முதல் பக்கம்

Jan 5, 2012

அறிவியல் திருவிழா..


இது என்ன அறிவியல் திருவிழா? வித்தியாசமாக இருக்கிறதே என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கொஞ்சம் அப்பாற்பட்ட நண்பர்களுக்கு தோன்றக்கூடும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகம் முழுக்க அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது நான் இங்கே சொல்லப்போவது..

டிப்டாப்பான மெட்ரிக் மாணவர்களும் சட்டைப்பித்தானின்றி பின்னூக்கு அணிந்த அரசுப்பள்ளி மாணவர்களும் ஒன்றாய் கலந்துகொண்ட திருவிழா.. மிகப்பெரிய மாநகரங்களைச் சேர்ந்த மாணவர்களும் எந்தவிதத்திலும் வெளியுலகிற்கு அறிமுகமே ஆகாத, போக்குவரத்து வசதிகளேகூட இல்லாத மிகப்பின்தங்கிய கிராமத்து மாணவர்களும் ஒருசேரக் கலந்து கொண்ட திருவிழா.. தமிழகம் முழுவதுமிருந்து இண்டர்நேஷனல் பள்ளிகள்,அரசுப் பள்ளிகள்,அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், துளிர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், இரவுப் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு திருவிழா.. ஆம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த நவம்பர் 24,25,26 தேதிகளில் சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடுதான் அந்த திருவிழா..!

இதுவெறும் குழந்தைகள் அறிவியல் மாநாடு தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். குழந்தைகளின் ஆய்வுகள் பல்வேறு சூழ்நிலைகளில் நீதிமன்றத்தீர்ப்புகளுக்கெ அடிப்படையாக இருந்திருக்கிறது.. பல ஊர்களில் உள்ள நீர்நிலைகளைக் காப்பாற்றி மேம்படுத்தியுள்ளது. திருப்பூர் சாயப் பட்டறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. உள்ளூர் மக்களின் பாரம்பரிய விவசாயம் குறித்து, உள்ளூர் வளங்கள் குறித்து ஆய்வுபுரிந்து வெளியுலகிற்குச் சொல்கின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த 2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி பேரழிவுக்குப் பின் குழந்தைகள் மேற்கொண்ட ஆய்வினால் அலையாத்திக்காடுகள் இருந்த பகுதிகள் பெருமளவு சேதத்திலிருந்து தப்பியுள்ளதைக் கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். தற்போது மத்திய அரசின் சார்பில் அலையாத்திக் காடுகளை மேம்படுத்த சுமார் 400 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

இந்த மாநாடு மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் மாவட்ட அளவிலான மாநாடுகளில் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 
அதில் சிறப்பாக ஆய்வு புரிந்த 196 மாணவ ஆய்வுக்குழுக்கள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டு கலந்துகொண்டனர். நிலவளம்:வளத்திற்காகப் பயன்படுத்துவோம், வருங்காலத்திற்கும் பாதுகாப்போம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் தமிழ்-இளையோர், தமிழ்-மூத்தோர், ஆங்கிலம்-இளையோர், ஆங்கிலம்-மூத்தோர் என நான்கு பிரிவுகளில் குழந்தைகள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். மாநில மாநாட்டில் இருந்து 30 ஆய்வுக்குழுக்கள் குழந்தை விஞ்ஞானியர் விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் இந்த மாதம் 27-31 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டனர். மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு இம்மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
நம் தேசம் முழுவதுமுள்ள அனைத்து ஆய்வு நிறுவனங்களில் இருந்தும் விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2வது வாரம் நடைபெறும். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள மிகச்சிறப்பான தலைப்புக்களை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்ட 2 ஆய்வுக்குழு மாணவர்கள் (தமிழகத்திலிருந்து) இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு பெரிய சிறப்பு!

மக்கள் அறிவியல் இயக்கங்களின் சோதனை முயற்சியில் துவங்கி இன்று இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது வாழ்விடத்தில், பள்ளிகளில் சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அதுகுறித்து மூன்று மாதங்கள் ஆய்வு புரிந்து அதனைச் சமர்ப்பித்து வருகின்றனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையும் தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவும் அறிவியல் இயக்கங்களும் இணைந்து நடத்தக்கூடிய இம்மாநாட்டில் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமின்றி இடைநின்ற மாணவர்களும்கூட பங்கேற்கலாம். வயது 10 முதல் 17 என்பதைத் தவிர எவ்வித தடைகளும் இல்லை. சாதிக்கத் துடிக்கும் மாணவ கண்மணிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..!

படித்த அறிவியலை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் சமூகப் பிரச்சனைகளுக்கு அறிவியல் வழிமுறையில் தீர்வுகளைச் சொல்லவும் பரந்துபட்ட மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவும் இந்த மாநாடு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது. அதனினும் மேலாக பங்கேற்ற குழந்தைகள் பேசும்போது பெரியவர்களுக்கே கூட இல்லாத மனப்பக்குவத்தோடு பேசுகின்றனர். 
எனக்கு வெற்றி தோல்வியெல்லாம் பிரச்சனையில்லை. எனது ஆய்வின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். மற்றவர்களின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்றும் தேசிய அளவிலான மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. கலந்துகொள்கின்ற மாணவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சிரித்தமுகத்தோடு சொல்லும் அந்த குழந்தைகளுக்கு உரக்கக் கைதட்ட தோன்றுகிறது நமக்கு.. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதே நான் செய்த பாக்கியம். எனக்கு உதவி செய்த தலைமை ஆசிரியருக்கும், மூன்று மாதங்களாய் எவ்வித முகச்சுழிப்பும் இல்லாமல் வழிகாட்டி உதவிய ஆசிரியருக்கும் வாய்ப்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும் நன்றி என சில குழந்தைகள் கண்ணீர் மல்க பேசும்போது எழுந்து நிற்கத் தோன்றுகிறது அவர்களின் மனமுதிர்ச்சிக்கு மரியாதையாய்.. வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஒரு மாபெரும் குழந்தைகள் அறிவியல் மாநாடு இதுவரை நடந்ததில்லை. அதனால்தானோ என்னவோ பக்கத்து நாடுகளான வங்கதேசம், நேபாளத்தில் இருந்துகூட குழந்தைகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாநாட்டைக் கடந்த 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து நடத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களும், தொடர்ந்து தமது பள்ளிக் குழந்தைகளை அறிவியல் பாதையில் அழைத்துச் செல்கின்ற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டிற்குறியவர்கள்.. அதுசரி, அடுத்த ஆண்டு உங்கள் பள்ளியிலிருந்தும் கலந்துகொள்வீர்கள் தானே?
-தேனி.சுந்தர்.(9488011128) 
நன்றி: புதிய ஆசிரியன் ( www.puthiyaaasiriyan.com)

2 comments:

  1. வணக்கம் சுந்தர்ஜி. நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள். அற்புதமான பிஞ்சுகளை அரவணைக்கும் ஆனந்த ஆசிரியர் நீங்கள் என்பதை இந்த கட்டுரை மூலம் நிரூபணம் செய்துவிட்டீர்கள். உயர உயர மேலே போக வாழ்த்துக்கள்...மோகனா, பழனி..

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,வணக்கம்.இது மிக நல்ல பதிவுங்க.என்னைப்போன்றவங்க மத்தவங்களுக்கு விவரிக்க துணையாகுதுங்க.நான் எதிர்பார்த்த அல்லது தடுமாறிய வினாவுக்கு நல்ல பதில்! தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி(ஈரோடு மாவட்டம்) சார்பாக வாழ்த்துகிறோம்.tnsfthalavady.blogspot.com

    ReplyDelete