முதல் பக்கம்

Nov 6, 2010

கோவையில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநில மாநாடு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010,01:10 
சூலூர்: "குழந்தைகளுக்கான அறிவியல் மாநில மாநாடு, கோவையில் வரும் டிச.,ல் நடக்கிறது.  மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற குழு இணைந்து, ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன. தமிழ்நாட்டில், "தமிழ்நாடு அறிவியல் இயக்கம்' மாநாட்டு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளது. பள்ளி மாணவர்கள் குழு வாரியாக தங்களின், அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை மாவட்ட, மாநில வாரியாக சமர்ப்பிப்பார்கள். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். வரும் டிச., 26 முதல் 31 வரை 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் நடக்கிறது. "நில வளம்- வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்ற கருப்பொருள் மாநாட் டில் முக்கிய ஆய்வாக எடுத்துக் கொள்ளப் படும்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், வரும் டிச., 3 முதல் 5ம் தேதி வரை அரசூர் கே. பி. ஆர்., பொறியியல் கல்லூரியில் மாநில மாநாடு நடக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் வரவேற்பு குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி மேலாண்மை இயக்குனர் சிகாமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருள்ஸ்ரீ வரவேற்றார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் பாதுஷா பேசியதாவது: நவ.,ல் நடைபெறும் கோவை மாவட்ட மாநாட்டில் 2000 க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். மாநாட்டில் 10,000 மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.  அரசு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி. பி. எஸ். இ., என 1,500 பள்ளிகள் பங்கேற்கின்றன. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 200 ஆய்வுகளில், 30 கட்டுரைகள் தேசிய மாநாட்டுக்கு தேர்வு செய்யப்படும்.  மாநாட்டில், விஞ்ஞானிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சாதனையாளர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழச்சிகள் நடக்கிறது. கணித விளையாட்டுகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், தொலைநோக்கி வழியே இரவு வான் என 9 அரங்குகளில் மாணவர்களுடன் விஞ்ஞானிகள் சந்திப்பு நடக்கிறது.  மேலும், ஆசிரியர்களுக்காக கற்றல் கற்பித்தல் குறித்த அரங்குகள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில், மாவட்டங்களின் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி நடக்கிறது. மாநாடு ஒட்டி இன்ஜி., கலை அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நடைபெறும்.  இவ்வாறு, பாதுஷா பேசினார்.  நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை முனைவர் விக்கிரமன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன், மாவட்ட தலைவர் நடராஜன் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் தனபால் உட்பட  அறிவியல் இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment