முதல் பக்கம்

Feb 1, 2012

சனியின் கதை..!

சனி தெரியுமா..சனி..!

ராமசாமி சனியை தெரியுமா?

என்ன இப்புடி கேட்டுப புட்டீக. நான் என்ன அவ்வளவு வெவரம் இல்லாதவனா? வாரம் ஒரு தடவ வர்ற சனிக்கெழம எனக்குத் தெரியாதா குருசாமி?

ராமசாமி நான் அந்த சனியைச் சொல்லலே.

பின்ன என்ன, நம்ம வீட்டுக்குத்தான் தெனம் ஒரு சனியனைக் கூட்டிட்டு வர்றேனே. அதையா?

இல்லேப்பா..

சோசியர் சொல்வாரே.. அந்த சனியா ?

இல்லே..

வேற ஏது..? கோவில்லே நவக்கிரகத்தோட, ஒண்ணை ஒண்ணு பாக்காம காக்கா மேல சும்மா ஜம்முன்னு ஒக்காந்து இருக்குமே ? அந்த சனியா?

இது எதுவுமே இல்லேப்பா?

பின்ன நீ என்னதான் சொல்ல வர்றே..காலையிலேயே புதிர் போடறியே..!


ராமசாமி, ராத்திரியிலே, வானத்திலே சனின்னு ஒரு கிரகம் சுத்தி வருதே.. அத நான் விடிகாலையிலே பாத்தேன். அதப் பத்தி சொல்லலாம்னா, நீ என்னைய குழப்பிட்டப்பா

தம்பி, நீதான் அது கெரகம்னு சொல்லிட்டியே..அந்த கெரகம் புடிச்ச சனி புடிச்சா அப்புடித்தான். ஒரு ஆட்டு ஆட்டிடும்.

ராமசாமி நீ நெனக்கிற மாதிரி இல்ல இது, சூரியனை சுத்தி வர்ற அழகான கிரகம் இது. இதுவும் நம்ம பூமி மாதிரி ஒரு கிரகம் அல்லது கோள்னு சொல்லலாம்.அது இப்ப ராத்திரி ரெண்டு மணியிலிருந்து காலையில வரைக்கும் தெரியுது. அத சொல்றேன். நீயும் காலையில வா. என் கிட்ட இருக்கற பைனாகுலர்லே நல்லா பாக்கலாம்.

அப்புடி வெளக்கமா சொன்னாத்தானே தெரியும். வந்துடறேன். அப்புறம் என்ன வேலை எனக்கு?

பலவகை சனிகள்..!


 
OLYMPUS DIGITAL CAMERA

நீங்க சனி பற்றிப் பேசினால் இப்படி எல்லாம் பொதுவாக ஒரு உரையாடல் நடக்கும். நீங்க சனின்னு சொல்லிட்டா. நமக்கு சனிக்கிழமை தெரியும். சோசியர் சொல்ற ஏழரை நாட்டு சனி தெரியும். அது படுத்தும் பாடு என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதும தெரியும். வீட்டில் குழந்தைகளை சனியனே என்று அன்போடு கூப்பிடுவது தெரியும். கோவிலுக்குச் சென்று சனிக் கிரகத்துக்கு எள் பொட்டலம் வாங்கிப் போடவும் தெரியும். ஆனால் நம் பூமிபோல சூரியனை, சுற்றி வரும் இந்த அழகான கோளைப் பற்றிyaதகவல் பெரும்பாலோருக்கு தெரியாது. ரொம்ப அழகான அற்புதமான கோள் இது.

ரோமானிய விவசாயக் கடவுள்.!




நம் சூரிய குடும்பம் பற்றி நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். அதில் சூரியன்தான் மைய நாயகன் என்றும் அதனை எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன என்று இப்போது மூன்றாம் வகுப்பு புத்தகத்திலேயே தகவல் தரப்பட்டிருக்கிறது.. சூரிய குடும்பத்தில் நம பூமி மூன்றாவதாக சூரியனை சுற்றி வருகிறது. நம் பூமி மட்டும் தங்க சூரிய குடும்பத்திலேயே ஸ்பெஷல். அதாங்க, இதில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. வேறு எந்த சூரிய குடும்பத்திலும் உயிர்கள் இருப்பதாக ஆதார பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. நம்ம சனி என்பது சூரியனை ஆறாவதாக கோளாக சுற்றி வருகிறது.அது மட்டுமல்ல, இது சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். . சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

புராணத்தில் நம் சனியார்.!


 
குரோனஸ்


ரோமானிய புராணக் கதைகளின்படி, கிரேக்க கடவுளான குரோனஸ் (Cronus) தான் சனி என்று கருதி இருக்கின்றனர். குரோனஸ் கடவுள் , யுரேனஸ் (Uranus) மற்றும் கையா (Gaiya) வின் மகன். கிரேக்க கடவுளர்களான ஜீயஸ் (zeus) அல்லது வியாழன் (Jupiter) னின் தந்தை.அது மட்டுமல்ல, செராஸ் (Ceres ), வியாழன் (Jupiter), வேர்தாஸ் (Veritas), புளூட்டோ (Pluto), நெப்டியூன் (Neptune) மற்றும் ஜுனோவின்(Juno) தந்தை என்கின்றனர். ரோமானிய நாட்டில் ரோம் நகரின் மையத்தில், சிதைந்து போன பழங்கால அரசு கட்டிடங்களுக்கு இடையே, ஒரு செவ்வக வடிவமான ஒரு பெரிய கட்டிடம் சனிக் கடவுளுக்கு இருக்கிறது.அங்கே பொதுவான அரசு கருவூலமும் இருக்கிறது. சனி கடவுள்களின் அரசன் என்றும் கூட கூறப்படுகிறது. சனியின் மனைவி, ஊப்ஸ் (Oops). ஊப்ஸ் ரோம பெண் கடவுளான ரியாவுக்கு (Rhea) இணையானவர் .பிரிட்டிஷ் வழக்கத்தில் சனிக்கிழமை என்ற சொல் உருவானதின் மூலக்காரணி இந்த சனி (Saturn) தான் என்று சொல்லப்படுகிறது.

இரவின் நண்பர்களான கோள்கள்.!


நாம் இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர்.சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

கலிலியோவும், சனிக்காதும்..!

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலீலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் வளையங்களைப் பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள்என்றும் , அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும அவருக்கு அப்போது தெரியாது.பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.

தட்டை துருவங்கள்..!


சனிக்கோள் வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சூரியனிடமிருந்து 140 கோடி கி.மீ. (1,400,000,000௦௦௦ கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானவியல் அலகு ஆகும். ஒரு வானவியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14 .9 கோடி கி.மீ.தொலைவுதான்.சனி இருக்கும தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கி.மீ.ஆனால் பூமியின் விட்டம் 12 ,756 .3 கி.மீ. சனியின் விட்டமும் கூட பூமி யைப் போல சுமார் 10 மடங்கு. எனவே இதில் வரிசையாக 9 பூமிகளை நிற்க வைக்கலாம். உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது ஆனால் சனிக்கோளின் துருவங்கள் தட்டையான பந்து/ஆரஞ்சு போல காணப்படுகிறது. துருவங்களில் விட்டம் 108,728 கி.மீ தான்.

சனியைத் தூக்கிப் போட நீங்க ரெடியா..?



சனிக்கோள் மிக வேகமாக சுற்றுவதால்தான் துருவப்பகுதிகள் தட்டையாகிவிட்டன என்றும சொல்லப்படுகிறது..சனிக்கோள் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் அனைத்து வாயுக் கோள்களின் துருவங்களும் தட்டையாகவே உள்ளன. பாறைக் கோளான நம் பூமியின் நிலையும் அதுதானே. .சனிக்கோளின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட மிகவும் குறைவு. எவ்வளவு தெரியுமா? சனியின் அடர்த்தி 0.69 தான்.நீரின் அடர்த்தி 1 . சூரிய குடும்பத்தில் மிக மிக அடர்த்தி குறைவான, மிகவும் லேசான கோள் சனி மட்டுமே. பூமியின் அடர்வு 5 .32 . இதிலுள்ள ஹைடிரஜனும் ,ஹீலியமும்தான் இதன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணி .. நீங்க சனிக்கோளை தூக்கி கடலில் போட்டால், இடுப்பு ஒட்டியாணம் மாட்டிக் கொண்ட சனிக்கோள், நீரில் ஜம்மென்று ஓர் ஆரஞ்சு பழம் போல மிதக்கும் .

பெரிது..பெரிது ..அதனினும் பெரிது..!


 
வியாழன், சனி சனி பூமியைவிட 764 மடங்கு பெரியது தெரியுமா? ஆனால் பூமியை விட 95 மடங்கு மட்டுமே நிறை உள்ளது. இதில் வியாழன் பூமியைப்போல் 318 மடங்கு பெரியது. நீங்கள் வியாழன் என்ற பெரிய பானைக்குள் பூமி லட்டை ஒன்று இரண்டு என்று எண்ணி எண்ணி உள்ளே போட்டால், வியாழனை நிரப்ப 318 பூமிகள் வேண்டும்.யோ.. அம்மாடியோவ் .! .அவ்வளவு பெரியது நம்ம பெரிய அண்ணாச்சி வியாழன்..! ஆனால் ஒட்டு மொத்தமாக சூரிய குடும்ப கோள்களின் நிறையில், சனியும் வியாழனும் மட்டுமே ஏகமாக போட்டி போடுகின்றனர். மற்றவர்கள் இவர்கள் கிட்டே கூட நெருங்கவே முடியாத, பெருமுதாலாளிகளின் போட்டி போல்தான் இதுவும். ஆம், .சனி, வியாழன் இருவரும் சேர்ந்து போட்டி போட்டுகொண்டு, சூரியக் குடும்பக் கோள்களில் 92 % நிறையை தங்களின் கையில்/கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.எப்படி இவர்களின் தர்பார்..! காட்டுராஜா சிங்கத்தின் பெரும்பங்கு போல சூரிய குடும்பத்தில் வியாழன், சனி இரண்டும் ரொம்பவே ஜபர்தஸ்து பண்ணுகின்றன.

விண்மீனான சூரியன்..!


 
                                                சனியிலிருந்து சூரியன் தோற்றம்

சனியிலிருந்து சூரியனைப் பார்த்தால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதைப் போல பிரகாசமாக இருக்காது.ஒரு பிரகாசமான விண்மீன் போலவே தெரியும் சனியும். சனிக்கோளில் பூமியில் தெரியும் சூரிய ஒளியில் 1 % மட்டுமே தெரியும்.உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோதான்.

சாய்ந்தாடம்மா. .சாய்ந்தாடு..!


பூமி தன அச்சில் 23 .5 பாகை சாய்ந்துள்ளது. அது போலவே சூரிய குடும்பத்து அனைத்து கோள்களும் தன அச்சில் சாய்ந்தே உள்ளன. சனிக் கோளும் தன அச்சில், 26 .73 பாகை சாய்வாகவே சூரியனை சுற்றி வருகிறது. நம் பூமியின் கணக்குப்படி சனிக் கோள் ஒரு முறை தனைத்தானே சுற்ற 10 . மணி, 32 நிமிடம், 35 நொடிகள் ஆகிறது.இந்த துல்லியமான தகவல் 2007 செப்டம்பரில் விண்கலங்கள் வாயேஜர், புரோப் மற்றும் கசினி மூலம் அறிந்தது. இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். ஆனால் பொதுவாக சனியின் ஒரு நாளின் நேரம் என்பது காலப் போக்கில் மாறுகிறது என்பதனை கடந்த 25 ஆண்டுகளில் அறிந்துள்ளனர்.முன்பு சனியின் ஒரு சுற்றலின் நேரம் 10 மணி 39 நிமிடம் ஆக இருந்தது. பின்னர் , அதன் வேகம் 10 மணி 45 நிமிடம் ஆகிவிட்டது. . ஆனால் சனி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர நம் பூமி நேர கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் சனிக்கோளுக்கு இது ஓர் ஆண்டு தான். இது சனியாருக்கு ஜுஜுபி எனலாமா?இதில் நான்கில் ஒரு பங்கை நாம் கணக்குப் பண்ணி ,இதைத்தான் நாம் சனி திசை 7 1 /2 ஆண்டுகளுக்கு இருக்கு என்று சொல்கிறோம்.

சனிக் கோள்... உருவாக்கம்..?

சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல், மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப் படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது.சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. ஆனால் சனியின் காந்தப்பரப்பு, பூமியின் காந்தப் பரப்பை விட பலவீனமானது. வியாழனின் காந்தப் பரப்பில் இருபதில் ஒரு பகுதிதான் (20 :1) சனியின் காந்தப் பரப்பு.

முகம் பார்த்து ஏமாறாதே..!



சனியின் வளிமண்டல வெப்பநிலை அதிக பட்சம்


-130 °C லிருந்து -191 °C. வரை. இதன் வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறதே என்று இதைப் பற்றி கொஞ்சம் குறைவாக எடை போட்டு, இது மிக அமைதியான கோள் என நினைத்து விட வேண்டாம். பூனை போல சாது என்ற எண்ணம் வேண்டாம். இது ரொம்ப பொல்லாத கோளும் கூட. , மேற்பரப்பில்தான் குளிரும் உறைபனியும். இதன் உள்ளே மையம் பூமி போலவே கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது.சனி ரொம்ப கோபக்கார கோளுங்க.! சனியின் உட்பகுதி அநியாயத்துக்கு வெப்பத்தை தன்னிடத்தே கொண்டுள்ளது. அதன் உட்பகுதி வெப்பம் என்ன தெரியுமா? கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள். 12,000 °C .வெப்பம்.

எப்படி..? எப்படி..? எப்படி..!


சனி தான் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைவிட 2 .5 மடங்கு அதிக கதிர்வீச்சு ஆற்றலை அதன் மேற்பரப்பிலிருந்து வெளியிடுகிறது.அது எப்படி? நம்ம எல்லோரும் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைத்தான் வெளியிடுவோம் அல்லது கோள்களில் கொஞ்சம் சிதறி வெப்ப அளவு கொஞ்சம் குறைந்து,வெளியிடப்படும்.ஆனால் இங்கே உல்டாவாக நடக்கிறதே? பெற்ற வெப்பத்தை விட அதிகமாக எப்படி வெளிவிட முடியும்? இது எப்படி? எப்படி ... . இதெல்லாம் சாத்தியாமா என்றும ஆச்சரியப்படத் தோன்றுகிறதா ? விஷயம் அங்கு இருக்கிறது நண்பா..! சனியினுள் உருவாகும் அதிகப்படியான, ஆற்றல், அதன் மெதுவான ஈர்ப்புவிசை அழுத்தத்தினால், கெல்வின்-ஹேல்ம்ஹோல்ட்ஸ் செயல்பாடு(Kelvin–Helmholtz mechanism ) மூலம் உற்பத்தி செய்யப் படுகிறது.சனியின் அதிகப்படி ஆற்றலுக்கு இது மட்டுமே காரணி அல்ல. இதற்குள்ளே வேறொரு செயல்பாடும நடந்து கொண்டிருக்கிறது.சனியின் உள்ளே உள்ள ஹீலியம் துகள்கள் மழையாகப் பொழிந்து வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.

அழகிய புயலே..!


சனிக் கோளின் வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது சூறைக்காற்று போல, எப்போதுமே,மணிக்கு 1800 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. அம்மாடியோவ்.. நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுதான் இந்த காற்றின் வேகம். பூமியிலிருந்து அனுப்பட்ட வாயேஜர் (Voyager) விண்கலம்தான் சனியின் வளிமண்டலத்தில் கிழக்கு நோக்கிய காற்றின் வேகத்தை கண்டுபித்தது. நம் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் கோள் சனி மட்டுமே. 2007 ல் செலுத்தப்பட்ட கசினி (Cassini) விண்கலம், சனிக்கோளின் வடபகுதி யுரேனஸ் போலவே, அழகிய நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் நீல நிறத்தில் மின்னுகிறது என்பதை தெரிவித்தது. ரெலைக் என்ற பிரிட்டிஷ்க்காரர் தான் முதலில் சூரியன் மறையும் தருவாயில் மின்காந்த கதிர்வீச்சு அல்லது ஒளிச்சிதறல் மூலம் ஒலியலைகளை விட சிறிய துகள்கள் இந்த நீல நிறத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அதனால் இந்த சிதறலுக்கு ரெலைக் சிதறல் (Rayleigh scattering) என்று பெயர். மேலும் துருவங்களில் துருவ வொர்டெக்ஸ்( warm polar vortex,) என்ற புயல் உருவாகிறது. இது சூரிய குடும்பத்தில் சனிக்கோளில் மட்டுமே நடக்கிறது. அங்கே வெப்பநிலையும் உச்சத்தில் −122 °C என இருக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது. . இந்த வெப்பநிலைதான் சனிக்கோளின் அதிக பட்சமாக கோடையின் வெப்பமாகும்.




அறுகோண மேகம்..!

சனிக்கோளின் வடதுருவ வொர்டெக்ஸைச் சுற்றி ஓர் அறுகோண அமைப்பு மேகமும் காணப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தது நாம் செலுத்திய விண்கலமான வாயேஜர்தான்.ஆனால் தென் துருவத்தில் வொர்க்டெக்ஸோ, அறுகோண மேகமோ கிடையாது.இங்கே, நம் கடலில் சூறாவளி உருவாகும்போது ஓர் கண் இருப்பது போன்ற கண் அமைப்பு தென் பகுதியில் தென்படுகிறது.

வாயுக் கோளத்தின் வாயுக்கள்..!


சனிக்கோளில் 96.3% ஹைடிரஜன் வாயுவும் , 3.25% ஹீலியமும், உள்ளது..மேலும் 0.05 % அளவு மீத்தேன் மற்றும் கொஞ்சூண்டு அம்மோனியாவும் (ammonia,) அசிட்டிலீன்,(acetylene) ,ஈத்தேன் (ethane), புரொப்பேன் (propane,), பாஸ்பைன் (phosphine) மற்றும் மீத்தேனும் (methene ) சனியின் வளிமண்டலத்தில் உள்ளன ,அதானால் தான் சனியார். சனி மகராஜா இவ்வளவு லேசாக இருக்கிறார். இவர் பேரரசர் போல பெரிய மகுடம்/கிரீடம் சூடிக்கொண்ட கோள் சனியார் மட்டும்தான். இந்த சுற்றுக் கிரீடத்தை நாம் ஒட்டியாணம் என்றும் சொல்லலாம்.

மின்னலின் சக்தி..!


 
தென் துருவ் அரோரா

 
ஹப்புள் சனி அரோராவை எடுத்த படம்.

சனியின் வளிமண்டல் மேகங்களில் பூமி போலவே மின்னல்கள் உருவாகின்றன. அதன் அதிர்ச்சி என்பது, பூமியில் உருவாவதைப் போல பல கோடி, கோடி மடங்கு அதிகம்.

நம்ம பூமி 23 .5 டிகிரி சாய்வாக உள்ளதால் பருவ காலங்கள் வருகின்றன. அது போலவே, சனியிலும் பருவகால மாற்றங்கள் உண்டு. அதன் காரணி சனிக்கோளார் தன அச்சில் 26 டிகிரி சாய்ந்திருப்பதே.


பூமியில் ஏற்படுவது போலவே, சனியிலும் அதன் பெரிய துணைக்கோளால் கிரகணம் உண்டாகிறது. சிறு கோள்களால் துணைக்கோள் நகர்வு (Transit)தெரிகிறது. சனியின் காந்தப்பரப்பால், அதன் துருவங்களில், பூமியில் உருவாவது போலவே அரோரா உண்டாகிறது. உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோதான்.

சனியின் வளையல்கள்..!


 
வளையங்கள்

 
சனியின் வளையங்கள்

சனியின் நடுகோட்டுப் பகுதியில்தான் இந்த வளையங்கள் காணப்படுகின்றன. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் வளையங்கள் இருந்தாளும் கூட, அவை சனியில் இருப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக, அழகாக தெரிவதில்லை. சனியின் வளையங்கள் அதன் நடுக்கோட்டுக்கு மேலே 6,630 கி.மீ லிருந்து 120,700 கி..மீ தூரம் வரை விரவிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றின் கனம் வெறும் 23 மீட்டர் மட்டுமே.
 
சனிவளையங்களின் பொருட்கள் வளையங்களில் 93% பனியின் துகள்களாலும், பாறைத் துணுக்குகளாலும்,மீத்தேன் தூசுகளாலும் ஆனவை. மீதி 7% அமார்பாஸ் கார்பன் (amorphous carbon) . அந்த துகள்களின் அளவு குட்டியூண்டு துகள் களிருந்து அதிக பட்ச அளவு 10 மீ. சில இவற்றை சின்ன தொலை நோக்கியால் கூட அழகாக காணமுடியும். கொஞ்சம் பெரிய தொலைநோக்கி என்றால் சனிக் கோளின் நிறைய வளையங்களைக் காணலாம்.


கலீலியோவிற்கு அடுத்தபடியாக இந்த வளையங்களை 1655 ல் பார்த்து அவைகளுக்கு விளக்கம் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் ( Christiaan Huygens). இந்த வளையங்கள் 241 401.6 கி.மீ சுற்றளவு உள்ளவை. ஆனால் இதன் கனம் நம்ம வீட்டு பேப்பர் தோசை போலத்தான். அவ்வளோ மெலிசு.சனிக்கோள் உருவான போதே இதன் வளையங்களும் உருவாகி இருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையங்கள் ஒருகாலத்தில் சனியின் துணைக்கோளாய் இருந்து மோதி உடைந்ததின் மிச்ச சொச்ச துண்டுகளே இப்படி வளையமாய் சனியைச் சுற்றி உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர். சனியின் வளையங்களை எப்போதும் காணமுடியாது.


சில சமயம் அவை படுக்கை வசத்தில் இருந்தால் வளையம் ஒரு கோடு போல இருக்கும். அப்போது வளையங்கள் நமக்குத் தெரியாது. இதுவரை 2008-2009,ல் அவ்வாறு வளையங்கள் மறைந்து போயின. இனி மீண்டும் 2024-2025.ஆண்டுகளிலும் சனியின் வளையம் காணாமல் போகும். மீண்டும் மீட்கப்படும்.

சனியின் துணைக்கோள்கள்..!


 
டைட்டான்

 
துணைக்கோள்கள்

சனிக்கோளுக்கு இதுவரை 62 துணைக் கோள்கள்/சந்திரன்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் 20 சந்திரன்கள் வரை கசினி விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 53 சந்திரன்/ நிலாவுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுள் மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான்(Titan) தான் .இதுதான் சனியின் சுற்றுப் புறத்திலுள்ள பொருள்களில் 90 % நிறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சனியின் வளையங்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. இந்த டைட்டன் துணைக்கோள், நம்ம சூரிய குடும்பத்தின் முதல் புதல்வன் புதனை விடப் பெரியது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள். முதல் பெரிய துணைக்கோள், வியாழனின் கனிமேடுதான்.டைட்டனின் வளிமண்டலத்தில் கனமான நைட்ரஜன் நிரம்பி இருக்கிறது. ஒரு காலத்தில் நம் பூமியில் உயிரினம் உருவாகாத போது இருந்த மாதிரியே இதுவும் இன்று இருக்கிறது. நம் பூமியின் வளிமண்டலம் 60 கி.மீ உயரம் வரை விரிந்துள்ளது. ஆனால் டைட்டனின் வளிமண்டலம், பூமியைப் போல 10 மடங்கு பெரியது. சனியின் அடுத்த இரண்டாவது பெரிய நிலாவின் பெயர் ரியா(Rhea).இதில் மிக மெல்லிய வளையமும், குறைவான வளிமண்டலமும் உள்ள நிலா. மற்ற நிலாக்கள் ரொம்ப சிறியவை. 34 நிலாக்கள் 10 கி.மீ விட்டம் மட்டுமே உள்ளவை. பெரும்பாலான நிலாக்களுக்கு, டைட்டனின் கிரேக்க புராணப்படியே பெயர் சூட்டப் பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பெரிய வளிமண்டலம் உள்ள துணைக்கோள் டைட்டன் மட்டுமே. இதில் தான் ஹைடிரோகார்பன் ஏரி உள்ளது.சனியின் துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் (Enceladus ) எதிர்காலத்தில் நுண்ணுயிர்கள் வர வாய்ப்பு உள்ள இடம் என்றும் சொல்லப்படுகிறது .

சனியை அறிய அனுப்பிய விண்கலங்கள்..!


 
சனி-கசினி

சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11 ) என்ற விண்கலம்தான் முதன் முதல் 1979 ல் சனிக்கோளைப் போய் எட்டிப்பார்த்து கதை பேசிவிட்டு வந்தது. பின்னர் வாயேஜர் 1 ( செப்டம்பர் 12, 1980) மற்றும் , வாயேஜர் 2 (August 25, 1981)விண்கலன்கள் அனுப்பப் பட்டன. விஜயம் . கசினி (Cassini) விண்கலம 2004 ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம் படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுக்குகின்றன. இது மின்னலடிக்கும் நீலம், மரகதப் பச்சை, புதினா பச்சை என பல வண்ணங்கள் காட்டி நம்மை மயக்குகின்றன. சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது... mohana..

No comments:

Post a Comment