முதல் பக்கம்

Sep 16, 2011

மாவட்டச் செயற்குழு கூட்டம்


செப்டம்பர்,10,2011 அன்று மாலை 5 மணிக்கு தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் மாநில மாநாட்டு நிகழ்வுகளையும் மாநிலச் செயற்குழு முடிவுகளையும் எடுத்துரைத்தார்.
ஆகஸ்ட் 12,13,14 தேதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 16வது மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது.நமது மாவட்டத்தின் 10 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பெரியகுளம் பகுதியி-லிருந்து பா.செந்தில்குமரன், ஆண்டிபட்டியிலிருந்து ஆர்.அம்மையப்பன், தேனியிலிருந்து மு.தெய்வேந்திரன், எஸ்.சேசுராஜ்,போடியிலிருந்து செ.சிவாஜி, கம்பம் பகுதியிலிருந்து தே.சுந்தர், ஹ.ஸ்ரீராமன், க.முத்துக்கண்ணன், வி.வெங்கட் ராமன்,ஓவியா தனசேகரன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளில் மிகச்சிறப்பாக பங்கெடுத்தனர். பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. புதிய மாநிலத் தலைவராக பேரா.எஸ்.மணி, பொதுச்செயலாளராக எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், பொருளாளராக மு.இராதா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். நமது மாவட்டத்திலிருந்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக தே.சுந்தர்,பா.செந்தில்குமரன்,செ.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன் மற்றும் முனைவர்.ஜி.செல்வராஜ் ஆகிய ஐந்து பேர் தேர்வுசெய்யப் பட்டுள்ளனர்.
மாநில மாநாட்டு இணை அமர்வுகளில் பங்கேற்ற நண்பர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். செப்டம்பர்,4,2011 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக் கொடுத்துள்ளது. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆசிரிய இணைய கல்வி இதழான விழுது ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் இணையத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாவட்டச்செயற்குழுவிற்கு பிறகு நடைபெற்ற வேலைகள்.. போடி கிளையின் சார்பில் ஆகஸ்ட் 10ந் தேதி 5 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள் உட்பட சுமார் 250 பேர் கலந்து கொண்ட பேரணி போடியில் நடைபெற்றுள்ளது.போரும் அமைதியும் என்ற தலைப்பில் சூலப்புரம் பள்ளியில் பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. போடி மீனாட்சிபுரத்தில் துளிர் இல்லம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.-(சிவாஜி)
கம்பம் கிளையின் சார்பில் ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம்,இரண்டு துளிர் இல்லங்கள் துவக்கம்,800 குழந்தைகள் கலந்துகொண்ட மனிதச்சங்கிலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தேனி கிளையின் சார்பில் துளிர் இல்லங்கள் துவக்கம், சர்வதேச வனவள ஆண்டை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி,கருத்தரங்கம்,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பெரியகுளம்,ஆண்டிபட்டி கிளைகளின் சார்பில் மாவட்ட அளவிலான ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் தங்கள் பகுதி பள்ளிகளை பங்கேற்கச் செய்துள்ளன..
மாவட்ட மையத்தின் சார்பில் ஹிரோஷிமா நாகசாகி நினைவு தினப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.அதில் ஏராளமான பள்ளி,கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி கம்பத்தில் நடைபெற்றது. 17 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பங்கேற்றனர். மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குநர் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோரிடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கான சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது.செப்டம்பர் 10 அன்று பிற்பகல் பயிற்சிமுகாமும் நடந்து முடிந்துள்ளது.
செயற்குழு முடிவுகள்..
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டியில் ஒவ்வொரு கிளையும் தங்களது பகுதியிலிருந்து திரளான குழந்தைகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்.மாவட்டத்திற்கான இலக்கு 3000 குழந்தைகள்.
மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை பெரியகுளம் பகுதியில்,அக்டோபர் இறுதியில் நடத்துவது.பெரியகுளம் கிளைக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிப்பது.
ஆண்டிபட்டியில் தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கான பயிற்சி முகாம் செப்.18ல் நடத்துவது.
வட்டாரக்கிளைகள் தங்களது பகுதியில் பள்ளிக்கிளைகளையும் கிராமக் கிளைகளையும் அமைத்திட உரிய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னுடைய இயல்பான பணிகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள்,சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும் தலையிட்டு மக்களுக்கு அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அந்த வகையில் வைகை அணை-நீராதாரம் மாசுபடுதல் குறித்த ஆய்வை மேற்கொள்வது. மாவட்டச் செயலாளர், தேனி கிளைச்செயலாளர், ஆண்டிபட்டி கிளைச்செயலாளர்,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்து.மணிகண்டன் ஆகியோரைக் கொண்ட குழு ஒத்த சிந்தனையுள்ள மற்ற நண்பர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது.
நண்பர்களே..
நம்மால் எதுவும் முடியும்..
நம்பிக்கையுடன்..

தே.சுந்தர்

No comments:

Post a Comment