முதல் பக்கம்

May 27, 2013

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: அரசுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. அறிவொளி இயக்கம், வளர்கல்வி, கற்றலில் இனிமை, செயல்வழிக்கற்றல், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என அனைத்து விதங்களிலும் சரியான விதத்தில் அறிவார்ந்த முறையில் பங்களித்திருக்கிறது. முப்பருவக்கல்வி, தொடர்மதிப்பீடு போன்ற அரசின் புதிய முயற்சிகளை வரவேற்பதோடு மட்டுமின்றி ஆழமாக விவாதித்து திட்டங்களின் மேம்பாட்டிற்கான நல்ல பல ஆலோசனைகளையும் முன்வைத்திருக்கிறது. அதேபோல் அரசின் புதிய அறிவிப்பான அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி குறித்தும் மாநிலக்குழுவில் ஆழமாக விவாதித்து பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றது..
 
இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்பிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஆங்கில மொழியின் தேவை இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது.
 
அதற்காக தாய் மொழிக் கல்வியை புறக்கணித்து, தாய் மொழி வழியாகக் கிடைக்கக்கூடிய நண்மைகளைப் புறக்கணித்து ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.
 
ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும், புத்தாக்கத்திறனும் தாய் மொழி வழிக் கல்வி மூலம்தான் மேம்பாடு அடையும் என்பது உலக கல்வியாளர்களின் ஒட்டு மொத்தக் கருத்தாகும்.
 
உலக நாடுகள் பலவற்றிலும் தாய் மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து கல்விக குழுக்களும் தங்கள் பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரையாக பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழி வழியாகத்தன் கற்பிக்கப்பட வேண்டும் என வற்புறுத்திக் கூறியுள்ளன.
 
தற்போதும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கூட பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது.
 
தமிழ் நாட்டிலும் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ் வழி படிப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் கூட, இன்னும் முழுமையாக நடைமுறைபடுத்தப் படவில்லை என்பதே உண்மை.

இந்த சூழலில் தமிழக அரசு வரும் கல்வியாண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3200 அரசுப்பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்படும் என முடிவு செய்து அறிவிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல.
 
 ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் சேரவில்லை எனற் நிலை உள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கினால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளீகளில் தமிழ் நாட்டில் தமிழ் வழிக்கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது.
 
ஏற்கனவே தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆங்கில வழியாகப் படித்தாலும் கூட பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். .
 
எவ்விதமான விவாதங்களும்,கருத்து பரிமாற்றங்களும் நடைபெறாமல், எந்தவிதமான முன் தயாரிப்பு பணிகளும் செய்யாமல் உடனடியாக ஆங்கில வழிக் கல்வி என்பது தேவையற்றது..
 
கடந்த ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட 2012 ம் ஆண்டிற்கான கல்வி நிலை அறிக்கையின் படி (அசர்) தமிழகத்தில் 56 சதவிகித மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பில் தமிழ் படிக்கக் கூடத் தெரியவில்லை.
 
தாய் மொழி வழியிலேயே கற்றல் கற்பித்தலில் மேம்பாடு தேவைப்படுகிற நிலையில் அந்நிய மொழியாம் ஆங்கில மொழி வழி கல்வி தேவையற்றது.
 
ஆங்கிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் உண்மையிலேயே புலமை பெற வேண்டும் என அரசு கருதினால், ஏற்கனவே ஆங்கில மொழி ஒரு பாடமாக உள்ளது. அதை திறம்பட கற்பிக்கின்ற வகையில் தேவையான ஆசிரியர்களை தயாரித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கலாம்.

மேலும் ..
 
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேச, எழுத, படிக்க, தேவையான புதிய வழிமுறைகளைக் கண்டறியலாம்.
 
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் முடிவுக்குப் பதிலாக,தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்(தனியார்-மெட்ரிகு
லேசன் பள்ளிகள் உட்பட) தமிழ்வழியாகவே கற்பிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுக்கோள் விடுக்கிறது.


தே.சுந்தர், மாவட்டச் செயலாளர்

No comments:

Post a Comment