முதல் பக்கம்

Nov 25, 2010

அன்றொரு நாள் 3

அன்று
குட்டீஸ்களுக்கு
சூழ்நிலையியல் பாடம்
நடத்திக் கொண்டிருந்தேன்.
பாடத்தின் தலைப்பு
கவிதாவின் குடும்பம்.

பாடத்தின் நோக்கம்
குழந்தைகளுக்கு
அம்மா,அப்பா,
தாத்தா,பாட்டி,
அக்காள்,அண்ணன்,
தங்கை போன்ற குடும்ப உறவுகளை அறிமுகப் படுத்துவதுதான்.

அதற்காக
அழகழகாய் ஏழெட்டு
படங்களைத் தீட்டியுள்ளனர்.
அவை தொடர்பான
கேள்விகளுக்கு
விடையாய்
அம்மா,அப்பா..
என வரிசையாகக்
குடும்ப உறவுகளைக்
குழந்தைகள் கூறுவார்கள்.
அதன் மூலம் பாடத்திறனை எளிதில் அடையச்செய்யலாம்
என்பது பாடத்திட்ட
வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
நம்முடையதும் கூட.!

ஆனால் நடந்தது என்ன?
நான் கேட்டேன்..
உங்க வீட்டுல கோலம்
போடுவது யார்?
குழந்தைகள் கோரஸாகச்
சொன்னார்கள்: 'அம்மா'!

அடுத்த கேள்வி.
சமைப்பது யார்?
அம்மா...

பாத்திரங்களைக் கழுவுவது யார்?
அம்மா...

வீட்டில் தண்ணீர் பிடிப்பது? அம்மா...

காய்கறிகள் வாங்கி
வருவது? அம்மா...

காய்கறிகளை நறுக்குவது? அம்மா...

வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வது? அம்மா...

அழுக்குத்துணிகளைத்
துவைப்பது? அம்மா...

குளிக்க வைப்பது? அம்மா...

இப்படி எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மா அம்மா அம்மாதான்..!
அவர்களின் பதில்கள்

முற்றுப்புள்ளிகளாய்
அல்லாமல்
அடுத்தடுத்து
பல கேள்விகளை
எழுப்புகிறது.

இன்னுமொரு
கொடுமை என்னவென்றால்..
உங்க வீட்டுல யார் கதை
சொல்வதெனக் கேட்டபோது
வகுப்பறையில் ஒரு
நீண்ண்ண்ண்ட மெளனம்!

முன்பு
நாங்கள் சிறுவயதினராய் இருந்தபோதெல்லாம்
இருட்டிவிட்டால் போதும்
சாப்பிட்டு முடித்ததும்
பாய்,தலகாணிகளோடு
தெருவுக்கு வந்துவிடுவோம்.

எங்கள் வீடு முக்குவீடு.
நான்கு தெருவுகள் சந்திக்கும் இடம்.
பாட்டிகளின் மீட்டிங் அடிக்கடி நடக்கும்.
இரண்டு மூன்று பாய்களை
வரிசையாக விரித்துக் காத்திருப்போம்.
வீட்டு வேலைகளை
முடித்துவிட்டு
கருப்பாயி ஆத்தா
சின்னத்தாயி ஆத்தா
அமராவதி ஆத்தா
என ஒவ்வொருத்தராய்
வருவார்கள்.
பாக்யராஜ்
பாரதிராஜா
மணிரத்னமெல்லாம்
மண்டியிட வேண்டும்.
அவ்வளவு நேர்த்தியாகக்
கதை சொல்லுவார்கள்.
கதைகளென்றால்
கற்பனைக்கதையெல்லாம்
கிடையாது.
விறகுக்குப் போன கதை
புல்லறுக்கப் போன கதை
தண்ணிக்குப் போன கதை
திருவிழாவுக்குப் போன கதை
என எல்லாக்கதைகளுமே
அவர்களது வாழ்க்கை
நிகழ்வுகள்தான்.
அதில்
அங்கங்கே கொஞ்சம்
பிட்டுகளைச் சேர்த்து
புனைவுகளோடு
சொல்வார்கள்.
நகைச்சுவைகளைக்
கேட்டு
வயிறு வலிக்கச் சிரித்ததுமுண்டு.
த்ரில்லிங்கான
பேய்க்கதைகளைக் கேட்டு
பயந்து அழுததுண்டு.
அந்த கதைமாந்தர்களை
கதை நிகழ்வுகளை எண்ணி
கண்களை இறுக்கி மூடி
போர்வையை இழுத்துப்போர்த்தி
பயத்தோடு படுத்த நாட்கள் நிறைய உண்டு.

இன்று
டி.வி. என்னும் குட்டிப்பிசாசு வந்தபிறகு அன்றாட வாழ்வின் பல
அற்புத தருணங்கள்
இல்லாமல் போய்விட்டன.
கதைகளைத் தொலைத்த
கிராமங்களின் நிலை
நம்மைக் கலங்க வைக்கிறது.


விஷயத்திற்கு
வருவோம்!
நம்முன்
தனித்துக்கிடக்கும்
குடும்பங்களில்
என்ன சொல்லி மற்ற உறவுகளை அறிமுகப்படுத்துவது!?

சரி,
நீங்களாவது
சொல்லுங்களேன்..
_சுதேசு

1 comment: