வரவில்லை என்றாலும் கூட இந்நூலை ஒவ்வொரு ஆசிரியரும் படித்தறிய வேண்டிய நூல் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.



            ஜான்ஹோல்ட்  எழுதிய ஆசிரியரின் டைரி என்ற நூல் முழுமையாக வந்திருந்த ஆசிரியர் குழுவால் வாசித்து முடிக்கப்படது. அதற்காக நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டன. புத்தகத்தில் உள்ள பிரிவுகளை உள்ளடக்கி நான்கு குழுக்களும் புத்தகத்தை முழுமையாக வாசித்து இறுதியில் விவாத்தில் ஈடுபட்டன. புத்தகத்தில் பிரிக்கப்பட்டுள்ள நான்கு தலைப்புகள்

திட்டமிடல்
பயமும் தோல்வியும்
உண்மையை கற்றல்
இந்த கல்வி முறை ஏன் தோற்கிறது?

ஜான்ஹோல்ட் தன்னுடைய வகுப்பறையில் நடைபெற்ற சம்பவங்களை மட்டம் குறிப்பிடவில்லை. தன்னுடைய சக ஆசிரியர்களின் வகுப்புகளில் சென்று அமர்ந்துகொண்டு அவர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதையும் உன்னிப்பாக கவனித்து அதையும் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியுள்ளார். பொதுவாகவே ஜான்ஹோல்ட் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கொடுத்தமாதிரி தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சம்பவத்தையும் தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட தவறவில்லை. ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின் டைரி ஒரு மாணவனை புரிந்துகொள்ளவும் , வகுப்பறையை தெரிந்துகொள்ளவும், கல்விமுறையை அறிந்துகொள்ளவும் உதவும். நூலை வாசிக்கும் போது அட அடடே இது போல நமது வகுப்பில் கூட மாணவர்கள் இருக்கின்றனறே! என்று நம்மை நமது மாணவர்களை அடையாளம் காட்டும்.  இந்நூலை படிக்கும் போது நாம் மாணவர்கள் பற்றிகொண்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். ஜான்ஹோல்ட் இவர் ஒரு ஆசிரியர் அல்லாத ஆசிரியர். அதாவது ஆசிரியர் பயிற்சி பெறாதவர். அதனால்தான் அவர் சுதந்திரமாக சிந்தித்துள்ளார். அவர் ஒருமுறை கூறும்போது "பள்ளி நடைமுறைகள் குழந்தைகளின் இயற்கையான கற்கும் திறனுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்னும் அதிர்ச்சியூட்டும் முடிவுக்கு வந்துள்ளார்.

            ஜான்ஹோல்டை படிக்கும் போது இன்னும் இரு நபர் என் கண்முன் வந்து சென்றார். அவர் விஞ்ஞானி " மெண்டல்". மெண்டலும் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்தான். அவரும் ஆசிரியர் பயிற்சி பெறாத ஆசிரியர்தான். அவர் ஒரு பாதிரயார் என்பதால் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து பதிலி ஆசிரியராக பல ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார். இவர் வகுப்பறை மட்டும் எப்போதும் சத்தமாகவும் கூச்சலாகவும் இருக்குமாம். இல்லையென்றால் அவர்கள் வகுப்பறையை தோட்டத்திற்கு கொண்டு சென்றுவிடுவாராம். இயற்கையை மாணவர்களுக்கு மெண்டல் கற்று கொடுத்துள்ளார். இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த காதல்தான் அவரை பரம்பரையைப்பற்றிய அறிவை வெளிக்கொணரச்செய்துள்ளது. இவரும் கடைசிவரை ஆசிரியராகவே அங்கீகரிக்கப்படவில்லை.

           

            ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின் டைரி குறித்து நடைபெற்ற விவாத்ததை முழுமையாக எழுதினால் இந்த இடம் போதாது. புத்தக வாசிப்பில் நீங்கள் அதை உணர்வீர்கள். மறக்காமல் ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல்.

           

ஈரோட்டில் வாசிப்பு முகாம் தொடங்கி ஓராண்டு நிறைவை ஒட்டி நிறைவுரை ஆற்றுவதற்காக எழுத்தாளரும், சிந்தனையாளருமான எஸ். ராமகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்பதற்காக ஈரோட்டில் இருந்த சிலரும் கூடுதலாக இணைந்திருந்தனர். அவரது உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் மூன்று நாள் 200 ஆசிரியர்களோடு இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் ஆசிரியர்கள் கதை சொல்லுவதும், கதை கேட்பதும் இல்லை. இதனால் அவர்களிடம் கற்பனை வளம் வறண்டு காணப்படுகிறது.பல்வேறு உதாரணங்களை அதற்காக அவர் முன்வைத்தார். மேலும் குழந்தைகள் வியப்படைவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வியப்பை ஏற்படுத்துகிற நிகழ்வு வகுப்பறைகளில் நிகழ்கிறாதா? என்பது கேள்வியாக உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் ஏதோ ஒருவகையில் சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை ஆசிரியர்களுக்க தெரிவதில்லை.  தொலைக்காட்சி பெட்டி நம்மாணவர்களை அடிமை என்ற சொல்லை பயன்படுத்த சொல்லிக்கொடுக்கிறது. அடிமை என்ற சொல்லை நீக்குவதற்கு 50 ஆண்டுகால போராட்டத்தில் பலரின் உயிர் தியாகத்தில் நீக்கப்பட்டவை. லெகுவாக நம் குழந்தைகளின் மூளைகளில் போட்டுவிட்டு போய்கொண்டே இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் பல்வேறு உதாரணங்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவருக்கே உரிய பாணியில் கொடுத்துக்கொண்டே சென்றார். இறுதியாக அவர் சொன்னது ஆசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்யும் இடத்தின் வரலாற்றையும் அதன் சுற்றுப்புறத்தை அறிந்து வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் உணராமல் கற்று கொடுத்தல் என்பது ஈடு பாட்டை ஏற்படுத்தாது. எனவே கிடைக்கும்போதெல்லாம் ஆசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். அடுத்து அவர்கள் படிக்கத்தவறக்கூடாது. பல நூல்களை படிக்க வேண்டும். முக்கியமாக 5 நூல்களை உடனடியாக படிக்க வேண்டும் என்று எஸ். ராமகிருஷ்ணன் சொன்ன நூல்கள்

1. எண்ணும் மனிதன் 2. கெலன் மிலர் 3. அற்புத உலகம் 4. ராபின்சன் குருசோ 5. ........................  நான் எஸ்.ராவின் உரை முடிந்த பிறகு விவாதம் தொடங்கியது. என்னால் இருக்க முடியாத நிலையில் விவாத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

      இந்த வாசிப்புமுகாம் இரண்டு நாலும் உமி அளவிற்கு கூட நேரத்தை வீணடிக்கவில்லை. ஓய்வு என்ற பேச்சுக்கே இடமின்றி போயிற்று. இரவு 10மணிவரை முகாம் தொடர்ந்து இருந்தது. இதற்காக பாடுபட்ட ஈரோடு, சேலம், மாவட்ட த.அ.இ. நண்பர்களுக்கும் குறிப்பாக பேரா. முருகேசன், பேரா. மணி, பாலசரவணம் மற்றும் பலரும் பாராட்டுக்குறியவர்கள்.

அன்புடன்

மொ.பா. மதுரை.

Nov 16, 2011

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-நவம்பர்,13,2011 மாநில அளவிலான மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் இருந்து 7 ஆய்வுகள் தேர்வு



துவக்கவிழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் ஒருங்கிணைப்பில் குழந்தை விஞ்ஞானி விருதிற்கான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் நவம்பர் 13,2011 அன்று பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாநாட்டிற்கான துவக்கவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பெரியகுளம் கிளையின் தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தே.சுந்தர் மாநாட்டின் மைய நோக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்க உரையாற்றினார். திருமிகு.எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, திருமிகு. எல்.சசிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக்கருத்தாளர் முனைவர். எஸ்.தினகரன் சர்வதேச காடுகள் ஆண்டு-2011 பற்றி சிறப்புரையாற்றினார். பெரியகுளம் கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் நன்றி கூறினார்.

 
சிறந்த ஆய்வுகள் தேர்வு:

ஆண்டிபட்டி, தேனி, போடி, பெரியகுளம், கம்பம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 30 பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 280  குழந்தைகள் 57 குழுக்களாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 7 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.தமிழ்- இளையோர் பிரிவில் கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி  மாணவர்களும் தமிழ்-மூத்தோர் பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  மற்றும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆங்கிலம்-இளையோர் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலம்-மூத்தோர் பிரிவில் தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முனைவர்.மு.முகமது செரீப், திரு.அழகு, திரு.சேசுராஜ், திரு.எம்.மணிகண்டன், திரு.எஸ்.மனோகரன் திரு.ப.ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
 
நிறைவு விழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர். ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். எட்வர்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஜெயலட்சுமி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் திரு.முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.  தேனி மாவட்ட வன அலுவலர் திருமிகு. வி.கணேசன் குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி சிற்ப்புரையாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து  நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் அ.சதீஷ் மற்றும் வனக்காப்பாளர் வி.இராஜசேகரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். பேராசிரியர்கள், கருத்தாளர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், குழந்தை விஞ்ஞானிகள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு வன உயிரினங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி, சர்வதேச வேதியியல் ஆண்டை முன்னிட்டு வேதியியல்-நம் வாழ்க்கை,நம் எதிர்காலம் என்ற தலைப்பில் போஸ்டர் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

குறிப்பு: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற நவம்பர் 24,25,26 தேதிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர்  அவர்கள் துவங்கிவைக்கின்றார். தேசிய அளவிலான மாநாடு இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிசம்பர்,27-31 தேதிகளில் நடைபெறவுள்ளது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி பயிற்சி முகாம்

DINAKARAN
பதிவு செய்த நாள் 10/24/2011 10:4:23


பெரியகுளம் : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில், மாநில மற்றும் தேசிய அளவில் மூன்று கட்டங்களாக நடைபெறும். இம்மாநாட்டில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், ஆய்வு செய்யும் உத்திகள், சமர்ப்பிக்கும் நெறிமுறைகள், தலைப்பை தெரிவு செய்யும் முறைகள் ஆகியவற்றை விளக்குவதற்காக தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளை சார்பில் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது.பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் இராம்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தியாகராஜன் கலந்து கொண்டு ஆய்வுநெறிமுறைகள் தொடர்பான விபரங்களை எடுத்துரைத்தார். மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் பேசினார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை கற்பகம் நன்றி கூறினார்.

Nov 7, 2011

உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் ..தப்புட்டி பெலாட்டிகல்லிம் .!

அனைத்துமான வேதியல்..!

வேதியல் என்பது வாழ்வில் சுவையான ஓர் அத்தியாயம். அதனை தவிர்த்து நாம் வாழ இயலாது என்பது தெரியுமா..நண்பரே..!உங்கள வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும், ஒவ்வொரு செயலிலும் வேதியல் ஒன்றிப்போய் இருக்கிறதே..! யார் வாழ்க்கையானாலும் சரி, அண்டம் முதல், அமீபாவரை என்றாலும் சரி..! அமீபா முதல் ஏழாம் அறிவு வரை என்றாலும் சரி..! வேதியலின்றி, அதன் வினைச் செயல்பாடுகள் இன்றி, அவற்றைச் சந்திக்காமல் நாம் வாழவே முடியாது, அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்..கூட! பிரபஞ்சத்திலிருந்து, நம் உடலில் உள்ள அனைத்து செல்களிலும், உண்ணும் உணவிலும், பார்க்கும் கல், மண்ணிலும் வேதியியல் ஊடுருவி நிற்கிறது. நம் வாழ்வில் அனைத்துப் பொருட்களிலும் வேதியல் இரண்டறக் கலந்திருக்கிறது. அவனன்றி அணுவும் அசையாது எனற பழமொழியை மாற்றிப் போடவேண்டும். வேதியல் இன்றி அணு அசையாது என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் இயற்பியல்,வேதியல் மற்றும் கணிதம் கலந்தே உள்ளது.

புகை வழியே மணம்..!


வேதியலின் துவக்கம் நறுமணத் தைலமாக/அழகுசாதனப் பொருட்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கணிப்பு. நறுமணத் தைலத்திற்கு பர்பியூம் (Perfume) என்பது ஆங்கிலப் பெயர்.இந்த வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் புகையின் வழியே ("through smoke") என்பதே. ஏனெனில் துவக்க காலத்தில் வாசனை மிகுந்த மூலிகைகளின் வேர்,பூ, பட்டை போன்றவற்றை எரித்தே இதனைத் தயாரித்தார்கள். அதனாலேயே நறுமணத் தைலத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆதிகாலத்தில் சீனர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், கார்தஜினியர்கள், அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் எனப் பலரும் நறுமணத் தைலத்தை அவர்களின் கலாச்சாரத்திற்குள் எந்தெந்த வகையிலோ நுழைத்தனர்.அது மட்டுமல்ல. மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் பெரும் பங்கு வகிப்பது நறுமணம்தான்.

நாகரிகத் தொட்டிலும்..நறுமணப் பிறப்பும்..!



மனிதனில் மட்டுமல்ல, அனைத்து விலங்கினங்களிலும் கூட இணையை ஈர்ப்பதற்கு, இணை சேர காந்தமாய் பயன்படுவது நறுமணம்தான்.ஆனால் மனிதன்தான் செயற்கையான நறுமணத்தை தனது சொந்த செயல்பாட்டுக்கு பயன்படுத்தியவன்.. நறுமணத் தைலம் முதன் முதல் தயாரிக்கப்பட்ட இடம் மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாதான்.ஆனால் எகிப்தியர்களும் நறுமணத்தைலம் தயாரித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.எப்படி தெரியுமா? எகிப்திய மன்னர்களும், ராணிகளும் நறுமணத் தைலம் பயன் படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அதே சமயத்தில் எகிப்தில் இறந்த மனிதர்களை பல இலைகள் மற்றும் தைலங்கள் கொண்டு பதப்படுத்தி, அதன் பின்னர் மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்தனர். அதன் பின் நறுமணத்தைலம் தயாரிப்பைச் செழுமைப் படுத்தி பயன்படுத்தியவர்கள் ரோமானியர்களும், அரேபியர்களும்தான். எகிப்தின் ஆதிகால நறுமணத் தைல பாட்டிலின் வயது 3,000 ஆகும். எகிப்தியர்கள்தான் முதன் முதல் கண்ணாடியிலான நறுமணத் தைல பாட்டிலைக் கண்டுபிடித்தவர்கள். அவர்கள்தான் கண்ணாடியை பொதுவான பயன் பாட்டிற்கு கொண்டுவந்தவர்களும் கூட.

எகிப்தின்.. பண்டைகால.. வேதியல்..!

 
தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim )

எகிப்தில் முகத்தை பல வண்ணங்கள் கொண்டு அழகு செய்வதும், மம்மியின் கண் இமைக்கு வண்ணம் தீட்டுவதும் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அழகுப்பொருளுக்கான காஸ்மெடா என்ற வார்த்தை ரோமானிய அடிமைகளால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்கள், அவர்களது எஜமானர்களை வாசனைத் தைலம் கொண்டு குளிப்பாட்டுவார்களாம். ஆனால் கி.மு. 7,000-4,000 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயுடன் கலக்கப்பட்ட நறுமணச் செடிகளை இணைத்து புதிய கற்கால மக்கள் களிம்பு உருவாக்க பயன்படுத்தியதாய் தெரிய வருகிறது. ஆனால் பச்சைக் களிமண்ணில் கியூனிபாரம் எழுத்துக்கள் உருவாக்கிய பின்னரே, அனைத்து செய்முறைகளும் பதிவு செய்யப் பட்டன. முதல் வேதி விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டிகல்லிமின் (Thapputi -Belatikallim ) நறுமணத்தைலத் தயாரிப்பும் இப்படி பதிவு செய்யப்பட்டதுதான். எகிப்தில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்களும், பெண்களும் வாசனை மிகுந்த எண்ணெய் மற்றும் களிம்புகளை தங்களின் உடல் வாசனைக்காகவும், தோல் மென்மை பெறவும் தடவிக் கொண்டதாக தெரிய வருகிறது.

முதல் வேதி விஞ்ஞானி..பெண்..! தப்புட்டி பெலாட்டிகல்லிம். .!

 
சைப்ரஸுல் உள்ள லிம்மோசோல் மாவட்டம் ,


மனிதனின் மிக துவக்ககால வேதியல் பதிவு என்பது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைத்துள்ளன. மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் மெசபடோமியாவிலேயே,மனிதனின் சுவையான வேதியல் ஈடுபாடு தெரிகிறது. அப்போது வேதியலை விஞ்ஞானமாகப் பார்க்காமல், கலையாகவே பார்த்தனர். உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் தானாம். அடிக்க வராதீர்கள் நண்பா. அதுதான் உண்மை..! இதை நான் சொல்லவில்லை நண்பரே.. . வரலாறு கூறுகிறது. முதன் முதல் வேதியல் தொடர்பான,களிமண் பதிவுகளும், தற்போது கண்டுபிடித்த அந்தக் காலத்திய நறுமணத்தைல தயாரிப்பின் மிச்ச சொச்ச பாத்திரங்களும், பாட்டில்களும், சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki)என்ற இடத்தில் கிடைத்துள்ளன. சைப்ரஸ் தீவு எகிப்துக்கு வடக்கில் மத்திய தரைக்கடலில் காண்ப்படும் பெரிய தீவாகும். இங்கே துவக்ககால மனித செயல்பாடுகளின் பொருட்கள், கி.மு பத்தாயிரம் ஆண்டுகால தொல்பொருட்களாக, நன்றாக பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் இருந்தன. அவை புதிய கற்கால மனிதர்களின் சொத்துக்கள் எனறும் சொல்லப்படுகிறது. அவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு பெண் என்றும் தெரிய வருகிறது. எனவே முதல் வேதியியலாளர் ஒரு பெண் என்றும் அந்த தகவல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.அந்தப் பெண் வேதியியலாளர், ஏராளமான பொருள்களைக் கொண்டு, உடலில் தடவும் பலவகையான நறுமணத் தைலத்தை தயாரித்தாராம். அவர் பெயர் தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim ) என்பதாகும். வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெண் தப்புட்டி.

உலகப் பதிவுகளில் முதன்மையான பெண்கள்..!


சரித்திரப் பதிவுகளின் துவக்கத்திலிருந்தே, பெண்கள் கலாச்சாரத்திலும், நாகரிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதிலும் தப்புட்டி, வேதியல் உலகை மக்களுக்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். அவை எதிர்கால மக்களுக்குப் பயன்படும் படியாகவும் தனது தயாரிப்புகள், அது தொடர்பான மூலப் பொருட்கள்

போன்றவற்றைத் தெளிவாக, பச்சைக் களிமண் பலகைகளில், கியூனிபாரம் எழுத்துக்களில் பதித்து வைத்துள்ளார். அவரை நாம் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.

. கியூனிபாரத்தில்.. தப்புட்டியும்.. தைலம் தயாரிப்பும்..!

 
                                  பச்சைக் களிமண் பலகையில் கியூனிபாரம் பதிவுகள்

 
சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki

தப்புட்டி பெலாட்டிகல்லிமின் நறுமணத்தயாரிப்புகள் பற்றி


ஏராளமான தகவல்கள் கியூனிபாரம் பச்சைக்களிமண் பதிவாக பலகைகளில் உள்ளன..! இதுதான் உலகின் மிக,மிகப் பழமையான பதிவு என்றும் கூறப்படுகிறது.இந்த பதிவு மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்பட்ட மெசபடோமியாவில் இருந்திருக்கிறது. இந்த இடம் தற்போதைய ஈராக்கைச் சேர்ந்ததுதான். தப்புட்டிதான் உலகின் முதல் வேதியியலாளர் என்றும் உலக மக்களால் பல தடயங்கள் மூலமாக பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டும் வருகிறது.வினோதமான, வித்தியாசமான, அற்புதமான பெண்களைப் பற்றி எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அந்த முதன்மைப் பெண்களில் தப்புட்டியும் ஒருவர். மிகப் பழமையான நறுமணத்தைலம் தயாரித்த இடத்தை சைப்ரசில், 2005 ம் ஆண்டு,தோண்டி எடுத்தனர்.இந்த றுமணத்தைலம் தயாரிப்பு இடம் சுமார் 4,000 ௦௦௦ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இதுதான் தப்புட்டியின் நறுமணத் தைலத்தொழிற்சாலை என்றும் சொல்லப்படுகிறது.

நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகமும்.. மூலப்பொருள்களும்..!


 
நறுமணத்தைல குடுவைகள்.. 4,000 ஆண்டு வயது

தப்புட்டி வாழ்ந்த காலம் வெண்கல காலத்தின் துவக்கமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அந்த தைலத் தொழிற்சாலையின் பரப்பு 35,000 சதுர அடி/4,000 சதுர மீட்டர்.. இவ்..ளோ.. பெரிய தொழிற்சாலையாக இருந்தால், அங்கு எவ்வளவு நறுமணத்தைலம் தயாரித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.இப்படிப்பட்ட தயாரிப்புகள் எல்லாம் வெண்கலக் காலத்தில் நாம் கேள்விப்படாதவை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் 60 க்கும் மேற்பட்ட தைலம் காய்ச்சி வடிக்கும் கலங்கள், மூலிகை மற்றும் வேர்களைக் கலக்கும் பாத்திரங்கள், வடிகட்டும் புனல்கள், ஏராளமான நறுமணத் தைல பாட்டில்கள், அவைகளை நிரப்பத் தேவையான உபகரணங்கள் போன்றவை அந்தப் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் ஆதிகால மக்கள், செடிகள், பாதாம், மல்லி,மைர்டில் (Myrrtl) என்ற நறுமணச் செடி, குவிந்த காய் உடைய செடியின் பிசின்(Conifer resin) ,எலுமிச்சை மற்றும் கிச்சிலி போன்ற வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியே நறுமணத்தைலம் தயாரித்தனர். அப்போது மலர்களைப் பயன்படுத்தவில்லை.

தப்புட்டி பெலாட்டிகல்லிமின்.. திறமை..!

 
                                                                     தைலக் குப்பி

தப்புட்டி ஒரு நறுமணத் தைலத் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவர். அந்த மாளிகையின் மேற்பார்வையாளரும் கூட. அவர் அவரது சமகாலத்தவர்களை எல்லாம் விட திறமைசாலியாக முதன்மையாகத் திகழ்ந்தவர். அதானால்தான் உலகின் முதல் வேதியியலாளர் என்று பேசப்பட்டு பாராட்டவும்படுகிறார். தப்புட்டி தைலத் தொழிற்சாலையில் மிகவும் கடினமான பணிகளை எல்லாம் செய்திருக்கிறார். கியூனிபாரம் பதிவுகளில், தான் தயாரித்த நறுமணத் தைலங்களில் உள்ள மூலப் பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அவர் தயாரித்த பொருட்கள் மிகவும் அரிதானவை என்றும் தெரிய வருகிறது.

ஆடம்பரம்,பகட்டை..பட்டயம் போட்ட.. நறுமணத்தைலம்..!

கியூனிபாரம் பலகைகள்

நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்தே மனித இனம் நறுமணத் தைலத்தை நன்மணம் பரப்ப ,உருவாக்கி உலவ விட்டது என்பதுதான் உண்மை. .அந்த தைலத்திலிருந்து மிதந்து வரும் மென்மையான மணம் என்பது ஒருவரின் செல்வநிலையைத் தம்பட்டம் அடிப்பதாகவும், ஆடம்பரத்தை அறிவிப்பதாகவும்.அவர்களின் சலவைகல் அரங்குகளிலும் தூள் பரத்தியது.அந்த வாசனை..! அரச வம்சத்தினரும்,செல்வச்சீமான்களும், சீமாட்டிகளும்,தான் நறுமணத்தைலத்தில் குளித்து எழுந்தனர். பாமரர்களுக்கு அந்த வாய்ப்பு ஏது? அரசர்கள், செல்வந்தர்கள் பயன்படுத்திய நறுமணத் தைலங்கள் உடலின் மேல் தடவுவதாகவும்/தெளிப்பதாகவும், அல்லது தலையில் தடவுவதாகவும் இருந்தன. இந்த நறுமணத் தைலங்களை எல்லாம் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரித்ததாக தப்புட்டி அதன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

காய்ச்சி வடித்தல். தப்புட்டியின் கண்டுபிடிப்பு..!


 
                                                 தப்புட்டியின் காய்ச்சி வடித்தல் கலன்

சில நறுமண மூலிகைகள், செடிகள் இவற்றின் மலர்கள், இலைகள் மற்றும் வேர்களைப் போட்டு காய்ச்சி, பின்னர் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார். அதனால்தான் நறுமணத் தைலங்கள் தெளிவாக சுத்தமாக பளிச் சென்று உள்ளன. தப்புட்டி, காசித்தும்பை (balsam), கோரைப்புல் (Cyperus) மற்றும் வெள்ளைப்போளம் (myrrh) போன்றவைகளின் மலர்கள், வேர்கள் மற்றும் இலைகள் போன்றவற்றைப் போட்டு தப்புட்டி பெலாட்டிகல்லிம் காய்ச்சி வடிகட்டி, அந்த முறையிலேயே நறுமணத் தைலம் தயாரித்ததை பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் நிறைய முறை அதில் தண்ணீர் ஊற்றி ஊற்றி பின்னர் அதன் ஆவி மூலம் வடிகட்டியே தைலம் தயாரித்தார்.இதுதான் நறுமணத்தைலம் தயாரிப்பு பற்றிய மிகப் பழமையான தகவல். அவர் நின்னு(Ninu) என்பருடன் இணைந்து ஆராய்ச்சியும் செய்தார். காய்ச்சி வடித்தல் முறையை முதலில் உலகுக்குச் சொன்னவரும் தப்புட்டியே..!

முதல் பதிவான நறுமணத்தைலங்கள்..!


 
                              பைய்ர்ட்கோஸ் நறுமணத்தைல தொழிற்சாலை வளாகம்

முதன் முதல் நறுமணத்தைலம் எகிப்தில்தான் இருந்தது என்று சொல்லப்பட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள பதிவுகளின் படி, மிகப் பெரிய தொழிற்சாலையான பைய்ர்கோசின் (Pyrgos) நறுமணத் தொழிற்சாலைதான் 4,000 வயதானது.அதில் கிடைத்துள்ள நறுமணப் பாட்டில்களில் லேவேண்டர், ரோஸ்மேரி, பைன் மற்றும் மல்லி மணமுடைய நறுமணத் தைலங்கள் கிடைத்துள்ள்ளன. அவை அனைத்தும் ஆல்கஹால் கண்டுபிடிக்கும் முன்பே, காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். ஆல்கஹாலின் வயது 3,000௦௦ தான். பின்னாளில் வந்த அவிசென்னாதான் ஆல்கஹால் கலந்து இந்த முறையைப் பயன்படுத்தி நறுமணத்தைலம் தயாரித்தார்.



பேராசிரியை பெல்ஜியார்னோ &குழுவின் கண்டுபிடிப்பு:



மேலே சொல்லப்பட்ட கதையை நம் முன்னே வைப்பவர்கள் இத்தாலியின் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியோ பெல்ஜியார்னோவும், அவரது குழுவினரும்தான். தொல்லியல் துறை விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியா பெல்ஜியோர்னோ (Maria Rosaria Belgiorno) மற்றும் அவரது குழுவினர்,.சைப்ரஸ் தீவிலுள்ள லிமஸ்ஸோல் மாவட்டத்தில் பைர்கோஸ்(Pyrgos) என்ற இடத்தில் தொல்லியல் இடம் ஒன்று 2005 ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடம் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சிக் குழுவினருடன் தோண்டி எடுக்கப்பட்டது.அதுதான் சைப்ரஸ் தீவில் பைய்ர்கோசிலுள்ள நறுமணத் தொழிற்சாலை. அந்த இடம் வெண்கலக் காலத்தின் துவக்கததைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. அந்த இடம் ஒரு தொழிற்சாலை வளாகமாக இருந்திருக்கிறது.மேலும் அங்கே ஒயின், நறுமணத்தைலம் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் கருநீல வண்ணம் போன்றவை தயாரிக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறியப் பட்டுள்ளது. அவ்விடத்தில் மாளிகையின் மிச்ச சொச்சங்களும் இருந்தன.

4,000ஆண்டுகால நறுமணத்தைலம்.. தயாரிப்பு..!


 
பேராசிரியை மரிய ரோசரியோவும், அவரது குழுவினரும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடத்தை சேதாரமின்றி தோண்டி எடுத்தனர். அது மட்டுமல்ல. அந்த நறுமணத் தைலத் தொழிற்சாலையில் கிடைத்த 4 பாட்டில்களில் ஒட்டிக்கொண்டிருந்த நறுமணத் தைலத்தை வைத்துக் கொண்டு, அதிலிருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நறுமணத் தைலத்தையும் தயாரித்து விட்டனர். அது தொடர்பாகவும், எப்படி அவற்றித் தயாரிப்பது என்பது பற்றியும் பேராசிரியை பெல்ஜியார்னோ ஒரு புத்தகம்மும் எழுதி உள்ளார். பேராசிரியை பெல்ஜியார்னோ ஒவ்வொரு நறுமணத்தைலத்தையும் தயாரிக்க 6 மாதம் ஆயிற்று. அவற்றை அந்த கியூனிபாரம் பலகையில் கூறியுள்ள படியேதான் தயாரித்தார்.

மிச்ச சொச்ச தைலமும்.. புது நாமகரணங்களும்..!


அது மட்டுமின்றி, அங்கே இருந்த பாத்திரங்களிலேயே அவற்றைத் தயாரித்தார். அவற்றிற்கு, அப்ரோடைட் (Afridite), எலினா (Elena), ஆர்ட்டிமிடிஸ் (Artemides) மற்றும் எரா (Era) என்றும் பெயர் சூட்டினார். அப்ரோடைட் தைலத்தில் ஆலிவ் எண்ணெய், லாரல், கொத்தமல்லி மற்றும் டர்பண்டைன் இணைந்து இருந்தன. ஆர்ட்டிமிடிஸில் பாதாம், நறுமணச் செடி மைர்ட்ல் (Myrrtl), பார்ஸ்லி (Parseley) மற்றும் டர்பண்டைன் இருந்தன. எராவில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மரி (Rosemary), பச்சை சோம்பு மற்றும் லாவண்டர் இருந்தது.

பழமை போன்ற புதுமை தயாரிப்பு..!
பேராசிரியை பெல்ஜியார்னோ இந்த நறுமணத்தைலம் பற்றிச் சொல்லும் கருத்தாவது. "இப்படி ஒரு செய்முறை இந்த காலத்தில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது கற்பனை செய்ய முடியாத, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம் என்பதே" அவர் கருத்து. தப்புட்டி செய்த்தைவிட. அவரின் செய்முறையை கியூனிபாரம் பலகைகளிலிருந்து படித்து, அந்த முறையிலேயே, பழமைவாய்ந்த நறுமணத்தைலம் தயாரித்த பேராசிரியை பெல்ஜியார்னோயும் அவரது குழுவினரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்.


 
காய்ச்சி வடித்தல்.. தப்புட்டியின் செய்முறை
 
எகிப்தில் அல்லித் தைலம் தயாரிப்பு
 
                                               காய்ச்சி வடிக்கும் கலன்கள்



by S.MOHANA

Nov 2, 2011

தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு மதுரை பேராசிரியர்கள் தேர்வு

தினமலர் :
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011,
கம்பம் : தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கு, மதுரையை சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட ஐந்து ஆசிரியர்களின் கட்டுரைகள் தேர்வாகியுள்ளன. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறியதாவது :

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக்குழு, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகின்றன. இவ்வாண்டு "அறிவியல் கல்வியின் போக்கும், புதிய சவால்களும்' என்று பொது தலைப்பு கொடுக்கப்பட்டது. பல உப தலைப்புகளிலும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தமிழ்நாட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 27 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை எஸ்.என். கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் இமயவரம்பன், கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் ராஜன், மதுரை முத்துப்பட்டி நர்சரி பள்ளி ஆசிரியர் பாண்டியராஜன், மதுரை பாப்புநாயக்கன்பட்டி ஆசிரியர் இளமாறன், வத்தலக்குண்டு ஆசிரியர் மகமுதா, மதுரை அறிவியல் இயக்க நிர்வாகி பாண்டியராஜன் ஆகியோரின் கட்டுரைகள் தேர்வாகி உள்ளன. தேர்வான ஆசிரியர்களுக்கு, நவம்பர் 8 ல் உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெறும் தேசிய மாநாட்டில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும், என்றார்.