முதல் பக்கம்

Feb 23, 2011

கரும்பலகையில் எழுதாதவை

*தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..

*‘சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

‘சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.


*கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்

வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...

*சறுக்கல் விளையாட ஆசைப்பட்டான்.
‘சார்..
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்கஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை.
ஏறுதலே முயற்சி.!

*பிள்ளைகளே
பாடமாகிறார்கள் சிலபோது.
பக்கம் இருப்பவன் மேல்
வெறுப்பு மேலிட்டால்
வேரறுப்பதில்லை.
காய் விடுதலோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!

_பழ.புகழேந்தி.

No comments:

Post a Comment