முதல் பக்கம்

Dec 6, 2011

பாறை மீன் சீரக வறுவல் :& நாம் ஏன் மீன் சாப்பிட வேண்டும்..?

பாறை சீரக மீன் வறுவல் :தேவையானவை:
பாறை மீன் /எந்த மீனும் ................1 /2 கிலோ
வெங்காயம்........................................10
இஞ்சி..................................................1 இன்ச் நீளம்
பூண்டு.................................................10
சீரகம் .................................................1 /2 தேக்கரண்டி
மிளகு, சீரகம்.....................................1 /2 தேக்கரண்டி
சோம்பு...............................................1 /4 .தேக்கரண்டி
மல்லி பொடி.................................... 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி.................................... 1 தேக்கரண்டி
சீரகப்பொடி..........................................1 தேக்கரண்டி
தயிர்.....................................................1 தேக்கரண்டி
சோள ,மாவு (corn flour )..................... 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு...............................1 தேக்கரண்டி
உப்பு ...................................................தேவையான அளவு
எண்ணெய்..பொரிக்க.......................75 மில்லி

செய்முறை:
மீனை நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.
வெங்காயத்தை உரித்து, அதனுடன் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
இஞ்சி, பூண்டை நன்கு அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு ,காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு போட்டு சிவந்ததும், அதனை எடுத்து மீனின் மீது போடவும்.


மீனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி, மிளகு,சீரகப் பொடி, தயிர்,எலுமிச்சை சாறு, சோள மாவு+உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசறவும்.
சோள மாவு போடுவது மசால நன்கு ஒட்டவும், சமயத்தில் மீன் உடையாமல் இருக்கவும்தான். வேண்டாம் என்றால் சேர்க்க வேண்டாம்.
இதனை குளிர் பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய்/தவா வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மீனை எடுத்து உடையாமல் அடுக்கவும். தீயை சிறுத்து வைக்கவும்.
மீன் போட்டு 5 நிமிடம் கழித்து/ஒரு பக்கம் வெந்ததும்,மீனை பத்திரமாக உடையாமல், அடியில் மெலிதான கரண்டி கொடுத்தி திருப்பவும்.
மறு பக்கமும் வெந்ததும்.. மீனை எடுத்து விடலாம். தேவைப்பட்டால், நீங்கள் கில்லாடி என்றால் மீனை ஓரிரு முறை திருப்பி போட்டு முறுகலாய் எடுக்கலாம். இந்த வறுவல் மீன் காரம் இருக்காது. சிவப்பாய் இருக்காது. ஆனால் சுவை படு டேஸ்டியாய் இருக்கும். சும்மாவே லபக் லபக் என்று விழுங்கிவிடுவீர்கள்..!

நாம் ஏன் மீன் சாப்பிட வேண்டும்..?

மீன் மிகவும் சத்துள்ள உணவு.
சிறுவர் முதல் பெரியவரை அனைவரும் மீன் சாப்பிடலாம் .
மீன் புரதம் நிறைந்த சிறந்த உணவு மட்டுமல்ல, இது இதயத்திற்கு மிகவும் உகந்த உணவும் கூட..
வாரம் இரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு பாதியாக குறைக்கப்படுகிறதாம்.
முக்கியமாக பனிப் பிரதேசத்தில் வாழும் எக்சிமோக்கள் நார்ச் சத்துள்ள தாவர உணவின்றி ஏராளமாய் கொழுப்புப் பொருட்கள் சாப்பிடுவார்களாம். கொலஸ்டிராலுக்கும் பஞ்சமில்லை அவர்களிடம். ஆனால் இதுவரை அவர்களுக்கு அவ்வளவாக இதய நோய் எதுவும் வந்ததில்லை என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களை கடவுள் காப்பாற்றவில்லை. அவர்கள் உண்ணும் மீன்தான் காப்பாற்றுகிறதாம் .
வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் இதயதாக்கு(Heart attack ) மற்றும் மூளைத்தாக்காலேயே (Stroke) இறப்பு விகிதம் அதிகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அண்மைக்கால ஆய்வுகள், மீன் அதிகமாக உணவில் இணைத்துக் கொள்வதன் மூலம் இதயத் தாக்கு தவிக்கப்படுவதாய் சொல்லுகின்றன.
வாரம் இரண்டு/மூன்று முறை 100 -200 கிராம் மீன் உணவு உண்டால் இதயப் பிரச்சினைகள் வராதாம்.
மீன் உண்ணாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர் உதவியுடன் எடுத்துக் கொள்ளலாம்.
மீனில் உள்ள துத்தநாகம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை மிகச் சீராக வைத்துக்கொள்ள வைக்கிறது.
மீனில் காணப்படும் கால்சியம் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
முடக்கு வாதம், மூட்டுப் பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளை கண்காணிக்கிறது.
மீனின் முக்கிய தனிமமான அயோடின், நமது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி செயல்பட பெரிதும் உதவுகிறது.
மீனில் அனைத்து வகை வைட்டமின்களும் உள்ளன.
மீனின் வைட்டமின் E நமது தோலின் துணைவனாகவும், இரத்த ஓட்டத்தின் மேலாளராகவும் பணி புரிகிறது.
100 கிராம் மீன் உணவு 100 க்கும் குறைந்த கலோரியையே தருகிறது.
அது போலவே, 100 கிராம் மீனிலிருந்து நமக்குக் கிடைப்பது 0.1 - 0.2 கொழுப்பு மட்டுமே..!
மீனில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலம்தான்.இதயத்திற்கு தொல்லை தரும் கொலஸ்டிராலைக் குறைத்து, இரத்தம் உறைதலைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் தாவர எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் எடுத்துக்கொண்டவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மீன் எண்ணெய் எடுத்துக்கொண்டவர்களிடம், 5 மடங்கு கொலஸ்டிரால் குறைவாக இருப்பதாக அறியப் பட்டுள்ளது.
-பேரா.சோ.மோகனா..

    No comments:

    Post a Comment