முதல் பக்கம்

Dec 16, 2011

உலகின்..முதல்..பெண்..மகப்பேறியல் ..மருத்துவர்..அக்னோடைஸ்..!- பேரா.மோகனா

ஏதென்ஸின்..பெருமை ..!

கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் .இது பல குன்றுகளுக்கு இடையே அற்புதமாய் அமைந்துள்ளது.கி.மு 7,000 த்திலேயே புதிய கற்காலத்திலிருந்தே , அங்கு மனிதர்கள் அங்கு வாழ்ந்தனராம்.ஆனால் கி.மு 1400 களிலிருந்தே, மைசீனிய நாகரிகம் காணப்பட்டது. கி.மு 900 த்தில் உலகில், ஏதன்ஸ் என்றால் அது சுதந்திரம், கலை மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. அறிவு மற்றும் மதிகூர்மையின் பெண்கடவுளான, ஏதெனாவின் பெயரிலேயே, அந்த நகரின் தலைநகர் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.இன்றுவரை ஏதென்ஸ் என்றால் அதன் நினைவுகளும், சிறப்பும் வரலாற்றாளர்களால் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்பகுதி மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றும் அழைக்கப் படுகிறது.
பெண்களின்..படிப்புக்கு..சட்டப்படி..தடை..!

ஏதென்ஸின் உயர் குடும்பத்தில் கி.மு 300 ல் பிறந்தவர் அக்னோடைஸ் என்ற பெண். அக்னோடைசின் குடும்பம், சொந்த வாழ்க்கை பற்றி ஏதும் தெரியவில்லை. கி.பி 100 ல் வாழ்ந்த லத்தீன் சரித்திர ஆசிரியர் ஹைஜினஸ்,எழுதிய குறிப்புகளிலிருந்தே , அக்னோடைஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன . கி.மு 400 -300 களில், பெண்கள், பிரசவத்திற்கு தாதியாகவும், காயத்திற்கு கட்டுப் போடவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உலகின் புகழ் பெற்ற மருத்துவரான, ஹிப்போகிரடசும் கூட, அவரின் முதன்மை மருத்துவ பள்ளியில் பெண்களை, மருத்துவம் பயில அனுமதிக்க வில்லை. ஆசியா மைனரில் உள்ள பள்ளியில், மகப்பேறியலும், பெண்களின் நோயியல் பற்றி மட்டுமே பயில அனுமதித்தார். அதன் பின், அந்த கால கட்டத்தில் ஏதென்ஸ் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும், பெண்கள் படிக்கவும், பணி புரியவும் சட்டப்படி தடை இருந்தது. இந்த தடையை மீறுபவர்களுக்கு, தண்டனை.. கொலைதான். .! மேலும் அப்போது, ஆண் மருத்துவர்களிடம், மருத்துவம் பெற நிறைய பெண்கள் விரும்பாததால், பெண்களின் இறப்பு விகிதமும் அதிகரித்தது. 
கல்விக்காக...ஆண் வேடம்..தரித்த..அக்னோடைஸ்..!

பெண்கள் கல்வி பெறமுடியாத ,அரசியல் மற்றும் சமூக சூழலில்தான், ஓர் உயர் குடும்பத்தில் அக்னோடைசும் பிறந்தார்..ஏதென்சில்..! கல்விஞானம் பெற விரும்பிய அக்னோடைஸ் ஏதென்சில் உள்ள சட்டதிட்டங்கள் அறிந்து, மனம் வெறுத்துப் போனார்.அக்னோடைசுக்கு கல்வியின் மேலுள்ள ஆர்வத்தை அறிந்த, அக்னோடைசின் தந்தை, எப்படியாவது அவருக்கு படிப்பு ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்தார். அக்னோடைஸ் படிக்க விரும்பியதோ..மருத்துவம். ! எனவே, அக்னோடைஸ், தந்தையின் ஆதரவுடனும். உதவியுடனும், மற்றவர்களுக்கு தெரியாமலும், மருத்துவம் பயின்றார். சட்டப்படி உள்ள தடையை மீறி எப்படி படித்தார் என்கிறீர்களா? அதுதான், துணிச்சலான, ஆச்சரியமான ஒன்று. தந்தையின் உந்துதலால், அக்னோடைஸ் தலைமுடியை ஆணைப்போல் வெட்டினார்.! ஆணைப் போலவே உடை அணிந்து, மருத்துவ வகுப்புக்குச் சென்று வந்தார் அக்னோடைஸ். அக்னோடைஸ் அலெக்சாண்டரியாவின் புகழ் பெற்ற , உலகின் முதல் உடற்கூறியல் மருத்துவரான, ஹீரோபிலசிடம் மருத்துவம் பயின்றார்.இவர்தான் முறையாக மனித உடலை அறுத்து மருத்துவம் பயின்றார். ஹீரோபிலஸ்தான், மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றி படித்து ஆராய்ந்தவர். 9 புத்தகங்களும் எழுதியுள்ளார். ! மனிதனின் அறிவு மூலையில் உள்ளது, இதயத்தில் அல்ல என்று முதலில் கூறியவரும் இவரே .! .

ஏதென்ஸின்.. புகழ்.. பெற்ற.. மருத்துவர்..!

அக்னோடைஸ் கி.மு 280 ,ஜூன் 3 ம் நாள், அக்னோடைஸ் மருத்துவ படிப்பினை முடித்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடன் படித்தவர்களிலேயே, மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ சோதனை படிப்பில் மருத்துவரானாராம். . இருப்பினும் தான் ஒரு பெண் என்பதை மறைத்தே இருந்தார். மருத்துவப் படிப்பு முடிந்தபின், தெருக்களில் நடந்து திரிவாராம். அப்போது ஒரு பெண், பிரசவ வேதனையில் அளவுவத்தைக் கேட்டு, அந்த வீட்டில் நுழைந்து அந்தப் பெண்ணின், குழந்தை பிறப்புக்கு உதவத் துவங்கினார்.ஆனால், அக்னோடைசின் ஆணுடையையும், தலை முடியையும் பார்த்த அந்த பெண், இவரிடம் மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டார். அதன் பின்னரே,அக்னோடைஸ் தானும் ஒரு பெண்தான் என்பதை, குழந்தைப் பேறு கால பெண்ணிடம் தெரிவித்து, பிரசவம் பார்த்து, மகவை எடுத்துத் தந்தார். அதன்பின், அகனோடைசிடம், அவர் பெண் என்பதாலும், அவரது மருத்துவத் திறமையாலும், ஏராளமான பெண்கள் சிகிச்சைக்கும், பிரசவத்துக்கும் வந்தனர். அவரின் புகழ் ஏதென்ஸ் முழுவதும் பரவியது. அக்னோடைசுக்கு..கொலை.. தண்டனை..!

அக்னோடைஸ் பெண் என நிரூபித்தல்..

அக்னோடைஸ் மருத்துவமும், மகப்பேறும் பார்க்கத் துவங்கியதால், ஆண் மருத்துவர்களிடம், பெண்கள் செல்வதே இல்லை. அவர்களின் பெருமையும் குறைந்தது. இதனால், அக்னோடைசின் மேல் பொறாமை கொண்டனர். அக்னோடைஸ் மணமான பெண் நோயாளிகளை தவறான பாதைக்கு இட்டு செல்கிறார்,இரண்டு பெண் நோயாளிகளை பாலியல் தொந்தரவு செய்தார் என அவர் மேல் குற்றம் சுமத்தினர். அக்னோடைஸ் பற்றி அவதூறான வதந்திகளைப் பரப்பினர். ஏதென்ஸ் நகரில், அக்ரோபோலிசின் வடமேற்கில் உள்ள கொலை தண்டனை நிறைவேற்றப்படும் ஆரோபகஸ் என்ற சிறப்பு நீதிமன்றத்துக்கு அக்னோடைசை கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், உயிர் தப்புவதற்காக,தான் பெண் என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க வேண்டியதாயிற்று. அக்னோடைஸ் பெண் எனத் தெரிந்ததும்,குற்றம் சுமத்திய ஆண் மருத்துவர்களும், நீதியரசர்களும் மிகுந்த கோபம் கொண்டனர். அதனால், சினமுற்று, அரசின் தடையை மீறி மருத்துவம் படித்தார் என, அவரை மீண்டும் கொல்ல ஆணையிட்டனர்.

அக்னோடைசை..காப்பாற்றிய...மருத்துவர்களின்..மனைவிகள் ..!

ஏதென்ஸின் , சிறப்பு நீதிமன்றத்தில், ஆண் மருத்துவரின் மனைவிகளும், அதென்ஸ் பெண்களும் கூடிவிட்டனர். அக்னோடைசை கொல்ல நீதிமன்றம் ஆணையிட்டதை ஒத்துக் கொள்ள மறுத்தனர். இந்த ஆண்கள் எங்களின் எதிரிகள், அக்நோடைச்தான், எங்களைக் காப்பாற்றியவர். அவரை கொல்லக் கூடாது என்றும், அவர் தொடர்ந்து மருத்துவ பணியினை செய்யவேண்டும் என நீதியரசர்களிடம்,வாதாடினர். அப்படி இன்றி, அவர் கொல்லப்பட்டால், நாங்கள் அனைவரும் செத்துப் போவோம் என்றனர். அனைத்துப் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க ,அக்னோடைஸ் விடுதலை செய்யப்பட்டார்.அவர் மீண்டும் மருத்துவம் பார்க்கலாம் என்றும் சொல்லப்பட்டது. அதன்பின், பெண்களும் படிக்கலாம், மருத்துவமும் படிக்கலாம், மருத்துவப் பணி புரியலாம்,என்றும் சட்டம் இயற்றப்பட்டது. அவரது காலம் பற்றி தெளிவாக தகவல்கள் இல்லை என்றாலும், கி.மு 300 களில்தான் வாழ்ந்தார் என்பது தெரிகிறது. திருமணமே செய்து கொள்ளாமல்,தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு மருத்துவப் பணி செய்தே வாழ்ந்தார் அக்னோடைஸ்..

No comments:

Post a Comment