முதல் பக்கம்

Feb 1, 2012

துருவ உலகும்.உயிரினமும்.!.பகுதி..2

பனிப் பிரதேசத்தின் சொந்தக்காரர்கள்!
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian ) மொழியிலிருந்து உருவானது.இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea ), அலாஸ்காவின் ஓரம்,கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர். ஈஸ்கிமொக்களில் இன்னூட்(Inuit) மற்றும் யூபிக் (Yupik) என இருவகையினர் இருக்கின்றனர். அலூட் என்ற மூன்றாவது இனமும் உண்டு. இவர்கள் குட்டையாகவும், லேசான மஞ்சள் நிறத்துடனும், கருத்த நீண்ட முடியும், கருமை நிற கண்களும்,அகன்ற முகமும் உடையவர்கள். அலாஸ்காவில் இருப்பவர்கள் சைபீரியாவிலிருந்து சுமார் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்திருக்கின்றனர் என்று அறியப்படுகிறது.பாரம்பரியமாக இந்த மக்கள் உணவு,வெளிச்சம், சமையல் எண்ணெய், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் என அனைத்திற்கும் கடல் வாழ் பாலூட்டிகளையே நம்பி இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்திற்கு மீனையும், கலைமான்களையுமே நம்பி உள்ளனர்.

எஸ்கிமோவின் உணவு.!
எஸ்கிமோக்களுக்கு வாழ்தல் என்பது என்றைக்கும் நிரந்தர பிரச்சினையானதே. சீல்தான் அவர்களின் வாழ்வாதாரமான முக்கிய உணவு. இருப்பினும் கோட் என்னும் மீன், திமிங்கலம் மற்றும் மற்ற கடல் உயிரிகளையும் உண்பார்கள். கோடையில் கலைமான்கள், ஆடுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள். குளிர்கால உணவில் துருவக்கரடி, துருவநரி, துருவ முயல் போன்றவைகள் மேல் நாட்டம். இருப்பினும், அவர்களுக்கு இஷ்டமான உணவு சீல், கலைமான் கறி, வால்ரஸின் கல்லீரல் மற்றும். திமிங்கலத்தின் தோல் மட்டுமே.

உறைவிடம்.. !
உணவு தேடுதல் என்பது பெரிய சிக்கலாக உள்ளதால் எஸ்கிமோக்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழாமல், தொடர்ந்து நாடோடிகளாகவே இருக்கவேண்டிய நிலை. மூன்று வகையான வீடுகளில் வசிக்கின்றனர்.கோடையில் சீல் என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம். எலும்பை ஊடுருவும் குளிர் காலத்தில் பெரும்பாலோர்,பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ என்ற பனி வீடு உருவாக்கி அதில் வசிக்கின்றனர்.இது தாற்காலிக மானதே. குளிர்காலத்தில் மரம், எலும்பு போன்றவற்றால் ஆன கூடார வீடும் உண்டு.பொதுவாக இவர்கள் குழுவா கவே வாழ்கின்றனர். இதில் பல நூறு மனிதர்கள் இருகின்றனர். எஸ்கிமோக்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே நடத்துகின்றனர்.ஆனால் இவர்கள் குழந்தைகளைப் பொக்கிஷமாக கருதுகின்றனர். குழந்தைகளைத் திட்டுவதோ அடிப்பதோ ஒருக்காலும் இல்லை. இக்ளூ வைக்கட்ட அவர்களுக்கு 30நிமிடம்தான். 3 -4 மீ உயரம்தான் வீட்டின் உயரம். இதில் ஐஸ் படுக்கையின் மேல் முடி உள்ள தொலை விரித்து படுத்து உறங்குவார்கள்.வீட்டில் மின்விளக்கெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். போக்குவரத்து சாதனமே இல்லாத உலகம் இது. ம்..ம்..ஒரு சைக்கிள்கூட கிடையாது. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டிதான் இவர்களின் அதிக பட்சமாய் வேட்டை முடித்து உணவு கொண்டு வரும் சாதனம்.

உடை!

எஸ்கிமோக்கள கடல் வாழ் விலங்குகளின் உடையையே அணிகின்றனர். ஆனால் விரும்பி அணிவது கலைமான் தோலின் உடைதான். ஏனெனில் அது உடலைக் கொஞ்சம் கதகதப்பாக வைத்திருக்கும். எடை குறைவாகவும் இருக்கும். இது கிடைக்காவிட்டால்தான் சீல், துருவக் கரடி,துருவ நரி போன்றவற்றின் தோலையும் பயன்படுத்துவார்கள்.அவர்கள் உடை அணியும் முறை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.குளிர் காலத்தில் எலும்பு மற்றும் மரத்தாலான கண்ணாடிகளை அணிகின்றனர். குளிர்காலத்தில் இரண்டு அடுக்கு உள்ள உடைகள் போடுகின்றனர் . அந்த உடை,உள்ளே தோலால் ஆனதும் , அதன் வெளியே முடியுடன் கூடியதாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே காற்றோட்டம் இருக்கும். இதனால் உடலின் வெப்பம் பாதுகாக்கப் படுகிறது.கோடையில் ஒரு அடுக்கு உள்ள உடை அணிகின்றனர். இன்று எஸ்கிமோக்களின் கலாச்சாரம் மாறிவிட்டது. வெளியிலிருந்து வாங்கும் உணவு, உடைகள் பயன் படுத்துகின்றனர். வெளியிடங்களுக்கு பணிக்கும் வருகின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் உணவு தேடுவார்கள்;வேட்டைக்குச் செல்வார்கள். வீட்டில் உணவு சமைப்பதும், உடைகள் தைப்பதும்,குழந்தைகளைப் பராமரிப்பதும்தான் பெண்கள் பணி. கடல் கடவுளான செட்நாதான் தங்களைக் காப்பாற்றுகிறது என்று நம்புகின்றனர். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை, சூரியன் மற்றும் நீரை காப்பற்று வதும் தேவதையே என ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் எஸ்கிமோக்கள் .

தென்கோடி உலகம்.!



கொஞ்சம் சாய்ந்து வெளி நீட்டிக் கொண்டிருப்பது போன்ற உலகின் தென்கோடியைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் அண்டார்க்டிக் என்ற பனிக்கண்டம். இது தென்பகுதி உலகின் அண்டார்க்டிக் வட்டத்தை தன் வசம் வைத்துள்ளது. இதனைச் சுற்றி தென் பெருங்கடல் உள்ளது.1 .4கோடி ச கி.மீ பரப்பு கொண்ட அண்டார்க்டிக் பகுதி உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது ஆஸ்திரேலியாவைவிட இரண்டு மடங்கு பெரியது. அன்டார்க்டிக்காவின் 98 % பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது. தரைமேல் சுமார் 1 .6 மீ உயரத்திற்குபனிப்பாளம் உள்ளது.

அண்டார்க்டிகாவின் குணமும் நிறமும்..!


அன்டார்க்டிகா பொதுவாக உலகிலேயே மிகவும் குளிர்ந்த , உலர்ந்த, காற்று அதிகம் உள்ள கண்டம். அது மட்டுமல்ல அனைத்து கண்டங்களில் மிக உயரத்தில் இருப்பதும் அண்டார்க்டிகா மட்டுமே. இங்கு அதிகம் தாவரங்கள் இல்லாததால், பனிப் பாலைவனம் என்றே அழைக்கப்படுகிறது.வருடத்தில் வெறும் 200 மி.மீ (8 இன்ச்தான் )மட்டுமே மழைப் பொழிவு உண்டு. ஆனால் இங்கு குளிர் குடலை உருவி விடும்.ஆமாம், இதன் வெப்பநிலை - 89 டிகிரி செல்சியஸ். அதனால் இங்கு மனித வாழ்க்கையே/ வாடையே கிடையாது. ஆனாலும் கூட,அப்பகுதியில் அண்டார்க்டிகா பற்றி ஆராய தொடர்ந்து சுமார் 1000 - 5000 மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். இங்கு குளிரைத் தாக்கு பிடிக்கும் உயிரினங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை ஆல்காக்கள், பாக்டீரியா , பூஞ்சைகள், விலங்குகளில் உண்ணிகள், தட்டைபுழுக்கள்,சீல்,மற்றும் இராணுவ வீரர்கள் போல் அணிவகுப்பு நடத்தும் பெங்குவின்கள் இந்த குளிர்ப் பரப்பில், பனிப்பாளத்தை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருகின்றன.இங்கு பனிக்கரடியோ எஸ்கிமோக்களோ கிடையாது.

சூரியக் கதிரை விரட்டும் பனிப்பாறை!


அண்டார்க்டிகா பற்றி கிரேக்கர்கள் சொல்லி இருக்கின்றனர். ஆனால் 1820 வரை அந்தப் பனிக்கண்டத்தை யாரும் பார்த்ததில்லை.முதன் முதல் 1821 ல் தான் அண்டார்க்டிகா பகுதிக்குச் சென்றனர். அன்டார்க்டிக்காவின் பனிப் பாறை 5 கி.மீ உயரம் வரை இருக்கும். இதில் உலகின்70 % நல்ல நீரைப் பெற்று விட முடியும். ஒருக்கால் இவை கரைந்தால், கடல் மட்டம் 50 - 60 மீ. உயரம் வரை உயரும். அண்டார்க்டிகாவின் பனிப்பாறைகள் மிகப் பெரிய பனியாறுகள்தான். ,இவை மிக மிக மெதுவாக கடலை நோக்கி செல்கின்றன. பணித் தொப்பியைப் போட்டிருப்பதால், இந்த கண்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,300 மீ உயரமாக உள்ளது. மேலும் அண்டார்க்டிகா மிகவும் குளிராக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? சூரியனிலிருந்து வரும் சூரியக் கதிரை இதன் பனிப் பாறைகள் சுமார் 80 % திருப்பி அனுப்பி விடுகின்றன. மீதமுள்ள 20 % சூரிய வெப்பம் வளிமண்டலம் மற்றும் மேகங்களால் உட்கிரகிக்கப்படுகின்றன.

உலகின் மிக நுணுக்கமான ஆய்வகம்.!


அண்டார்க்டிகாவில் ஏராளமான கனிமங்கள் உள்ளன. அங்கே எண்ணெய் வளமும் ஆழ்ந்து கிடக்கிறது. உலகின் அற்புதமான ஆய்வகம் அன்டார்க்டிகாதான். உலகின் பல பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு அறியப்படாமல் இருக்கும் வளங்கள், உயிரிகள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் . இதன் மாசு படாத சூழலைக் கணக்கில் கொண்டு, வெப்ப நிலை மாற்றத்திற்கும், பிரபஞ்ச உருவாகத்திற்கான காரணங்களையும் இங்குதான் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக்சிசனை அப்படியே முழுங்குவேன்.!

அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3 .6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான் போங்க..அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் பெரியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான்.அதன் அளவு 1 .3 செ.மீ தான்.அதனால் பறக்க முடியாது. அன்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன .

விலங்கினங்கள்.!
அன்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன.இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. அன்டார்க்டிக்கவை 29 நாடுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதன் அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்காகத்தான். ஆனால் துரதிருஷ்ட வசமாக, இதன் பெரும்பகுதி உலக வெப்பமயமாக்கலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி , மார்ச் ) பார்க்கலாம். இவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.

அரோரா (Aurora ..அசையும் துருவ ஒளி).!

அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும். அரோரா என்பது ரோமனியர்களின் விடிகாலை பெண் கடவுளின் பெயராகும் . கிரேக்கத்தில் போரியஸ் (Boreas) என்பது வடக்கு காற்று என்று பொருளாகும். இரண்டையும் இணைத்து வடதுருவத்தில் தெரியும் அசையும் வண்ண ஒளிக்கு பெயர் சூட்டியுள்ளனர்.. இது புவியின் 60 டிகிரி அட்சரேகைக்கு மேலும், வானின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் 80 கி.மி உயரத்துக்கு மேல் உள்ள வெப்பகோளத்தில் அழகான வண்ணத் திரையாக காட்சி அளிக்கிறது. புவியின் காந்தப் பரப்பிலிருந்து புறப்பட்ட மின்னூட்டம் பெறப்பட்ட துகள்களான ஆக்சிஜன் மற்றும் நைட்டிரஜன் அயனிகள், சூரியக் காற்றுடன் மோதும்போது வானில் வண்ணங்கள் தொடர்ந்து உண்டாகின்றன. இது பார்ப்பதற்கு வண்ணத் திரைகளைத் தொங்கவிட்டது போலிருக்கும். அவை அசையவும் செய்யும். இந்த வண்ண ஒளிப்பரப்பு பகலிலும் கூட நடக்கிறது. இரவில் இந்த ஒளியில் அமர்ந்து புத்தகம்/நாளிதழ் கூட படிக்கலாம்.

கடவுளின் சமிக்ஞைகள்.!
ஆர்க்டிக்கில் தெரியும் வண்ணத் திரைக்கு அரோரா போரியாலிஸ் (Aurora borealis) என்றும், அண்டார்க்டிக்கில் தோன்றும் வானின் வண்ண ஒளி ஆட்டத்திற்கு, அரோரா ஆஸ்த்திரேலிஸ் (Aurora australis) என்றும் பெயர். இந்த ஒளிகள் பெரும்பாலும் அழகான பச்சை, வயலெட், சிவப்பு வண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி அளிக்கும்.ஆக்சிஜனின் மின்னூட்டம் பெற்ற துகள் இருந்தால் அது பச்சை/பழுப்பு கலந்த சிவப்பாகவும், நைட்டிரஜன் துகள் எனில் நீளம்/ சிவப்பாக காட்சி தரும்.அப்பகுதி மக்களால் இந்த ஒளிகள், கடவுளின் சமிக்ஞைகள் என்று நம்பப்படுகின்றன. அவற்றின் நிறங்கள் கணத்தில் மறைந்து மாறி அற்புதமாய் தெரியும். இந்த அற்புதத்தைக் காண கனடாவின் கடற்கரைக்கு மக்கள் பயணம் வருகின்றனர். இந்த அரோரா தெற்கே அன்டார்க்டிக்கா , தென் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தெரியும்.







mohana..

No comments:

Post a Comment